Friday, September 6, 2013

Sunday, August 18, 2013


மழை பெய்து ஓய்ந்த
மாலை ஒன்றின் மடியில்
ஒரு நனைந்த கவிதையின்
வரிகளாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றுப்பெறாததொரு மெளனம் என்
உதடுகளில் மட்டும்- எனக்கு
சற்றும் சம்மதமற்ற
இந்த மெளனத்தை
சன்னமாகவோ சத்தமாகவோ
சண்டையிட்டோ கூட
உடைத்துவிட முடியும்தான்-எனினும்
உடைக்கப் பிடிக்கவில்லை
உடைந்த மனதிற்கு-எதையும்
உரைக்கப் பிடிக்கவில்லை
உறைந்த உள்ளத்திற்கு!
உறைநிலையில் நீரை
உளிகொண்டு உடைக்கலாம்!
உருகிய தண்ணீரை…..
கொப்புளிக்கும் வெந்நீரை…..
மெளனம் பிணி
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்;
மெளனம் வலி

என்பதையும்….

Thursday, August 1, 2013

எவருடனும் பகிர முடியாத
துக்கத்தின் சாரல் என்னை
எரித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும்
துடைத்தெறிய முடியாத வேதனை!

தீவில் இருப்பதும்
தீவாக இருப்பதும்
வெவ்வேறென்பதின் அர்த்தம்
வெம்மையாய்ப் புரிந்தாலும்
வெளிவர முடியாத
வெந்தழல் வேக்காட்டில்!

மாறிய உலகத்தின்
மாற்றம் புரியாமல்
மனம் மட்டும்
வினவிக் கொண்டேயிருக்கிறது
சரியும் தவறும்
வெவ்வேறா! ஒன்றேதானா என!

என்னைச் சுற்றி
என்னதான் நடக்கிறது?
வாசல் யாது?
வழிதான் யாது?
இதுவும் கடந்து போகுமோ?
இல்லை………..
என்னைக் கவர்ந்து போகுமோ!

இறைவா! என் இறைவா!

Friday, July 26, 2013


ஒயாத அலைகள்;
முடியாத பயணங்கள்;
உடையாத சருகுகள்மேல்
ஊமை கொலுசுகள்;
உற்றுக் கேளுங்கள்!
சத்தத்தினிடையில் கேட்பது
சத்தமாக இருக்கலாம்;
சங்கீதமாகவும் இருக்கலாம்;
சில நேரங்களில்
என் மெளனமாகவும்....

காற்று புயல் காற்று;
கல் படும் தருணம்;
கலங்கலாய் அடுத்த நொடி;
கண்ணாடி நான் - எனினும்
காற்றோடு என் பயணம்.
சிதறுண்டு போனாலும்
சில்கள் ஒவ்வொன்றிலும்
நூறாய், ஆயிரமாய்,
லட்சம் கோடிகளாய்
நான் இருந்தேன்!
நான் இருக்கிறேன்!
நான் இருப்பேன்!
சூறாவளிகள் நீள்வதில்லை;
சூழ்ச்சிகள் நிலைப்பதில்லை;
வீழ்ந்தே போனாலும்
மீள்வதே வாழ்க்கை;
மீண்டு வருவேன்!
மீண்டும் எழுவேன்!
நான் கண்ணாடி...
உடைத்தாலும், உடைந்தாலும்!

Wednesday, July 17, 2013



மெளனத்தை மொழிபெயர்ப்பதும்
மெளனத்தைக் கடைப்பிடிப்பதும்
மெளனத்தை மெளனமாக
ஏற்றுக் கொள்வதும்
மெளனத்தை விடவும் 
கடினமானவை என்பதை
மெளனமான பொழுதுகள்
உணர்ந்தே இருக்கின்றன
உறைந்த மெளனத்தை
மெளனமாகச் சுமந்துகொண்டு
மெளனம் கலையாத
மெளன சாட்சியாய்
மெளனச் சாலையில்
மெளனமாய் பயணிக்கும்போதும்!
காற்றால் கடலலையால்
கார்முகிலால் கதிரொளியால்
என்றேனும் மொழிபெயர்க்க
முடிந்திருக்கிறதா என்ன
ஒரு காட்டுப் பூவின் காதலை?

Tuesday, July 16, 2013


சில்லென்ற ஒரு பேச்சு
சில்லிட வைக்கும் ஒரு மெளனம்
ஊஞ்சலாடும் தருணங்களில்
உடன் ஆடிக்கொண்டிருப்பது
தனிமையாக இருக்கலாம்
கனவுகளாக இருக்கலாம்
சில நேரங்களில்

கவிதையாகக் கூட இருக்கலாம்!