Chennai- Ayyayyo - Veyilaa athu? Scorching like anything!!!!!!!!!!!! Semma Hot...
Thursday, March 20, 2014
Wednesday, March 19, 2014
நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!
நாக்கு, உதடுகள், எச்சில், காற்று
நான்கோடும் ஒட்டாமல் நழுவும் பேச்சு
மனசு முழுவதும் மண்டிக் கிடக்கும்
இந்த அடர்ந்த இரவில்
நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!
நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!
கண்கள், இமைகள், தலையணை, போர்வை
எவையுடனும் ஒட்டாமல் உதிரும் உறக்கம்
கனவுகள் தெளித்தவாறு என்னுடன்
கட்டிலில் விழி விரித்துக் கிடக்கும்
இந்த அர்த்த ராத்திரியில்
நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!
பேசாமலும் உறங்காமலும் நான்
பேதலித்துப் போகும் வாய்ப்பு மட்டும்
பிரகாசமாய்த் தெரிகிறது - தூரத்து
பெளர்ணமியுடன் கண்சிமிட்டும் நட்சத்திரங்களில்!
Monday, March 17, 2014
குக்கூ என பெயரிட்டதற்காக thank you Raju Murugan!!!!
கண் பார்வையற்ற இருவரின் காதலுக்கு, குரலால், உணர்வால் மட்டுமே காதலை உணர மற்றும் பகிரக் கூடிய இருவரின் காதல் கதைக்கு, அழகிய கண்களுடைய குயிலின் மொழியைப் பெயராய் சூட்டியிருப்பதற்கு நன்றி! தன் கருத்த தேகத்தை அடர்ந்த இலைகளுக்குள்ளும் கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஒளித்துக் கொண்டு தன் தனித்தன்மையுடனான குரலால் தன் இணைப்பறவையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் குயிலின் மொழியை, இரைச்சலான, எல்லாவற்றையும் கடைவிரித்துப் பார்க்கும் ஒரு உலகில் ஒடுங்கி ஒதுங்கி ஓரமாய் ஆனால் விட்டுக் கொடுக்காத தைரியமான தமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கையைச் சொல்ல ஒரு குறியீடாய் பயன்படுத்தியதற்கு நன்றி! பாரதியைப் படித்த, பாரதியைப் பிடித்த எவருக்கும் குயில் தோப்பையும் குயில் பாட்டையும் பிடிப்பது ஒன்றும் புதிதல்ல, வியப்புக்குரியதும் அல்ல! ஆகவே பாரதிக்காகவும் எனக்காகவும் தங்கள் முதல் படைப்புக்கு குக்கூ என பெயர் சூட்டியதற்கு நன்றி! குக்கூ வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Wednesday, March 12, 2014
எண்ணற்ற நாட்கள்;
ஏதேதோ சுமை;
என் தோள்களின் வலியை
எங்கே இறக்கி விட நான்?
உன்னைத் தான் கேட்கிறேன்
எங்கே இருக்கிறாய்
எல்லோருக்குமான என் இறைவா?
வார்த்தைகள் வற்றிக் கொண்டே இருக்கின்றன;
வாழ்க்கையும் கூட எனத் தோன்றுகிறது.
நீண்ட பாதையின்
நிழலற்ற பயணத்தில்
நல்லது நினைத்தவர்
நடக்க முடியாமல் வதைபட,
தீமை செய்வோரும்
தீயதை நினைப்போரும்
கொண்டாடிக் களித்திருப்பது
எங்ஙனம் சாத்தியம்?
சோதித்தது போதும்;
சோர்ந்துவிட்டேன் பெருமானே!
என் அன்னையே!
என் தந்தையே!
என் குருவே!
எல்லாமான பரம்பொருளே!
என்னை மீட்கும் வழி
யாதென நீயே அறிவாய்!
இரங்குவாய் இறைவா!
Subscribe to:
Posts (Atom)


