Sunday, December 16, 2012



 கடல் படப் பாடல்கள் கேட்டேன். மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம் நல்ல கவிதை வரிகள், நல்ல இசைக்கோர்வையோடு  அருமையான ரஹ்மான் மெலடி டூயட். சிப்பியின் ஒரே முமுமையான முத்து. சித்திரை நிலா குறை சொல்ல முடியாத தந்தையின் தாலாட்டு. நீயில்லையேல் நான் என் செய்வேன் எனத் தொடங்கும் அன்பின் வாசலே எனத் தொடங்கும் பாடல் தொடக்கத்தின் எதிர்பார்ப்பைத் தொடக்கத்தோடே நிறுத்திவிட்டு, கிறிஸ்மஸ் கேரல் ஆகிவிடுகிறது, மகுடி மகுடி.. பாடலில் நீங்கள் கூடவா ரஹ்மான் சார்! என லேசாக சலிக்கத் தொடங்கிய மனசு அடுத்த பாடலில் கிட்டத்தட்ட தலையிலடித்துக் கொண்டது. மனசைத் தொறந்தாயே! எனத் தொடங்கும் அடியே பாடல் எந்த மொழிக்கு அல்லது எந்த மாநிலத்திற்கு அல்லது எந்த நாட்டிற்கு  ரஹ்மான் சார்? கேள்வி எழும்புகிறது. என்ன செய்ய? VTV’S AAROMALE  வை ஒட்டிய ADIYE SONG AMAZING என்று FB, TWITTER தொடங்கி YOUTUBEல் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் வரை, தயவு செய்து நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கும்கி பாடல்கள் கேட்டீர்களா? எல்லாமே ஆஹா ரகம்.  அய்யய்யய்யோ என ஒரு பாடல். AYYAYYYO AMAZING!!! அதுதான் AMAZING. 
சரி! கடல் என்று பெயரிடப்பட்டு, கடல் சார்ந்து எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படத்தில், ஒரு கடல் பாட்டாவது இருக்க வேண்டுமே எனத் தேடினால், இருக்கிறது ரஹ்மான் அவர்களே பாடிய ஏலே கீச்சான் என்ற பாடல். என்ன அது கொங்கனி மொழியில் கோவாவிற்காக இருக்க வேண்டியது. தவறிப் போயோ மறந்து போயோ தமிழ் படத்தில் வைத்து விட்டீர்களா ரஹ்மான் சார்? எல்லாம் கிடக்கட்டும். ஊரே கொண்டாடுவதாகக் கூறப்படும் நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலை நானும் கேட்டேன். நொந்து விட்டேன். இப்படிச் சொல்வதற்காக  மன்னித்து விடுங்கள் திரு. ரெஹ்மான் அவர்களே! இதை நான் ஒரு முறை கேட்டு விட்டுச் சொல்லவில்லை. ஒரு வேளை, கேட்கக் கேட்க பிடிக்கக்கூடும் என ஒரு மாதமாகக் காத்திருந்து வெறுத்துப் போன விரக்தியில் தான் சொல்கிறேன்.

 ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பாடல் கூட இதே உணர்வுக்காக எழுதப்பட்ட, இசைக்கப்பட்ட பாடல்தான். பாடலுக்குத் திரையில் உயிர் கொடுத்தவர் ராதா அவர்கள். படத்தின் பெயரைச் சொல்லாமலே யாவருக்கும் புரித்திருக்கும். முதல் மரியாதைக்குரிய பாடல்தான் அது. அவர் மகள் நடிக்கும் முதல் படத்தின் பாடல் REALLY UPSETTING N DISAPPOINTING. காலையில் ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டேன். இன்று எழுதியே ஆக வேண்டும் என்று அமர்ந்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, இரு பன்பலைகளில், சர சர சாரக் காத்து பாடல் காதுகளை வருடிப் போகிறது. இரண்டுக்கும் ஒரே பாடலாசிரியர்தான். இசையமைப்பாளர்கள் தான் வெவ்வேறு. “ வாகை சூட வா”  இசையமைப்பாளருக்கு உங்கள் அளவுக்கு உலக அனுபவம் இல்லையெனினும்,  உணர்வுகளைத் தொடும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  கும்கி இசையைக் கேட்டீர்களா? அவையெல்லாம் பாமரர்களின் இசை என நீங்கள் கருதுவதாகவதாகவே வைத்துக் கொண்டாலும், இது பாமரர்களைப் பற்றிய, பாமரர்களின் படம் தானே! இல்லையா? இசையால் உலகை கட்டிப்போட்டிருந்த தங்களுக்கு என்னவாயிற்று ரெஹ்மான் SIR?

இந்தப் பாடலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.  எந்த தொடர்ச்சியோ, நிறுத்தங்களோ இல்லாமல், ABRUPT ஆக, VERY VERY DISAPPOINTING MR. REHMAN. குரல் கொடுத்தவரின் ஹாய் என்ற SIGH வேறு கடுப்பேற்றுகிறது. நெய்தல் மட்டுமல்ல! குறிஞ்சி, முல்லை, மருதம் இவை திரிந்த பாலை என எத்திணையைச் சேர்ந்த பெண்ணின் பாடலும் இல்லை இது. 2002ல் இசை வெளியாகி, படமாக வெளிவராத, இளையராஜாவின் காதல் சாதியில் ஒரு பாடல். “ என்ன மறந்தாலும், உன்ன மறக்க மனம் கூடவில்லையே” என்று மஹதிக்கு வாழ்வு கொடுத்த ஒரு பாடல். நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இன்னும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். பிறகு நம் மண்ணிற்கேற்ற மாதிரி இசையமைக்க அமருங்கள். இதில் EGO எதுவும் தேவையில்லை.. ஹாலிவுட், பாலிவுட் தாண்டி, உங்களை உருவாக்கிய, உலகுக்கு உயர்த்திக் காட்டிய தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொஞ்சம் திரும்பி வாருங்கள் PLEASE! PLEASE! PLEASE! IF TAJMAHAL, KARUTHAMMA AND KIZHAKKU SEEMAIYILE COULD BE YOURS, EVEN MORE N MORE CAN BE. WISH YOU ALL THE BEST. WE ARE WAITING FOR THE BETTER.

பாடல்கள் அனைத்தையும் கேட்டு முடித்ததும் ஒன்று மட்டுமே தோன்றுகிறது. மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம்…..இது போதுமே! எனக்கு இது போதுமே எனத் தொடர்கிறது பாடல். ரஹ்மான் சார், இது போதுமே எனக்கு என்று, இந்தப் படத்திற்கென மெனக்கெடத் தவறிவிட்டாரோ? SORRY RAHMAN SIR! WE EXPECTED MORE FROM YOU.

Tuesday, December 11, 2012



கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்-நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர்
அகழி வெட்டினான்.
சொல்விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்.
சுதந்திர மென்றதன்மேற்
கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்.
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சியவன் பெயர்.
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர்.
அவன் பெயர் பாரதி.

மகாகவிக்கு மகோன்னதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, December 9, 2012



இது கண்ணாடியின் 200வது பதிவு. இது இசை சார்ந்ததாக, ஒரு நல்ல கலைஞனைப் பற்றியதாக, நல்ல இசையை வழங்கும் நல்ல மனிதருக்காக அமைந்தது என் மனதிற்கு நிறைவு தருகிறது.

இன்று குழலிசையால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும், அருண்மொழி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. நெப்போலியன் அவர்களின் பிறந்தநாள்.

முறைப்படி இசை ஏதும் கற்றறியாத, இளையராஜாவைக் கேட்டு வளர்ந்த எனக்கும் இசைக்கும் இணைப்புப் பாலமாக எப்பொழுதும் இருந்திருப்பதும், இருந்து கொண்டிருப்பதும் குழலும், வயலினும் என்றால், அந்த குழலோசை என நான் உணர்ந்திருப்பது யாவும் திரு. நெப்போலியன் அவர்களுடையதே ஆகும். குழலும் வயலினும் இல்லாமல் இசைஞானியின் இசை ஏது? அவரிடம் மட்டும் எப்படி  இப்படி குழைந்து, வெள்ளமாகி, அலை அலையாக ஆர்ப்பரிக்கின்றன என வியந்திருக்கிறேன். அந்த குழலுக்குச் சொந்தக்காரர் தாங்கள் என அறிந்தபோது, ஆச்சர்யப் பட்டேன். இருக்கும் இடமே தெரியாமல் மென்மையாக அமர்ந்திருக்கும் இந்த மனிதருக்குள்ளிருந்தா இந்த மயக்கும் இசை வடிவம் பெறுகிறது என வியந்து போனேன். ஆனால், நீ தானா! நீ தானா! எனத் தங்கள் குரலில் திரு. பார்த்திபன் பாடுகையில் உணர்ந்தேன், குழல் மட்டுமல்ல, குரலும் கூட இந்த மனிதருக்கு மாபெரும் வரம்தான்.

  விடியல் முதல் இரவு வரை என் மகிழ்ச்சி, மலர்ச்சி, அயற்சி, அழுத்தம், அனல் கணங்கள் யாவையும் என் மழலை கண தாலாட்டாக இருந்து தணிய வைத்து, தென்றலாக வருடிக் கொடுத்து, என் நாட்களை அழகாக மாற்றியமைக்கும் திறன் குழலுக்குள்ளதை உணர்ந்திருக்கிறேன். நன்றி சகோ. திரு. நெப்போலியன் அவர்களே! முதல் மரியாதையின் அந்த நிலாவத் தான் பாடலை அண்மையில் ஒருநாள் காலையில் கேட்க ஆரம்பித்து, நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்து மயங்கிக் கிடந்தேன், அந்த PRELUDE. AWESOME SIR! அதைப்போலவே! சின்னக் கண்ணன் அழைக்கிறான், ஏரிக்கரைப் பூங்காற்றே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி என இசைஞானியின் MASTERPIECE யாவிலும் நான் தங்களையும் தொடர்பு படுத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஒரு வேளை இந்தப் பாடல்களின் இசைக்கோர்வையில் தாங்கள் பங்கு பெறாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இசைஞானியின் ராஜா ராஜாதான் மேடை நிகழ்ச்சியில், மணிக்கணக்கில், மேற்சொன்ன மற்றும் சொல்லாமல் விட்டுப் போன பாடல்களுடன், எங்களை ஏதோ ஓர் மந்திரத்தால் கட்டிப் போட்டது போல் மயக்கி அமர வைத்திருந்ததில் தங்கள் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் ஐயம் ஏதுமில்லை. THANK YOU SO MUCH SIR. GOD BE WITH YOU ALL THE TIME.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் SIR! தங்கள் குழல் போல், குரல் போல், அருண்மொழி போல், இந்த நாளும், இனி வரும் எல்லா நாட்களும் இறைவனின் நல்லருளுடன் இனிதாக அமைய, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் வாழ்த்துக்கள், தங்களுக்கான ப்ரத்யேகமான ப்ரார்த்தனைகளுடன். MANY MORE HAPPY RETURNS OF THE DAY SIR. WISH YOU THE HAPPIEST, BLESSED AND MOST MEMORABLE BIRTHDAY.

இந்த பதிவை முகநூலில் ஏற்றிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன். அலுவலக இடைவேளையில், மின்னஞ்சலில் இயக்குனர் சகோ. தாமிரா பின்வருமாறு எழுதியிருந்தார். “ நல்ல பதிவு. அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். தவறான பாடல்களை பாடி விடக்கூடாது என பாடுவதை நிறுத்திய மனிதன். எனக்குப் பிடித்த கலைஞன். வாழ்க வளமுடன்”
சகோ. நளினி, நல்ல மனிதர்கள் காட்டுப்பூக்கள் மாதிரி, தேடித் தான் ரசிக்க வேண்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.

அலுவலகத்தில் வழக்கத்தை விடவும் சற்று அதிகம் அனலடித்தாலும், அத்தனையையும் மென் புன்னகையுடன் எதிர்கொண்டேன். புயல் கணங்கள் பழகிவிட்டன.

சகோ. தண்டபாணி அவர்களின் திருமண நாள் வாழ்த்துக்களைப் பூச்செண்டுடன் கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதில், மிகவும் அழகாக நெகிழ்வாக மாறி, வீட்டை நோக்கிய பயணத்தில் நல்ல மகிழ்வான நினைவுகளுடன் இந்த நாள் நிறைவு பெற்றது.  என் கண்ணாடியின் 200வது பதிவு ஒரு நல்ல நாளைப் பற்றியதாக அமைந்ததில் மனமெங்கும் பூத்திருக்கிறது ஒரு பூவனம்..

Tuesday, December 4, 2012

அட்டகத்தி

 ...... “They wear jeans, T-shirts and fancy sunglasses to lure girls from other communities,” he told reporters. A resolution adopted at the meeting cited statistics of broken marriages to claim that inter-caste marriages ended in failure because they were unions born out of caste design and not love.


இரவெல்லாம் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது மழை. இப்பொழுதும். மழை, வெள்ளம், குளிர் என்றவுடன் உள்ளே எங்கிருந்தாவது ஒரு பாடல் எழும்பி விடுகிறது. இன்று ஓடியது , ஒரு அற்புதமான இசை அலையை பல்லவியை நோக்கி அழைத்துச் சென்ற பாடல் “ குருவாயூரப்பா! குருவாயூரப்பா! நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி”, புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திலிருந்து. ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய படமாக இருந்தாலும், படம் முழுவதையும் கீதா என்ற அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாபெரும் நடிகை தன் ஆதிக்கத்தை அசகாயமான நடிப்பால் ஆக்கிரமித்திருந்த அற்புதமான படம். ஆனால் என் சிந்தனை அந்தப் படத்தைப் பற்றியோ, கீதா அவர்களைப் பற்றியோ அல்ல!

 பாடலை ரசித்துச் சுவைத்தவாறு, மழையை ருசித்தவாறு, THE HINDU நாளிதழை எடுத்தேன். எல்லைப் பிரச்சனையைப் பற்றிப் பேச நம் வெளியுறவுத் துறை தூதர் பெய்ஜிங் பயணம், முதல் செய்தி. ஆமாம், உள்நாட்டுக்குள் எல்லை தாண்டி துளி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதைத் தீர்த்து வைக்க நமக்கு வக்கில்லை. அருணாச்சல பிரதேசத்தை தன் நாடு என்று சீனா வரைபடமே போட்டு முடித்தபின், எல்லை பற்றி பேசி, சீனப் பெருங்கோட்டைச் சுவரைப் பார்த்து, அலுப்புதான் வருகிறது. ஆனால் நான் படித்து அதிர்ந்தது அடுத்த செய்தியைப் பார்த்துத்தான்.

ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, ஒன்றும் அறியாத மற்ற உயர்ந்த இன பெண்களை மயக்கி, திருமணம் செய்து கொள்வதே இவர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், தற்காப்பு என்ற பெயரில்  இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பிற குலப் பெண்களை இவர்கள் ஏமாற்றி மணந்து கொள்வதால்தான், நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகமாகி விட்டன. சமுதாயமே கெட்டு சீரழிந்து விட்டது. ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சட்டத்தைத் திருத்தி வலுவற்றதாக்க வேண்டும். இதற்காக தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்து, பிற இன மக்கள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி தர தங்களால் மட்டுமே முடியும் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர். கிட்டத்தட்ட நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறிய தர்மபுரி அவலத்தின் அனல் கூட இன்னும் தணியாத நிலையில், தனலை ஊதிப் பெரிதாக்கி, குளிர் காய்வது, மெத்தப் படித்த, மக்கள் மதிக்கும் ஒரு மனிதருக்கு அழகா? வேதனையாக இருக்கிறது. நாம் குடியிருப்பது மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாட்டிலா? பெரியாரும், வள்ளலாரும், வள்ளுவரும், பூங்குன்றனாரும்,  பாரதியும் படித்து போதித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது? அதிர்ந்து போயிருக்கிறேன்.

எனக்கு சில உண்மைகள் விளங்கவில்லை.
  • இது கி.பி. 2012 தானா?
  • சட்டம் இயற்றிய மேதைகள் முட்டாள்களா?
  • ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் ஆகியவற்றை போடுவதற்கு ஏதேனும் தகுதி தேவைப்படுகிறதா? அவை உயர் வகுப்பினர் அணிவதற்கான உடுப்புகளா? அவ்வாறெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோவனாண்டிகளாக இருக்க மட்டுமே சபிக்கப் பட்டவர்களா? பொருளாதார ரீதியாகவோ கல்வி அறிவு பெற்று கலாசார ரீதியாகவோ மேம்பட்டு நல்ல ஆடை உடுத்தி மகிழ அவர்களுக்கு உரிமையில்லையா? அல்லது இவற்றை அணிபவர்கள் அனைவரும் பொறுக்கிகளா? எனில் இவற்றை அனியும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுமா? இவை ஆயத்த ஆடைகள், அழகூட்டும் ஆடைகளே தவிர அழகான பெண்களை மயக்கி ஓட்டிக் கொண்டு போகும் அதிசய லேகியம் தடவிய ஆடைகளாகத் தெரியவில்லை.
  • இவ்வாறிருக்கையில் ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் பார்த்து ஏமாந்து போகும் அளவிற்கு, பெண்கள் பூஞ்சையானவர்களா? ஏமாளிகளா? பெண்களுக்குச் சொந்த புத்தி கிடையாதா?
  • இத்தனை தீண்டாமை இருக்கும் குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட வேறு இனத்தினர் நுழைய வாய்ப்பே இல்லை எனில், பெண்கள் படிக்கவும் வேலைக்காகவும் வெளியில் செல்லும் இடங்களில் தான் நீங்கள் சொல்வது போல் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன எனில், இனி பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கப் போகிறீர்களா?
  • மண் போல், பொன் போல் பெண்ணும் பூட்டி வைக்க, அலங்கரிக்க, தேவைப்படும் வகையில் பயன்படுத்த, வெறும் போகப் பொருள்தானா?
  • பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அறிவற்றவர்களா?
  • மேற்சொன்ன சாதி மறுப்பு அல்லது கலப்புத் திருமணங்களால். புதிய இரத்த பிரிவு ( BLOOD GROUP) உருவாகும் என எந்த மருத்துவமாவது கூறுகிறதா?
  • இந்த காதல் திருமணங்களால் AIDS போன்ற நோய்கள் வந்து விடும் வாய்ப்போ அல்லது மனிதனைத் தவிர வேறேதும் புதிய ஜந்து உருவாகி மனித குலத்தை வேரறுத்துவிடும் வாய்ப்போ உள்ளதா?
  • காதல் தவறா? எனில் காதலைக் கொண்டாடும் சமுதாயம் தானே நம்முடையது. காதலையும், உடன்போக்கையும்,  களவுத் திருமணத்தையும் கொண்டாடிய இலக்கியங்கள் தாமே நம்முடையவை?
  • ஆண், பெண் தவிர அரவாணிகள் என்ற மூன்றாவது இனத்தையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதையாக திருநங்கைகள் எனப் பெயரும் சூட்டி அழகு பார்த்து, ஓட்டுரிமையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கிய சமுதாயம் அல்லவா இது? தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும், சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் என்றால், மேற்சொன்ன மூன்று பாலினங்கள் தவிர இவர்கள் வேறேதேனும் இனத்தைச் சேர்ந்தவர்களா?
  • எல்லாவற்றுக்கும் கொடி பிடிக்கும் ஊடகங்கள், இத்தகைய சூழ்நிலையில், அட்டகத்தி போன்ற திரைப்படங்களை யதார்த்தம் என்று எவ்வாறு சொல்கின்றன? தலைவர் சொன்னதைத்தானே தாங்கள் படம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்? அப்பட்டமான ஒரு சமூகத்தின் மீதான பழியாகத்தான் அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். என்ன? எந்த ஊர் என்று சொல்ல பயந்து கொண்டு, சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்லி நழுவிவிட்டார் இயக்குனர். எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் எனச் சொல்லவில்லை!
  • அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். மானிடரிலேயே சேர்த்துக் கொள்ளப் படத் தகுதியற்றவர்கள் போல் ஒரு வகுப்பினரை ஓரங்கட்ட முயற்சிப்பது, பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் இல்லையா? இதைத்தடுக்க சட்டத்தில் இடம் கிடையாதா?
  • இல்லையெனில் அப்புறம், இந்த நாடெதற்கு? இதற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதற்கு? இந்த அரசியல் கட்சிகளும் காட்சிகளும் தான் எதற்கு?
  • பிரித்தாளும் கொள்கையைத் தான் தாங்கள் பின்பற்றுகிறீர்கள், எல்லா அரசியல் தலைவர்களையும் போல். உங்களுக்கான தொண்டன் அந்த வகுப்பிலும் இருந்தான் என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள்?
  • சரி! தலித்களைத் தவிர்த்த மற்ற இனத்தவர்களின் கூட்டணி அமைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், என்ன செய்ய முயல்கிறீர்கள்? தீட்டுப் படாமல் இருக்க, தனி மாநிலமோ, நாடோ வாங்கிக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒதுக்கி, ஊருக்கு ஊர் காலனிகளை உருவாக்கியது போல். தனி நாடு கொடுத்தனுப்பி விட்டு, பிற்பட்ட வகுப்புகளில் உயர்ந்த வகுப்பாகிவிடப் போகிறீர்களா? இந்த பிரித்தாளும் எண்ணம் ஏற்படவா இத்தனை படிப்பும், பட்டறிவும்? யோசித்துப் பாருங்கள்! மனிதர்களை மனிதர்களாக முதலில் பாருங்கள். அந்தத் தெளிவைத் தராத கல்வி கேலிக்குரியதே!

Tuesday, November 13, 2012

Deepavali 2012 @ Marutham illam









தீபாவளி வாழ்த்துக்கள்


மாலை மணி ஆறு. விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்குப் புறப்படுகிறேன். வழியெங்கும் கூட்டம். பட்டாசுக் கடைகளிலும், துணிக் கடைகளிலும், பலகாரக் கடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என எங்கெங்கும் கூட்டம். அலுவலகத்தின் அவசரத்தை ஒரு நாள் தள்ளி வைக்க அவகாசம் கிடைத்ததற்கே, அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு என்னைப் போன்ற ஒரு கூட்டம், மனதில் கையில் பையில் இனிப்புடன் வீட்டை நோக்கி.

இன்றைய விடியலை நினைத்துக் கொள்கிறேன். தவில், மிருதங்கம், மேளம், கஞ்சிரா, தப்பு, மேற்கத்திய ட்ரம்ஸ் என அனைத்து விதமான அடிகள் வாங்கியும் அதிர வைக்கும் இசைக்கருவிகளையும் நினைவுபடுத்தியவாறு, அன்மையிலும் தொலைவிலுமாக கேட்கும் பட்டாசு வெடிச் சத்தங்கள் காதைப் பிளந்தவாறு காலையை விடிய வைத்தே விட்டன . சர வெடிகள் தொடர்ச்சியாய் வெடித்து அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்க, என் விடுதியின் பின்புறத்தில், ஒற்றை மிளகாய் வெடி சத்தம் வேறு. எட்டிப் பார்க்கையில், வெட்கத்துடன் சிரித்து ஓடினான் பின்வீட்டு சிறுவன். ஓ! இன்று தீபாவளி!

 வெகு இயல்பாக, என் வலது கரத்தை நோக்கின கண்கள். வெளிர்பழுப்பும் கருப்புமாக மாறாத தழும்பு ஒன்று, தீபாவளி வாழ்த்துக்கள் காஞ்சனா என்றது. பள்ளிப் பிராயத்தில், அதிகாலையில் தலையில் எண்ணெய் வைத்ததும் வைக்காததுமாக, கையில் மத்தாப்புடன், யார் முதலில் செல்வது என்று போட்டியிட்டவாறு, பாதி திறந்திருந்த கதவில் (அப்பொழுதுதானே யாராவது ஒருவர் மட்டும் முதலில் வெளியே போக முடியும்!!), நானும் தம்பியும் வெளியேற நடத்திய யுத்தத்தில் கிடைத்த வீரத்தழும்பு! விம்மலும், விசும்பலும், ஏகப்பட்ட எரிச்சலுடனுமாக கடந்த அந்த தீபாவளித் திருநாளுக்காக இன்று மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த தழும்புதான், என்னை இன்னும் என் பால்யத்துடன் பிணைத்து வைத்திருக்கிறது.  அன்று எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை, ஆனால் சிறப்பான தீபாவளிக் கொண்டாட்டமாகத்தான் இன்றும் நினைவில் நிலைத்திருக்கிறது. நீல நிறத்தில், முக்கால் கை வைத்துத் தைத்திருந்த, அந்த தீபாவளியின் புத்தாடை, இன்றும் நினைவில் மகிழ்ச்சியுடன் நிழலாடுவதற்கு, அன்று அந்த மேல் சட்டையின் கைப்பகுதி படும் போதெல்லாம் எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி ரணகளப்படுத்திய இந்த கம்பி மத்தாப்புக் காயத் தழும்பே காரணம். வடுக்கள் எல்லா சமயங்களிலும் வலியை மட்டுமே நினைவுறுத்துபவையல்ல, வற்றாத பால்ய நதியின் கரம் பிடித்து நம்மோடு அழைத்து வருபவையும் கூட என்பதற்கு, இந்த தழும்பு ஒரு எடுத்துக்காட்டு.

வட இந்தியாவில் பத்து தினங்களுக்குக் குறையாமல் சிறப்பாக கொண்டாடப் பட்டாலும், தென்னிந்தியர்களுக்கு பொங்கல் போன்றதொரு எல்லோரும் கலந்து கொள்ளும் கொண்டாட்டமாக தீபாவளி இருந்ததில்லை. தீமை அழிந்து, நன்மை பெருகும் நாள் என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இது குழந்தைகளின் மகிழ்ச்சி சார்ந்த விழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆகவே தீபாவளி என்றவுடன், பால்ய கால நினவுகள் வந்து கோலாட்டம் போடத் தொடங்கி விடுகின்றன.

தீபாவளி என்றால் நினைவிற்கு வருபவை, பட்டாசு, அதை வெடிக்க விடாமல் சதா தூறிக் கொண்டே இருக்கும் மழை, புத்தாடை, அம்மா செய்யும் முறுக்கு, எள்ளடை, அதிரசம், அப்புறம் முக்கியமாக எண்ணெய் குளியல். எத்தனை பேருக்கு நூரு வயது கடந்த பிறகும் தெம்பாக இருக்கும் தங்கள் பாட்டனார் கையால், தீபாவளியன்று வழிய வழிய, தட தடவென்று தலையில் தாளம் தட்டியவாறு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் கொடுப்பினை கிடைத்திருக்கும் எனத் தெரியவில்லை. எங்களுக்கு வாய்த்திருந்தது. எண்ணெய் தேய்த்து முடித்தவுடன், குளியலறைக்குச் சண்டை. வெளியில் அணையாத விறகடிப்பில் வெந்நீர் ஆவி பறக்க கொதித்துக் கொண்டிருக்கும் காட்சி நினைவில் கொண்டு வரும் ஆவலை, இன்றைய பொத்தான் அழுத்தி சூடேற்றி, குழாயிலும் க்ஷவரிலும் பெற முடியவில்லை. நான், அண்ணன், தம்பி என ஒவ்வொருவராக அம்மாவிடம் சீயக்காய் தேய்த்துக் கொண்டு, முதுகு தேய்த்துக் கொண்டு, அம்மா! கண் எரியுதும்மா! என்றவாறு குளித்து முடிப்போம். நாங்கள் குளியலுக்குக் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, பாட்டிகள் சமையலில் தீவிரமாகி விடுவார்கள். எத்தனை கோடி இட்லி சுட்டாய் அம்மா? என்று தம்பி கிண்டல் செய்வதுண்டு. ஆனால், எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே தயாராகு சமையலாக அது இராது. அந்த காலத்திலெல்லாம், இது போன்ற பண்டிகைக்குத் தான் எங்களுக்கு தோசையே கிடைக்கும் என்றவாறு, அடுப்பில் ஆயம்மா தோசை வார்த்தது வார்த்தவாறே இருப்பார். அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் தோசையும், அடுப்பில் கொதிக்கும் கறிக் குழம்பும், சுடச் சுட எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் வடையின் வாசமும் பசியை அநியாயத்துக்குத் தூண்டி விட்டாலும், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் பட்டாசு வெடிக்கும் ஆட்டத்தில் தீவிரமாகியிருப்போம். மழையில் தரை நனைந்திருக்கும் என்பதால், வீட்டு வாசல், மதில் சுவர், முட்செடியின் கிளைகள் என எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் விதவிதமாக பட்டாசு வெடிப்போம். அதிலும், மிளகாய் வெடி, மூலவெடி, லக்ஷ்மி வெடி, ஊசி சரவெடி, பூண்டு வெங்காய வெடி ஆகியவை வெடிப்பவர்கள் மகாதீரர்களாக எங்களுக்குள்ளாகவே ஒரு நினைப்பும் மிதப்பும். சிறுவர்களுக்கானவை மத்தாப்புகளும், பூச்சட்டிகளும், சங்கு சக்கரங்களும், பாம்பு மாத்திரைகளும். எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியே பிரதானமாக இருந்த நாட்கள் அவை.

 குளியல் முடித்துவிட்டாலும், சாமி கும்பிட அப்பா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் தருணங்களைக் கூட வீணடிக்காமல், பட்டாசு வெடித்து வீர தீர சாகசங்கள் புரிந்த காலமது. ஆமாம்! இன்று போல் நடிகர் நடிகையர் பேட்டிகளுடன் கழிந்து போகும் தொலைக்காட்சித் தொல்லைகளற்ற நிஜமான சிறுவர்களின் கொண்டாட்டத்தை ஏற்றுக் குதூகலித்த தீபாவளிக்கள் அவை.

காலையிலேயே வாழ்த்துச் சொல்ல, பார்த்துப் பேச வரும் பிரமுகர்களைச் சந்தித்து விட்டு, அப்பா வந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட எங்களுக்கு அழைப்பு வருகையில் தான் பசி எட்டிப் பார்க்கும். எல்லா உணவு வகைகளும் சாமி அறையில் அடுக்கி  வைக்கப் பட்டு, தேங்காய், பழம், ஊது வத்தி மணக்க, தாத்தா கற்பூரம் ஏற்றுவார். நாங்கள் பாடும் கந்தர் சக்ஷ்டி கவசமும், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலுமாக பூஜை தீபாவளியை இன்னும் அழகாக்க, சாமி கும்பிட்டு விட்டு. வரிசையாக இலை முன் சாப்பிட அமர்வோம். அம்மா பரிமாற அனுபவித்து உண்ட அந்த நாள் ஆயம்மாவின் தீபாவளி விருந்தினை விஞ்ச இன்று வரை எந்த பெரிய உணவகத்தாலும் முடியவில்லை. நாங்கள் உண்டு முடித்து விட்டாலும் ஆயா, ஆயம்மா, அம்மா மூவரும் சமைத்தவாறும், வீடு தேடி வரும் கிராமத்தினருக்கும் அறிந்த தெரிந்தவர்களுக்கும் உணவளித்தவாறே இருப்பர். தாத்தா ஆசிரியராக வேலை பார்த்ததாலும், அப்பா வங்கி அதிகாரி என்பதாலும், நிறைய பார்வையாளர்கள், விருந்தினர்கள் என வந்தவாறிருக்க, ஓய்வில்லாமல், பெண்மணிகள் மூவரும் பரபரத்துக் கொண்டிருப்பர். இடையில் எங்கள் மூலம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இனிப்பு பலகார வினியோகங்கள் வேறு. மற்ற வீட்டு சிறுவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தவறிருப்பார்கள்.

விருந்து முடிந்து, தாத்தாக்களிடமும், அப்பாவிடமும் காசு பெற்றுக் கொண்டு, மீண்டும் பட்டாசு வெடிக்கலாம் என்றால், மழை பிடித்துக் கொள்ளும். என் சிறு வயது தீபாவளிகள் ஒண்ரு கூட மழை இல்லாமல் கழிந்ததாக எனக்கு நினைவே இல்லை. அற்புதமான நாட்கள் அவை. வெராந்தாவில், காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு, சோதிடம் பார்த்து முடித்து விட்டு தாத்தாவும் வந்து சேர்ந்து கொள்ள, மாலையில் அனைவரும் எங்கள் பூர்வீக கிராமத்திற்கு பேருந்து ஏறுவோம். பெரியப்பாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள் என பட்டாசு வெடித்து, புத்தாடைகள், பலகாரம் பரிமாறிக் கொண்டு மழையையும் தீபாவளியையும் கொண்டாடி முடித்து, பெரியப்பா கையில் கொடுக்கும் ஒரு ரூபாயுடன் அழுகையுடன் தூங்கியவாறு பயணித்து வீடு சேர்கையில் கையில் ஒரு ரூபாய் இருக்காது. பேருந்தில் தொலைந்த அந்த ஒற்றை ரூபாயைப் போலவே தீபாவளியின் பரவசம் இப்பொழுது தொலைந்து விட்டது. மழை இல்லை, மழலையின் மகிழ்ச்சியில்லை, சிறுவர்கள் தொலைக்காட்சியின் திரை போலவே பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் நான் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போலவே, எங்களைப் போலவே, எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் கிடைக்கும் நல்ல தீபாவளி பால்யத்தின் பசுமை நினைவுகளுடன் என. கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மத்தாப்புக்களும், சங்கு சக்கரங்களுமாக என் ஜன்னலுக்கு வெளியே கடக்கின்றன, மின்வெட்டில் இருள் போர்த்திய ஊர்கள். தீபாவளியை வரவேற்க ஈர வாசல்களில் கோலமிட்டுக் கொண்டிருக்கின்றனர் பெண்கள். தீபாவளி களை கட்டத் தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கையின் வேர் கிளைத்துப் பெருகி தன்னை நீட்சித்துக் கொண்டே போகின்றது. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். எல்லோருக்கும் நிச்சயம் விடியும். கரிசல் காடுகளில் வானம் பார்த்துக் கிடப்பவனுக்கும், கடலின் மேல் நீர் பாவி வலை போட்டுக் காத்துக் கொண்டிருப்பவனுக்கும், பாலையில் நீர் தேடிக் கொண்டிருப்பவனுக்கும், நாடற்ற உறவுகளற்ற ஏதிலிகளாக ஏங்கி வலிகளுடன் விழிப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும், எல்லோருக்கும் வாழ்வில் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எல்லோருக்கும் வரும் ஒரு அற்புதம் செய்யும் தீபாவளி. மீண்டும் பிரார்த்துக் கொண்டவாறு வீட்டுக்குள் நுழைகிறேன். அண்ணன் வாங்கி வைத்த பட்டாசுப் பெட்டிகள் வரவேற்கின்றன. நாளை பிறக்கும் நல்லதொரு தீபாவளி. கொண்டாட நேரம் அனைவருக்கும் வரும் என்ற நம்பிக்கையுடன் பையையும் கவலைகளையும் கழட்டி வைத்துவிட்டு, இப்பொழுது உறங்கப் போகிறேன்.

பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Monday, November 5, 2012




ஒரு மழை இரவு முடிந்த அதிகாலைப் பயணம் எப்பொழுதும், அதிகப்படியான அழகுடன் விரிந்து கொண்டே செல்கிறது, கரடுமுரடான கட்டாந்தரையாக இருந்தாலும், கான்க்ரீட் சாலையாக இருந்தாலும், சுத்தமாக, ஈரமாக, பசுமையாக, வெம்மையற்ற அதீத தன்மையுடன், வெயிலற்ற அற்புதமான வெளிச்சத்துடன், அம்மாவின் அன்பைப் போலவே!!!!!! எத்தனை மேடு பள்ளங்கள், எதிர்பாராத வளைவுகள், திருப்பங்கள், மிதிவண்டிகளில் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் பள்ளிச் சிறுமிகள், வே,லைக்கு விரையும் பெண்கள், வாசல் பெருக்கும் பெண்கள்,, தண்ணீர் குடங்கள் சுமந்து செல்லும் பெண்கள், பருப்பு களைந்து கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு தலை பின்னிக் கொண்டிருக்கும் பெண்கள், காய்கறிகளை தலைச் சும்மாடாக தூக்கிக் கொண்டு, கூவிக் கூவி விற்றுச் செல்லும் பெண்கள், கையில் வாளிகளுடன் தயிர் மா என்று வாசல்களில் நிற்கும் பெண்கள், அலைபேசியை ஆராந்து கொண்டிருக்கும் பெண்கள், அம்சமாக அலங்கரித்துக் கொண்டு அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ, கணவனோ, யாரோ ஒருவரின், இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையை அழகுபடுத்தும் பெண்கள், கோலம் போடும் பெண்கள், பூப்பறிக்கும் பெண்கள், பெண்கள், பெண்கள், பெண்கள்!!!! பெண்கள் உயிரூட்டிக் கொண்டிருக்கும் இந்த உலகம் தான் எத்தனை அழகானது!!!


சில அதிகாலைப் பயணங்கள், ஜெய்பூரின் விடியலையும், சென்னை விமான நிலையத்தின் காலைப் பொழுதையும், கொல்கத்தா தொடர்வண்டி நிலையத்தின் முற்பகலையும், சிம்லாவின் நன்பகல் பொழுதையும், தாஜ்மகாலின் பிற்பகல் பொழுதையும், பூனாவின் மாலைப் பொழுதையும், கோவையின் இரவுப் பொழுதையும் நினைவுறுத்துவதுவதின் காரணம் ஏன் என இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாதபொழுதிலும், இந்த பொழுதுகளை பிடித்து அனுபவிக்கிறேன், அவசர அலுவலகத்தின் முதல் கிழமையை நோக்கிய என் பயணத்தில்…..


அலுவலகத்தை நோக்கிய ஒரு அதிகாலைப் பயணம். இந்த சாலையை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பள்ளிக்கு தினமும் என்னை அழைத்துச் சென்ற சாலை. எம் மூதாதையரின் ஊர் நோக்கி பண்டிகைக் காலங்களில் என்னை அழைத்துச் சென்ற சாலை. எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு, செப்பனிடப்படாமல், குண்டும் குழியுமாக இருந்தாலும், இந்த சாலையை எனக்குப் பிடிக்கும். வழியெங்கும் இருமருங்கும் மலர் தூவி வரவேற்க காத்திருக்கும் மகிழ்ச்சி மிகு மாந்தர் போல், கம்பீரமாக நிற்கும் புளியமரங்களுக்கிடையில், கரும் தார் சாலையில் பயணிப்பது, உங்களுக்கே பெருமகிழ்ச்சியையும் பெருமதிப்பையும், பெருமிதத்தையும் கொடுக்கும். குளிரும் குழல்விளக்கின் ஒளியுமாக விழிக்க ஆரம்பித்திருக்கும் சிறு கிராமங்களின் தேனீர் கடைகள், குளிர் காயும் பெரும் சிறார்கள். எல்லாம் இருக்கின்றன/ர், இருக்க வேண்டியவை மட்டும் சாலையோரம் சாய்ந்து கிடக்கின்றன. சாலை அகலப்படுத்துதல் என்ற பெயரில் அண்மைக் காலங்களில் ஆரம்பித்திருந்த அக்கிரமம், நேற்று வெற்றிகரமாக, நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. வழியெங்கும் புயல்களில் கூட சாயாமல். கம்பீரமாக நின்ற மரங்கள், சாய்ந்து கிடக்கும்.சோகம், மனதைப் பிசைகிறது. இதைத் தவிர்க்க முடியாதா? சாலை விரிவாக்கம், மரங்களை அகற்றாமல் சாத்தியப் படாதா?

எவரோ விதைத்த விதைகள்; எவரோ நட்டு வைத்த மரக்கன்றுகள்; எவரோ நீர் வார்த்து, வேலியிட்டு காத்து வளர்த்த மரங்கள். நன்றிக் கடனாய், எத்தனை பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து, எத்தனை மாக்களுக்கும், மக்களுக்கும் நிழல் கொடுத்து, மழை கொணர்ந்த மரங்கள். எத்தனை பேருந்து நிறுத்தங்களாக, கோயில்களாக இருந்த மரங்கள். ஒரு நாள், ஒரே நாளில் வெட்டி வேரோடு சாய்க்கப் பட்டு, வெற்றிடம் விட்டுச் செல்வது மனதில் பாரம் ஏற்றிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. புதிய விதைகள் மரங்களாக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ? கசிகின்றன கண்கள். காத்திருந்து காத்திருந்து என ஜெயச்சந்திரன் உருகிக் கொண்டிருந்த பாடலின் முடிவில், பேருந்தின் இசைப் பெட்டியில், ஒலிக்க ஆரம்பிக்கின்றது, ஆத்துக்குப் பக்கம், ஆத்துக்குப் பக்கம், ஆத்தில் சுரக்கிற ஊத்துக்குப் பக்கம், யாரோ வச்ச தென்ன; இது நம்பி இருக்குது மண்ண. இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா! இதன் தாய் யாரு? தந்தை யாரு? கூறம்மா!! உண்மை சுடுகிறது. எல்லாருக்கும் விடியட்டும்  நற்காலை..