Saturday, December 19, 2015



மார்கழி நாள் 3

மங்கல மாவிலைத் தோரணங்கள்,
மணம் வீசும் மஞ்சள் மலர்ச்சரங்கள்,
மஞ்சள் பூசி மஞ்சள் உடுத்தி
மாக்கோலமிட்டு மஞ்சள் பூவைத்து
மங்கலம் நிறைந்ததென பாடி வரும்
மங்கையர்கள் எல்லாம் உன் வாசலில்!
இன்னுமா கண்ணுறக்கம் கலைப்பாய் இல்லை
என் கண்ணா!
திங்கள் வருகுது காண்!
தீஞ்சுவை நிறைந்தது காண்!
கண்கள் திறந்தருள்வாய்!
என் கண்ணா!
கண்கள் திறந்தருள்வாய்!


என் பாவை # 3

Friday, December 18, 2015



மார்கழி 2

வாசல் பூத்தது காண்!
வாச மலர் பூத்தது காண்!
நேசம் பூத்தது காண்!
நெஞ்சமும் பூத்தது காண்!
வாசமும் நேசமுமாய் உன்
வாசல் நிறை கோலம் காண்!
வாசனே! வரமருள்வாய்!
வண்ண மலர் கண் திறவாய்!!
என் ஈசனே!
எழுந்தருள்வாய்!
எனை எழுந்தாட்கொள்வாய்!


என் பாவை # 2

Thursday, December 17, 2015



பொழுது புலர்கின்றது!
பூவினங்கள் மலர்கின்றன!
மார்கழி பிறந்தது காண்!
மாலே! மணிவண்ணா!
பனியோடு புல்லினமும்
கனியோடு புள்ளினமும்
துணையாகத் தோழியரும்
உனைக் காண வாசல் வந்தோம்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
தூயனே!
துயிலெழுவாய்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
மாயனே!
மலர்ந்தெழுவாய்!!

இன்று மார்கழி முதல் நாள்!
இது என் பாவை # 1!

Thursday, October 15, 2015


வாய்ப்பேச்சு மறுக்கப்பட்டவர்களின்
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கையை உங்களால்
எங்ஙனம் புரிந்து கொள்ள இயலும்!

கற்களால் அடித்துக் கொல்லப்படுபவர்கள்
கள்வர்களாக்கப் படுவதும்,
மானபங்கப்படுத்தப் படுபவர்கள்
மலினப்பட்டுப் போவதும்
இந்த தேசத்தில் மட்டுமல்ல;
எந்த தேசத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

அன்னிய மண்ணில்
அகதிகளாக இருப்பதற்கும்,
தன் மண்ணிலேயே
தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கும்
என்ன பெரிய வேற்றுமை
இருந்து விட முடியும்?
உங்கள் பழுப்பேறிய
பதிவேடுகளில் வேண்டுமானால்
வெவ்வேறாய் பதியப்பட்டிருக்கலாம்!
தூர்வாரப்படாத உங்கள்
துருப்பிடித்த மனங்களுக்கு
பெரிதாய் என்ன
புரிந்து விடப் போகிறது!
அடக்குமுறையின் வேதனையை
அனுபவித்தவர்களுக்குத்தான் அதன்
அக்னிப்பிரவேச அனுபவம் புரியும்!

நிர்வாணப் படுத்தப்பட்டவர்களும்
நிர்கதியாக நின்றவர்களும்
நித்தம் நிறம் மாறும்
ஊடகங்களீன் கண்களில்
ஒருநாள் ஊறுகாயாகிவிட்டு
மறுநாள் நாடகமாக்கப்படுவது
எத்தனை கொடுமை?
இந்த தேசம்
நன்றாக இருக்கட்டும்!

மானம் காப்பது
மனிதனின் கலாசாரம்!
மனைவியை தீக்குளிக்க வைப்பது
மன்னனின் கலாசாரம்!
வாழும் வாய்ப்பை
வழுநெறியின் பெயரால்
தன் மனையிடமிருந்தே
தட்டிப் பறித்தவனின்
நாட்டுப் பிரஜைகள் தானே!
கணவனால் கூட ஆடைகள்
களையப்பட்டு நடுத்தெருவில்
அம்மணமாய் நிற்க வைக்கப்பட்டிருக்கலாம்!
சாத்தியம் தான்!
அட! சாத்தியம் தானே!

உங்கள் மனசாட்சியை ஒரு முறை
ஒரே ஒரு முறை
கேட்டுப் பாருங்கள்!
அந்த அவமானத்தின் வலியை
அங்குலம் கூட உங்களால்
அனுபவிக்க முடியுமா என்று?

தன்மானமுள்ள எந்த மனிதனுக்கும்
தன் ஆடை களைந்து
போராடும் நிலைக்கு
தள்ளப்படும் தருணங்கள்
அமிலக் குளியல்!
அதை நீங்கள்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
அசிங்கப் படுத்தாதீர்கள்!
அவர்கள் ஏற்கனவே
அசிங்கப்பட்டுதான் நிற்கிறார்கள்!

பால் வேற்றுமை தொடங்கி
இன வேற்றுமை வரை
தாழ்த்தப்பட்டவர்களின் வலியை,
வாழ்க்கையின் விளிம்புநிலைக்கு
தள்ளப்பட்டவர்களின் அவமானங்களை
சிற்றூர்களிலும் பெருநகரங்களிலும்
மாவட்டம், மாநிலம் என விரிந்து
நாடுகள் தோறும் இந்த
மண்ணின் மீது அடக்குமுறையால்
தாழ்த்தப்பட்டுக் கொண்டே
இருப்பவர்களின் வேதனையை,
எக்காலமும் உங்களால்
எதிர்கொள்ளவே முடியாது!

பெண்ணின் சாபம் மட்டுமல்ல!
இந்த
மண்ணின் மீது தாழ்த்தப்பட்ட
எந்த மனிதனின் சாபத்திலும்
விழுந்து விடாதீர்கள்!
அது யுகங்கள் கடந்து
அவமானத்தின், புறக்கணிப்பின்
அனலில் தகித்துக் கொண்டிருக்கிறது!
அகிலம் தாங்காது!
வேண்டுமானால்,
உங்கள் கலாசாரத்தை
உறைக்குள் உறங்க
அனுப்பி விட்டு
அர்த்தமற்ற சம்பிரதாயங்களை
பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்!
உலகம் நித்திய சமாதானத்துடன்
சமதர்மத்துடன், சகிப்புத்தன்மையுடன் இருப்பதாய்
உங்களை நீங்களே
நம்பவைத்துக் கொள்ளுங்கள்!

ஏனெனில்
உண்மை வேறு!
இங்கு
உண்மை வேறு!

நெஞ்சு பொறுக்குதில்லை!


Wednesday, September 30, 2015


என் முதல் மழைக் கவிதையின் ஈரம்
இன்னும் என் விரல்களில்!
என் முதல் மழைக் கனவின் சாரம்
இன்னும் என் விழிகளில்!
என் முதல் மழைக் குயிலின் குரல்
இன்னும் என் செவிகளில்!
என் முதல் மழை நனைவிற்குள்
இன்னும் மூழ்கிக் கிடக்கிறேன்!
இப்போதைய என் உலகம், உயரம்,
இன்னும் உடனிருப்பவையை எல்லாம் மறந்து
எப்போதாவது வந்து போகும் மழைக்காக
எப்போதும் காத்திருக்கிறது இந்த மனது!
என் முதல் மழைக்கு முன் பறந்த தும்பிகளுடனும்
அன்றைய மாலையில் பறந்து கடந்த ஈசல்களுடனும்
இன்னும் பறந்து கொண்டே இருக்கிறாள்
தன்னை மழைக்குக் கொடுத்து
தானே மழையாகி மழை இரவிற்குள்
வின்மீன் தேடிப்போன ஒரு
சின்னஞ்சிறுமி!!!!
-நான் காஞ்சனா.


Saturday, September 26, 2015


எங்கோ உறங்கிக் கொண்டிருக்கும்
எனக்கான கவிதையை யாரேனும்
எழுப்பி விடாதீர்கள்!
கனவுகளுக்கு வலிக்கப் போகிறது!

எங்கோ மோனத்தில் உறைந்திருக்கும்
எனக்கான கவிதையின் மீது யாரேனும்
தண்ணீர் தெளித்து விடாதீர்கள்!
தவம் கலைந்து விடப் போகிறது!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
உடன் இருந்தது இப்போது
ஊடல் கொண்டிருக்கிறது!
ஒளிர்ந்து கொண்டிருந்தது இப்போது
ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது!
ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது;
ஓடி விடவில்லை என்பதை
நான் உணர்ந்தே இருக்கிறேன்!
எனக்கான குயில்மொழி போல்
எனக்கான மழைத்துளி போல்
என் கவிதை எப்போதும்
என்னுள்ளே இருக்கிறது!
ஓய்வெடுக்கட்டுமே! தவறென்ன!
காத்திருக்கிறேன்!

என்றேனும் ஓர் நாள் நான்
எனக்கான கவிதையை எழுதிக் கொள்கிறேன்!
என்றைக்கு என் தமிழுக்கு தலைவலிக்குமோ?
என்றைக்கு என் கவிதைக்கு கால்வலிக்குமோ?
ஓய்வெடுத்து ஓய்ந்தபின்
என்றொரு ஓய்வெடுக்கும் தருணத்திற்கென
என்னை என் கவிதை தேடுமோ,
என்றதன் தவம் கலைத்து தன்
கண் திறந்து பார்க்குமோ?
அன்றும் என் மைக்குப்பி
அதற்கெனக் காத்திருக்கும்
அழகான வைர வரிகளுடன்!
வைரம் பாய்ந்த வரிகளுடன்!
எவர்க்கும் கவலை வேண்டாம்!!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
வரும்போது வரட்டுமே!
எங்ஙனமேனும் அன்றொரு கவிதையை
எனக்கென எழுதிக் கொள்கிறேன்!
அதுவரை எனக்கெனவும் காத்திரு
என் தமிழே!
என் அமுதே!

எனக்கெனவும் காத்திரு!

Friday, September 11, 2015


என்னைப் போல் அவனுக்கும்
கவிதை பிடித்திருந்தது!
கண்ணனைப் பிடித்திருந்தது!
குயில் பாட்டும்
குழலோசையும்
குரங்கையும் கூடப் பிடித்திருந்தது!
தமிழ் பிடித்திருந்தது;
தன்மானம் பிடித்திருந்தது;
இடைமறிக்கும் பால், மதம்
இனம் உடைத்தெறியும்
சமநிலை பிடித்திருந்தது!
ஏகாந்தம் பிடித்திருந்தது;
பேரமைதியையும் பேரிரைச்சலையும்
கூட்டுச் சேர்த்து ஆனந்தக்
கூத்தாடப் பிடித்திருந்தது!

விடியல் பிடித்திருந்தது;
விடுதலை பிடித்திருந்தது;
பெருஞ்சிறகு விரிக்கும்
நெடுந்தொலைவு பயணங்களையும்;
சிறு காயமெனத் துடைத்தெறியும்
நெருஞ்சி முள் நிமிடங்களையும்
கடும் கண்டனங்களையும்
கடின காலங்களையும்
எதிர்கொள்ளும் துணிவையும்;
எல்லையில்லா பேரன்பையும்
எப்போதும் பிடித்திருந்தது!
எல்லோரையும் எல்லாவற்றையும்
எப்போதும் நேசிக்கப் பிடித்திருந்தது!
அதனாலேயே அவனை
அவனாகவே எல்லோருக்கும்
அவ்வளவு பிடித்திருந்தது!
அவனுக்குப் பிறகும்
அளவு கடந்த
அன்புடன் அவனை
அப்படியே பிடித்திருக்கிறது!

இத்தனைக்கும் காரணம்
ஒரு வேளை
அவன் என்னைப் போல்
இருந்ததனாலோ என
இருமாப்புக் கொள்ளத்
தோன்றுகிறது!
இல்லை! இல்லை!
நான் அவனைப்போல்
இருப்பதும் கூட
அவனைப் பற்றிய
இத்தனை புரிதலுக்கும்
காரணமாக இருக்கக் கூடும்!

உன்னைப் போல்
எவரும் உண்டோ?
பாரதி!
என்னைப் போல்
ஒருவனடா நீ!!!!!

பாரதியார் நினைவு நாள்
இன்று!
Kanavu Mei pada Vendum!!!!
Long Live your thoughts, Poems n’ your Dreams!
Remembering National Poet Subramaniya Bharathi!!!

11.12.1882- 09.11.1921