Happy Birthday Ice!
Monday, November 11, 2013
Sunday, October 27, 2013
இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று காஞ்சிபுரத்திற்குப் பயணப்பட்ட என் பாதை, கடந்த ஏழு ஆண்டுகளில் எனக்கு முதன்முதலாகப் புதிதாகத் தோன்றியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக, நான் நாள் தோறும் பார்த்த திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியே புதிதாகத் தோன்றும் போது, இது ஒன்றும் பெரிதில்லைதான் போலும். கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகல், உணவு உறக்கம் எனப் பாராமல் தொடர்ந்து பயணப் பட்டுக் கொண்டிருக்கும், வேலை, பயணம் என ஓடிக் கொண்டே இருக்கும் புதிய வாழ்க்கை முறையின் அயர்வு, இதற்குக் காரணமாக இருக்குமோ? இருக்கலாம்!!!
வந்தவாசியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பேருந்தில் ஏறியபின்னும் திருவிழாவில் தொலைந்தது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. காஞ்சி கொஞ்சமே கொஞ்சம் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. கிருக்ஷ்ணா ஸ்வீட்ஸ், கோவை கணபதி என எனக்குத் தெரிந்து இரண்டு புதிய வரவுகள். பட்டாசுக் கடைகள்,நகைக் கடைகள், துணிக்கடைகள், இனிப்புக் கடைகள், எங்கெங்கும் கூட்டம், வெய்யில் ஊரான வேலூரை விட அதிக வெப்பம் என காஞ்சிபுரம் அழகாகவே இருக்கிறது. வாங்க! வாங்க! என அமோகமாகமாக வரவேற்ற கோவை கணபதியில் " வாசமில்லா மலரிது" என்று எஸ்.பி.பியின் பொற்குரலில் டி.ஆர் இன் அழகான பாடலுடனும் சகல மரியாதை கவனிப்புடனும் இரவு உணவை முடித்து விட்டுக் கிளம்புகையில், எப்பொழுது இந்த உணவகத்தைத் திறந்தீர்கள் என்றேன். இரண்டு மாதமாகின்றது மேடம் என்றார் உணவக உரிமையாளர். இரண்டு மாதங்கள் கழித்து இப்பொழுதுதான் நான் காஞ்சி வருகிறேன் என்றதும், டிபன் நன்றாக இருக்கிறதா என்றார். புன்னகையுடன் வரவேற்று, உபசரித்து, பரிமாறிய சூடான உணவிற்குப் பின் ( சட்னியில் உப்பு சற்றுக் குறைவாக இருந்தது இப்பொழுது நினைவிற்கு வருகிறது. பரவாயில்லை. விருந்தோம்பல் அருமை) நான் என்ன சொல்ல! ambience ம் நன்றாக இருக்கிறது; உணவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய போது, அவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணமுடிந்தது. சாயிக்கான மலர்ச் சரங்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். ஹாஸ்பிட்டல் ரோடும், பழைய ரயில்வே ரோடும் மட்டும் மாறவேயில்லை! சச்சின், சாமிகள், புத்தகங்கள் என என் அறையும்! அம்மாவிடம் செல்லில் பேசுகையில், பின்னணியில் கேட்ட ரயில் சத்தத்தைக் கவனித்துச் சொன்னார். எனக்கு மிகவும் பழக்கப் பட்ட, இரண்டு மாதங்களாகக் கேட்காத பின்னணி. பண்பலையில் இளையராஜா கசிய, கையில் இருந்த புத்தகம் நழுவுவது தெரியாமல் தூங்கிப் போனேன். ஏதோ ஒரு பாடலில் விழித்தெழுகையில் தோன்றியது மாற்றம் மனம் சார்ந்ததுதானே! மனதிலே ஒரு பாட்டு....கேட்டுக் கொண்டே மீண்டும் தூ....ங்கிப் போனேன்!!!
பயணங்கள் முடிவதில்லை.....
Thursday, October 24, 2013
Sunday, August 18, 2013
மழை பெய்து ஓய்ந்த
மாலை ஒன்றின் மடியில்
ஒரு நனைந்த கவிதையின்
வரிகளாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றுப்பெறாததொரு மெளனம் என்
உதடுகளில் மட்டும்- எனக்கு
சற்றும் சம்மதமற்ற
இந்த மெளனத்தை
சன்னமாகவோ சத்தமாகவோ
சண்டையிட்டோ கூட
உடைத்துவிட முடியும்தான்-எனினும்
உடைக்கப் பிடிக்கவில்லை
உடைந்த மனதிற்கு-எதையும்
உரைக்கப் பிடிக்கவில்லை
உறைந்த உள்ளத்திற்கு!
உறைநிலையில் நீரை
உளிகொண்டு உடைக்கலாம்!
உருகிய தண்ணீரை…..
கொப்புளிக்கும் வெந்நீரை…..
மெளனம் பிணி
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்;
மெளனம் வலி
என்பதையும்….
Thursday, August 1, 2013
எவருடனும் பகிர முடியாத
துக்கத்தின் சாரல் என்னை
எரித்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தும்
துடைத்தெறிய முடியாத
வேதனை!
தீவில் இருப்பதும்
தீவாக இருப்பதும்
வெவ்வேறென்பதின் அர்த்தம்
வெம்மையாய்ப் புரிந்தாலும்
வெளிவர முடியாத
வெந்தழல் வேக்காட்டில்!
மாறிய உலகத்தின்
மாற்றம் புரியாமல்
மனம் மட்டும்
வினவிக் கொண்டேயிருக்கிறது
சரியும் தவறும்
வெவ்வேறா! ஒன்றேதானா
என!
என்னைச் சுற்றி
என்னதான் நடக்கிறது?
வாசல் யாது?
வழிதான் யாது?
இதுவும் கடந்து போகுமோ?
இல்லை………..
என்னைக் கவர்ந்து போகுமோ!
இறைவா! என் இறைவா!
Subscribe to:
Posts (Atom)

