Saturday, September 29, 2012
சத்த பொழுதுகளின் உச்சத்திலும்
சந்தடியில்லாமல் கைகுலுக்கிப்
பிரிகிறது
ஒரு அவிழாத மெளனத்தின்
முதல் நொடியின்
கடைசித் துளி!
நட்போடோ ஏதும் இல்லாமலோ
நடைபோடும் நதியுடன்
சலசலத்து அலையாடும்
சருகுகளும் சோழிகளும்
சிற்சில கிளிஞ்சல்களும்
சொல்லிச் சென்ற ரகசியத்தை
சிணுங்கல்கள் கூடச் சிதறாமல்
சேர்த்து வைத்துள்ளன
ஒரு கலையாத மெளனத்தின்
கறை படாத கரைகள்!
சத்தமில்லாமல் செவியோரம்
கூந்தல் வருடிப் போகும்
காற்றின் கால்களேறி பிரபஞ்சத்தின்
மிச்ச ரகசியங்களை ஆராய்கிறது
வீசும் காற்று வழி
பேசிக் கடந்தாலும்
விடியல் ஒன்றிற்காக
வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கும்
ஒரு கடக்காத மெளனத்தின்
கரம் பற்றிய மின்மினி!
பேச்சுக்கள் முடிந்ததொரு
பின்னிரவு முற்றத்தில்
பேசியவற்றை விட
பேசாததைப் பற்றியே
யோசித்துக் களைத்துக்
கிடக்கும்
மனம் சொல்லிக் கொள்கிறது…
பேசாததால் ஓய்ந்து போவதில்லை
மெளனத்தின் ஓசை என்று!!
எதையும் சொல்ல வேண்டுமா
என்ன
எளிதில் உறக்கம் வாராத
எண்ணற்ற இது போன்ற
என் இரவுகளைப் பற்றி?
எழுதிக் கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவும்
எரிந்து கொண்டிருக்கும்
அந்த வெண்ணிலவும்
சொல்லாமல் சொல்லி விடாதா….
என் விழிப்பின் ஒளியில்
தான்
வெண்ணிலவு ஓய்வெடுக்க
ஒளிந்து கொள்கின்றதென்று!!
என் விழிகளின் இமைப்பில்
தான்
விண்மீன்கள் புன்னகைத்துக்
கற்றுக் கொள்கின்றன என்று!!
என் இமைகளின் பிரிவில்
தான்
இரவும் பகலும் சந்தித்துக்
கொள்கின்றன என்று!!
இரவை அழகாக்க ஏதோ
என்னாலான ஒரு சேவை!!!!!
பால பாடம்
எப்படி பார்த்தாலும்
அழகாகவே இருக்கிறது
எந்த கட்டாயத்திற்குள்ளும்
சிக்கிக் கொள்ளாத
சிக்கல்களற்ற சிறு குழந்தைகளின்
உலகம்;
எந்த தருணத்திலும் எப்படி
பார்த்தாலும்
அழகாகவே இருக்கும் அவர்களைப்
போலவே!
கடவுளின் தலைமுடியைக்
கலைத்துப் போவதில்
காற்றுக்கும் கூட சம்மதம்
இருப்பதில்லை என்பதால்
தூக்கத்தில் புரண்டு
விழித்தாலும்
கலைவதில்லை அவர்களின்
தலைமுடி;
கோட்டுவாய் கோடிட்ட இதழோரங்களில்,
கண்களில், கன்னக் கதுப்புகளில்
விரைந்து வந்து ஒட்டிக்
கொண்டு
சிறை பிடிக்கும் சிரிப்புச்
சிதறல்களில்
விடிந்து விடுகின்றது
சுறுசுறுப்பாய்
பிடிவாதம் விடுத்து எந்த
தினமும்!
விழித்தெழுந்ததும் ம்ம்ம்ம்மா……..
எனும் உறக்கப் புள்ளிகளைத்
தாண்டி
எட்டியே பார்ப்பதில்லை
எந்த சோம்பலும்-
எழுந்து கொள்கின்றது
உடன் சூரியனும்;
வடிவற்ற வட்டங்களோ! கட்டங்களோ!
வண்ணத் தெளிப்புக்களோ!
வரைய வரைய வளர்ந்து
விரிந்து கொண்டே போகிறது
எல்லையற்ற எண்ணங்கள்
தாங்கும்
எளிமையான அவர்களின் உலகம்,
கலங்கப்படாத அவர்களின்
கற்பனையிலும்,
கை விரல்கள் கிறுக்கிய
காகிதங்களிலும்;
கிறுக்கல்கள் என்பதும்
காகிதங்கள் என்பதும்
நமக்குத் தானே!
மெதுவாகத்தான் புரிகிறது!!
சிறு சிறு பிணக்குகள்;
ஒரு மிட்டாயில் சரியாகிவிடும்
சண்டை சச்சரவு கணக்குகள்;
கண நேரத்தில் கனிந்து
விடும்
கைப்புச் சுவை காய்கள்;
வாழ்க்கை இத்தனை எளியதா?
வளர்ந்து கொண்டே போகிறது
வியப்பின் கடற்பரப்பு!
மகிழ்ச்சியின் சூட்சுமம்
மன்னிப்பு!
மழலையில் நாம் கற்று
மறந்த
பால பாடம் அரங்கேறுகையில்,
பெருமூச்சு மட்டுமே எழுகிறது,
வன்மம் தொடாத வாழ்வு
ஏன் எல்லா வயதிற்கும்
வாய்க்கவில்லை?
என்ற ஏக்கத்தின் கேள்வியுடன்!!!!!
Thursday, September 20, 2012
Thursday, August 30, 2012
காஞ்சியின் கடைக்கோடிச்
சுவர் வரை
காந்தம் போல் ஒட்டிக்
கொண்டுள்ளது
காற்றில் கரைந்த ஒரு
பெண்ணின்
ஓராண்டு நினைவேந்தல்
சுவரொட்டி!
எதிர்பார்த்தது போலவே
எந்த அரசியல் கட்சியும்
மறந்து விடாமல்
எல்லா சுவர்களிலும்!
மூன்று தமிழர்களின் உயிர்
காத்த
வீரத் தமிழச்சிக்கு வீர
வணக்கங்களாம்!
வீர வணக்கங்கள் இருக்கட்டும்!
இவர்களில் யார் வீரர்கள்
என
வெற்றுச் சிரிப்புதான்
மிஞ்சுகிறது
செங்கொடியின் சிறிய நிழற்படத்தின்
அருகில்
வெட்கமின்றி பெருஞ்சிரிப்புடன்
நிற்கும்
பெருச்சாலிகளின் புகைப்படம்
பார்க்கையில்!
உன் தீக்குளியலை
உடனடியாகக் கண்டித்தவர்களில்
நானும் ஒருத்தி
செங்கொடி!
முத்துக்குமாரோ!
செங்கொடியோ!
ஆண்டுக்கொரு முறை
அக்னிப் பிரவேசம் செய்துதான்
தம் இருப்பை
சமூகத்தின் பால்
தம் பொறுப்பை
நிரூபிக்க வேண்டுமா என்ற
ஆயாசத்துடன் எழுந்த
கேள்வி கனக்க
அதிர்ச்சியையும்
உயிர் தியாகம்
என்ற பெயரில்
நடந்த உன் தீக்குளிப்பின்
மீது
என் எதிர்ப்பையும்
உடனடியாக பதிவு செய்தேன்!
ஆனால்
ஆண்டொன்று கடந்த பின்
தான்
நீ என்ன செய்து விட்டுச்
சென்றாய் என்ற
நிதர்சனம் புரிகிறது
செங்கொடி!
ஆட்சியும் காட்சிகளும்
மாறி விட்டன
மாறாத நிலையில் தொங்கியவாறு
அம்மூவரின் கழுத்துக்
கயிறு!
குற்றச்சாட்டு எதுவாகட்டுமே!
குற்றவாளிகள் யாராகவேனும்
இருக்கட்டுமே?
காலம் கடந்து வழங்கப்படும்
நீதியும் அநீதியே என்பது
நீதிமான்களுக்குத் தெரியாதா
என்ன?
வாலிபத்தையும் வாழ்நாளையும்
வானுயர்ந்த சிறைச்சுவர்களுக்குத்
தின்னக் கொடுத்தவர்களுக்கு,
தம் நீட்டிக்கப்பட்ட
ஆயுள் நாளில்
பூட்டப்பட்ட சிறைக் கதவின்
பின்னிருந்து
புத்தகம் எழுதவும்
ஆயிரம் மதிப்பெண்களுடன்
அரசு பொதுத் தேர்வில்
தேர்ச்சி பெறவும் முடிந்தும்,
முறையிட்டுக் காத்திருந்து
கை விட்ட
குடியரசுத் தலைவரின்
ஆணையையும் தாண்டி
குடிமக்களால் தாம் காப்பாற்றப்பட்டு
விடுவோம்
என்ற கனவுகளுடன் காத்திருக்கும்
மூன்று தண்டனைக் கைதிகளுக்காகக்
கேட்கவில்லை நான்!
மூச்சு விடும் நாட்களையே
முழுதாய் நம்ப முடியாமல்
மூச்சு முட்ட வாழ்ந்து
கொண்டிருக்கும்
மூன்று மனிதர்களுக்காக
சக மனிதருள் ஒருவராய்
சகித்துக் கொண்டு கேட்கிறேன்!
வாழ்வது யாவருக்கும்
பிறப்புரிமை இல்லையா?
அந்த மூவருக்கும்
அவர்களுக்காக உயிர் நீத்த
அந்த ஒருத்திக்கும் கூட!
அன்றும் இன்றும்
அரசியல் தலைவர்கள்
அறவே மாறவே இல்லை!
அவர்கள் அறிக்கைகளும்!
சொத்துக் குவிப்புகளும்;
நீதி மன்ற வழக்குகளும்;
அவைக்குறிப்பில் இடம்பெற
முடியாத
அசிங்கமான பேச்சுக்களும்;
கட்சித் தாவல்களும்-
தொடரும்
காட்சி மாற்றங்களும்;
மாறும் கூட்டணிகளும்
மாறாத ஏமாற்று வாக்குறுதிகளும்
என எதுவுமே
மாறவே இல்லை!
பொய் வாக்கையும்
மொய் பணத்தையும்
வாங்கிக் கொண்டு
வாக்குகளை விற்று விட்டு
வந்தவனின் வீட்டில்
வறுமையும் மாறவே இல்லை!
அரசியலுக்கும்-
அது சார்ந்த
காய் நகர்த்தல்களுக்கும்
அரசியல் வியாதி பிடித்த
அதி மேதாவி பேச்சுப்புலிகள்
மட்டுமே
தகுதி வாய்ந்தவர்கள்!
அடித்தட்டு செங்கொடியோ
அடிமட்ட தொண்டனோ அல்ல!
பணயம் வைக்க
உன் உயிர்
பகடைக் காயா என்ன?
ஏன் யோசிக்கவில்லை செங்கொடி?
என நான் கேட்கப் போவதில்லை!
ஏனெனில் நீ
முற்றுப் புள்ளியில்
தொடங்கிய ஒரு
தொடர் புள்ளி.
உணர்ச்சி வசப்பட்டு
உயிர் தியாகம் செய்ய
நினைக்கும் மூடர்களுக்கு,
உயிர் முக்கியம் மக்களே!
உங்கள் உரிமைகளுக்குப்
போராட
நீங்கள் உயிரோடு இருப்பது
முக்கியம் என
உச்சி மண்டையில் அடித்து
உண்மை புரிய வைத்த
ஊமை ஜனங்களின் பிரதிநிதி.
உனக்காக இப்பொழுது
நான் பேசுகிறேன்!
உடன் பிறப்புக்களே!
உற்றார் உறவினர்களை
உதறி விட்டு
ஊற்றிக் கொடுக்கும்
உற்சாகத் தலைவர் பின்
அணிவகுக்கும் தொண்டர்
பெருமக்களே!
விழித்துக் கொள்ளுங்கள்!
உங்கள் குடும்பத்தை விடுங்கள்!
உங்களுக்காகப் பேசவேனும்
உங்கள் உயிர் முக்கியம்!
முத்துக்குமாரையும்
செங்கொடியையும்
விளம்பரப் பொருட்களாகி
வெகு நாட்களாகி விட்டன!!!
விழித்துக் கொள்ளுங்கள்!
நாளை நமதே!!!
Friday, August 17, 2012
கேட்டதில் பிடித்தது
கேட்டதில் பிடித்தது.
கேளடி கண்மணி திரைப்படத்தில்
இடம்பெறும் “நீ பாதி; நான் பாதி கண்ணே!” என்ற பாடல் சக்கரவாகம் என்ற ராகத்தின் அடிப்படையில்
அமைந்தது. இதே ராகத்தில் உருவான மற்றுமொரு பிரபலமான பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற
“ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” என்ற பாடல். அத்தனை உருக்கமான, கடும் சோகமான
ஒரு பாடல் வந்த ராகத்தில் ஒரு ரொமான்டிக் காதல் மெலடியை எப்படி நினைத்துப் பார்க்க
முடியும்? நினைத்தது மட்டுமல்லாமல், உருவாக்கி அதை வெற்றிபெறவும் செய்திருக்கிறார்
இசை ஞானி இளையராஜா. எவ்வளவு அற்புதமான விக்ஷயம்? இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி
என்னவென்றால், எந்த ஒரு செயலும், நிகழ்வும், கருத்தும் நாம் அணுகும் முறையில் தான்
இருக்கின்றது. எதையும் ஏன் முடியாது என பாசிடிவாக யோசித்து, CHALLENGE ஆக எடுத்துக்
கொள்ளும் மிகப் பெரிய, அரிய, பின்பற்ற வேண்டிய சிறந்த குணம் இருப்பதால் தான், இளையராஜா
அவர்களால், இந்த ராகத்தில், இப்படியொரு பாடலைத் தர முடிந்தது. எனவே எந்த ஒரு செயலும்
நாம் அணுகும் முறையில் தான் இருக்கிறது. இந்தப் பாடலை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்த நல்ல கருத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
THIS IS MR. BALAJI
@ HELLO THAMIZHA @ HELLO FM.
GREAT THOUGHT.
THANKS FOR SHARING MR. BALAJI.
இந்த சிந்தனையை நான்
செவிமடுத்தது, கர்ணன் படம் வெளிவந்து 48 வருடங்கள் கழித்து, அதன் டிஜிட்டல் மறு பதிப்பு
வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆண்டில், வெளி வந்து 22 ஆண்டுகளுக்குப்
பின் கேளடி கண்மணி திரைப்படத்தின் “ நீ பாதி; நான் பாதி கண்ணே!” பாடலை இன்று தான் வெளிவந்த
ஒரு மிகச் சிறந்த மெலடியைப் போல், நான் மெய்மறந்து
ரசித்துக் கொண்டிருக்கும் 17.08.2012 காலையில்.
அருமையான காலை. அருமையான பாடல். அருமையான சிந்தனை. இதை நாமும் பின்பற்றலாமே!!
Subscribe to:
Posts (Atom)








