Friday, July 26, 2013


ஒயாத அலைகள்;
முடியாத பயணங்கள்;
உடையாத சருகுகள்மேல்
ஊமை கொலுசுகள்;
உற்றுக் கேளுங்கள்!
சத்தத்தினிடையில் கேட்பது
சத்தமாக இருக்கலாம்;
சங்கீதமாகவும் இருக்கலாம்;
சில நேரங்களில்
என் மெளனமாகவும்....

காற்று புயல் காற்று;
கல் படும் தருணம்;
கலங்கலாய் அடுத்த நொடி;
கண்ணாடி நான் - எனினும்
காற்றோடு என் பயணம்.
சிதறுண்டு போனாலும்
சில்கள் ஒவ்வொன்றிலும்
நூறாய், ஆயிரமாய்,
லட்சம் கோடிகளாய்
நான் இருந்தேன்!
நான் இருக்கிறேன்!
நான் இருப்பேன்!
சூறாவளிகள் நீள்வதில்லை;
சூழ்ச்சிகள் நிலைப்பதில்லை;
வீழ்ந்தே போனாலும்
மீள்வதே வாழ்க்கை;
மீண்டு வருவேன்!
மீண்டும் எழுவேன்!
நான் கண்ணாடி...
உடைத்தாலும், உடைந்தாலும்!

Wednesday, July 17, 2013



மெளனத்தை மொழிபெயர்ப்பதும்
மெளனத்தைக் கடைப்பிடிப்பதும்
மெளனத்தை மெளனமாக
ஏற்றுக் கொள்வதும்
மெளனத்தை விடவும் 
கடினமானவை என்பதை
மெளனமான பொழுதுகள்
உணர்ந்தே இருக்கின்றன
உறைந்த மெளனத்தை
மெளனமாகச் சுமந்துகொண்டு
மெளனம் கலையாத
மெளன சாட்சியாய்
மெளனச் சாலையில்
மெளனமாய் பயணிக்கும்போதும்!
காற்றால் கடலலையால்
கார்முகிலால் கதிரொளியால்
என்றேனும் மொழிபெயர்க்க
முடிந்திருக்கிறதா என்ன
ஒரு காட்டுப் பூவின் காதலை?

Tuesday, July 16, 2013


சில்லென்ற ஒரு பேச்சு
சில்லிட வைக்கும் ஒரு மெளனம்
ஊஞ்சலாடும் தருணங்களில்
உடன் ஆடிக்கொண்டிருப்பது
தனிமையாக இருக்கலாம்
கனவுகளாக இருக்கலாம்
சில நேரங்களில்

கவிதையாகக் கூட இருக்கலாம்!

விழித்திருந்த இரவெல்லாம்
விடாமல் தொடர்ந்ததொரு
குயிலின் குரல்.
விழித்திருக்கும் இப்போதும்!

இருட்டில் தேட
விருப்பம் இல்லை.
இசைக்கு முகம்
தேவையா என்ன?

அன்பை அன்பென்றுணர்வதற்கு
ஆயிரம் வார்த்தைகள்
தேவையற்றுப் போவது போல்,
குயிலின் குரலுக்கும்
அகராதியின் அவசியம் வீண்!
.
பகலில் பார்த்த
குயில் போல
இருளில் கேட்கும்
குயிலும் பேரழகு
எனும் போது
உறங்காத உள்ளத்துடன்
உரக்க வாதிடுவதை விட,
உடன் வரும் குயிலுடன்

இரவைக் கடப்பது உன்னதம்! 

மின்னும் மின்னல்களில்
எந்தக் கீற்றிலோ
உன் புன்னகை!
கரைபுரளும் வெள்ளத்தில்
எந்தத் துளியிலோ
உன் பெருஞ்சிரிப்பு!
நனைத்த சாரலில்
நான் ஈரமாக உணர்ந்தது…..
மழையாகவும் இருக்கலாம்! 

வானவில்லில் வழுக்காமல்
வண்ணத்துப்பூச்சியின் இறகுகளில் விழிகள்!
மொழியில் விருப்பமில்லை;
மெளனம் விழைகிறது மனம்!

வார்த்தைகள் வஞ்சித்து விடுகையில்
காத்திருப்புகள் அர்த்தமற்றுப் போகின்றன
காணாமல் போனவை கவிதைகளாயினும்;
கண்கள் அறிந்திராத கனவுகளாயினும்!

காரணமற்றுப் போயினும்
காலங்கள் கடந்தோடினும்
காற்றில் நுரைகளாய்
கரைந்துடைந்து போயினும்
காத்திருப்புக்கள் கலைவதில்லை

கரையாடும் கடலலைகளில்!