Tuesday, April 24, 2018


Happy birthday Sweet heart!
God bless you!
























Love you
Love you
Love you
Always...

Tuesday, April 10, 2018


எளியோர் வாட பொறுப்பதில்லை சூரியன்;
வறியோர் வாட பொறுப்பதில்லை வான்மழை;
யாவும் சரி என்பதில் உண்மையில்லை எனில்
யாவும் தவறென்பதிலும் உண்மையில்லை;
தெவிட்டத் தெவிட்ட தேன் சுவைக்க வைக்கும் வாழ்க்கைதான் மறு நாள்,
வலிக்க வலிக்க ஊசி குத்தி மருந்தினை ஏற்றுகின்றது!

அதோ சுற்றிச் சுழன்றோடிக் கொண்டிருக்கும் பேய்க் காற்றின் நடுவே
வெறும் காய்ந்த சருகுகளும் காகிதங்களுமே இருக்கின்றன;
காண்கின்ற என் கண்களில் கூட அல்ல,
மனதில் ஆடிக் கொண்டிருக்கிறது பேய்!

மனசு எப்படி பார்க்கிறதோ,
அவ்வளவு தான்யா வாழ்க்கையும்.
போலாம் போன்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்!
போலாம் ரைட்!

Thursday, March 15, 2018

I'm almost breaking down.
I don't want to.
I don't want to.

Sunday, February 4, 2018


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீயாம்!
பற்றி எரியாதா என்ன?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என ஈசனையே எதிர்கொண்ட சங்கத் தமிழ் வளர்த்த மதுரையாயிற்றே! பற்றி எரியாதா என்ன?
யானோ அரசன், யானே கள்வன் என குற்றம் செய்த கோமகனைக் கேள்வி கேட்டு, ஒற்றை சாபத்தில் மாநகரையே எரித்த கண்ணகி வாழ்ந்த மதுரை ஆயிற்றே!
பற்றி எரியாதா என்ன?

தமிழ்த்தாய்க்கு மரியாதை தர மறுத்தது மட்டுமல்லாது, அது எங்கள் மரபு கிடையாது என்று மார்தட்டி பறைசாற்றும் மடாதிபதிகளின் முன் மண்டியிட்டு கிடப்பீர்கள் எனில், திரிபுரம் எரித்தவள் ஆட்சி செய்யும் மதுரை பற்றி எரிந்து தன் கோபத்தைக் காட்டாதிருந்திருந்தால் தான் வியப்பு!
பற்றி எரியத்தானே செய்யும்!

தமிழ்நாடு இல்லம் என்ற பெயரில் கை வைத்த உடனே நெற்றிக்கண் திறந்து பற்றி எரிந்தது பாருங்கள் மதுரை! ஹைலைட்டே அதுதான்.

ஆகமம் பேசும் ஆதீனங்களுக்கும், பிஜேபி அட்ராசிட்டி வகையறாக்களுக்கும்  நாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதென, எரிந்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது தமிழ் வளர்த்த மதுரை!
அது பாரதி சொன்ன தமிழின் அக்னிக்குஞ்சு!
நீங்கள் பொந்தில் வைத்து தமிழ் இருந்த இடத்தை இல்லாமல் ஆக்கக் கூட நினைக்கலாம் தான்.

ஆனால்,

ஹா!!!, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தமிழ்!
அதுதான் தமிழ்!

ஆகம விதி மீறலால் மதுரை எரியவில்லையடா மூடர்களே!

தமிழுக்கு ஒரு இழுக்கெனில், தமிழ் மண்ணிற்கு ஒரு களங்கமெனில், தமிழ் நாட்டிற்கு ஒரு கேடு விளைவிக்க யாரேனும் ஒருவர் நினைத்தால் கூட, என்ன நிகழும் என மதுரை கோடிட்டுக் காட்டி எச்சரித்திருக்கிறது.
அவ்வளவுதான்!

யுகம் யுகமாக மதுரை எரிந்தது நெற்றிக்கண்ணாலோ, கண்ணகியின் கண்ணீராலோ அல்ல! சத்தியம் தவறாத தமிழின் வலிமையால்!!!

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!!!!

#தமிழ்டா

Saturday, January 6, 2018

கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நன்றே தொடங்கியிருக்கிறது 2018.

மத்திய மாநில அரசுகளின் முக்கிய தலைமை அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள், வங்கிகளின் பொது மேலாளர்கள், அனைத்து மாவட்ட திட்ட இயக்குனர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குனர்கள் மற்றும் வங்கியாளர்கள், நபார்டு தலைமை அதிகாரிகள் என சான்றோர்கள் நிறைந்த அரங்கில், பாரதியின் “ கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற மந்திர வாக்கியத்துடன், என் இருப்பை இந்த உலகத்திற்கு உறுதியுடன் உரக்கச் சொல்லி இந்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

நேற்று சென்னையில் நடைபெற்ற, ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனங்களுக்கான (Rural Self Employment Training Institutes –RSETIs) மாநில அளவிலான முதல் கூட்டத்தில் , இந்தியன் வங்கி சார்பாகவும், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள் சார்பாகவும்,  இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம், திருவண்ணாமலையின் இயக்குனர் என்ற முறையில், அந்த மாபெரும் சபையில் பேசக் கிடைத்த வாய்ப்பை, நான் அழுத்தமாய் நம்பும், என்னை வழி நடத்தும் பாரதியின் வைர வார்த்தைகள் மூலம் என்னை அடையாளப் படுத்திக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!!!

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற காலத்தை வென்ற கவிஞரின் வரிகள் நனவாகி கண்முன் நிகழ்கையில், "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற மகாகவியின் வார்த்தைகள் மனதிற்குள் எழுந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“ ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளையே என் டைரியின் முதல் வரியாய் நான் எப்பொழுதும் எழுதுகிறேன். என் கனவு மட்டுமல்ல, இங்குள்ள அனைவரின் கனவும் மெய்ப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவுமாக இருக்கும். அவை யாவும் நிச்சயம் மெய்ப்படும் என்று நான் முழுமையாய் நம்புகிறேன். அந்த நம்பிக்கையையே இந்த உலகத்தினர் அனைவருக்குமான என் செய்தியாக  நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறுகிறேன். இங்கு மட்டுமல்ல. வாழ்க்கையை ஒரு பெரிய கேள்விக்குறியோடு எதிர்கொண்டு, எங்கள் பயிற்சி மையத்துக்கு வரும் அனைவருக்கும், இந்த நல்வார்த்தைகளையும். நம்பிக்கையையுமே நான் எப்போழுதும் ஆழமாக தீர்க்கமாக அளித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை சாதனை மனிதர்களாக மாற்றும் ஆற்றல் இந்த மந்திரச் சொற்களுக்கு உள்ளது. அது சாத்தியப் பட்டுக் கொண்டும் இருக்கிறது.
இந்த நம்பிக்கை வரிகள் மட்டுமே அவர்கள் விரும்பும் மற்றும் இன்றைய உலகிற்குத் தேவைப்படும்  மாற்றத்தைக் கொண்டு வரும் என நான் அழுத்தமாய் நம்புகிறேன்” என்று அரங்கு நிறைந்த பலத்த கரவொலிக்கிடையே பதிவிட்டு இந்த ஆண்டை ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சியும் திருப்தியும்.

 இந்தக் கரவொலிகளை, எனக்குள் கனவுகளை விதைத்த, எனக்குக் கனவு காண கற்றுக் கொடுத்த, என் கனவுகளைத் தன் கண்களுக்குள் தாங்குகின்ற, அவற்றை மெய்ப்படுத்த எப்பொழுதும் எல்லா விதத்திலும் பாடுபடுகின்ற, என்னையே தன் கனவாகக் கொண்டிருக்கின்ற என் அன்பிற்குரிய அப்பாவிற்கு உரித்தாக்குகிறேன். Thank You Pa.

கனவு மெய்ப்பட வேண்டும்
இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்!

Sunday, October 22, 2017

இன்னும் எத்தனை நாட்கள்
என்னை எழுதாமலே கடந்து போகப் போகிறாய்?
எனும் கவிதையின் குரல்
இப்போதும் கேட்கிறது ஈன ஸ்வரத்தில்.
எழுதக் கூடாதென்றில்லை!
வலிந்து வார்த்தைகளை வளைத்துப் போடுவதில்
எனக்கு உடன்பாடில்லை என்கிறேன் வலியுடன்.
காற்றின் பாதையில் கைத்துடுப்புடன்
கடந்து போகும்போதெல்லாம் ஒரு
காட்டாறு எனக்காகக் காத்திருப்பதை,
கடமையென உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது அறிவு!
கவிதைகளைக் காக்க வைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை!
ஆனாலும்
ஆற்றுப் படுகையை கண்களால் அளந்தவாறு கடந்து போகும்
ஒரு பசியற்ற பரிசல்காரன் போல் காற்றோடு கவிதைகளைக் கரையவிட்டு விட்டு, கடந்து போய்க் கொண்டிருக்கும் மனதிடம் நான் மல்லுக்கட்டவும் தயாராக இல்லை.
மண்டியிடவும் தயாராக இல்லை!
கனவுகளின் இழைகளுக்குள் தோன்றி
கனவுகளுக்குள்ளாகவே நெசவாகி
கனவுகளோடே உறங்கிப் போகும்
கவிதைகளை
யாரால் என்ன செய்ய முடிகிறது?
உள்ளுக்குள் கவிதைகள்
வரி வரியாய்
வாசனை வார்த்தைகளாய்
சரம் சரமாய்
இன்னும் உயிர்ப்புடன்
இடம் வலமாய்
உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.
கட்டாயம் எழுதுவேன்.
கட்டாயம்!
ஆனால் அதற்காகக் கொஞ்சமோ நிறையவோ
 காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.
காத்திருக்கிறேன்.
கடிகார முட்களுக்குக் காலத்தின் அளவுகளைக் கற்றுக் கொடுப்பது போல்தான் அது!

Sunday, October 1, 2017

ஏதோ ஒன்றை சொல்லாமல் தான்
இவ்வாறாக தினம் உறங்கப் போகின்றேன்
சில நாட்களாய்!