Saturday, September 26, 2015


எங்கோ உறங்கிக் கொண்டிருக்கும்
எனக்கான கவிதையை யாரேனும்
எழுப்பி விடாதீர்கள்!
கனவுகளுக்கு வலிக்கப் போகிறது!

எங்கோ மோனத்தில் உறைந்திருக்கும்
எனக்கான கவிதையின் மீது யாரேனும்
தண்ணீர் தெளித்து விடாதீர்கள்!
தவம் கலைந்து விடப் போகிறது!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
உடன் இருந்தது இப்போது
ஊடல் கொண்டிருக்கிறது!
ஒளிர்ந்து கொண்டிருந்தது இப்போது
ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கிறது!
ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது;
ஓடி விடவில்லை என்பதை
நான் உணர்ந்தே இருக்கிறேன்!
எனக்கான குயில்மொழி போல்
எனக்கான மழைத்துளி போல்
என் கவிதை எப்போதும்
என்னுள்ளே இருக்கிறது!
ஓய்வெடுக்கட்டுமே! தவறென்ன!
காத்திருக்கிறேன்!

என்றேனும் ஓர் நாள் நான்
எனக்கான கவிதையை எழுதிக் கொள்கிறேன்!
என்றைக்கு என் தமிழுக்கு தலைவலிக்குமோ?
என்றைக்கு என் கவிதைக்கு கால்வலிக்குமோ?
ஓய்வெடுத்து ஓய்ந்தபின்
என்றொரு ஓய்வெடுக்கும் தருணத்திற்கென
என்னை என் கவிதை தேடுமோ,
என்றதன் தவம் கலைத்து தன்
கண் திறந்து பார்க்குமோ?
அன்றும் என் மைக்குப்பி
அதற்கெனக் காத்திருக்கும்
அழகான வைர வரிகளுடன்!
வைரம் பாய்ந்த வரிகளுடன்!
எவர்க்கும் கவலை வேண்டாம்!!

வராத கவிதையை நான்
வற்புறுத்துவதாய் இல்லை!
வலிந்து வரவேற்பதாய் இல்லை!
வரும்போது வரட்டுமே!
எங்ஙனமேனும் அன்றொரு கவிதையை
எனக்கென எழுதிக் கொள்கிறேன்!
அதுவரை எனக்கெனவும் காத்திரு
என் தமிழே!
என் அமுதே!

எனக்கெனவும் காத்திரு!

Friday, September 11, 2015


என்னைப் போல் அவனுக்கும்
கவிதை பிடித்திருந்தது!
கண்ணனைப் பிடித்திருந்தது!
குயில் பாட்டும்
குழலோசையும்
குரங்கையும் கூடப் பிடித்திருந்தது!
தமிழ் பிடித்திருந்தது;
தன்மானம் பிடித்திருந்தது;
இடைமறிக்கும் பால், மதம்
இனம் உடைத்தெறியும்
சமநிலை பிடித்திருந்தது!
ஏகாந்தம் பிடித்திருந்தது;
பேரமைதியையும் பேரிரைச்சலையும்
கூட்டுச் சேர்த்து ஆனந்தக்
கூத்தாடப் பிடித்திருந்தது!

விடியல் பிடித்திருந்தது;
விடுதலை பிடித்திருந்தது;
பெருஞ்சிறகு விரிக்கும்
நெடுந்தொலைவு பயணங்களையும்;
சிறு காயமெனத் துடைத்தெறியும்
நெருஞ்சி முள் நிமிடங்களையும்
கடும் கண்டனங்களையும்
கடின காலங்களையும்
எதிர்கொள்ளும் துணிவையும்;
எல்லையில்லா பேரன்பையும்
எப்போதும் பிடித்திருந்தது!
எல்லோரையும் எல்லாவற்றையும்
எப்போதும் நேசிக்கப் பிடித்திருந்தது!
அதனாலேயே அவனை
அவனாகவே எல்லோருக்கும்
அவ்வளவு பிடித்திருந்தது!
அவனுக்குப் பிறகும்
அளவு கடந்த
அன்புடன் அவனை
அப்படியே பிடித்திருக்கிறது!

இத்தனைக்கும் காரணம்
ஒரு வேளை
அவன் என்னைப் போல்
இருந்ததனாலோ என
இருமாப்புக் கொள்ளத்
தோன்றுகிறது!
இல்லை! இல்லை!
நான் அவனைப்போல்
இருப்பதும் கூட
அவனைப் பற்றிய
இத்தனை புரிதலுக்கும்
காரணமாக இருக்கக் கூடும்!

உன்னைப் போல்
எவரும் உண்டோ?
பாரதி!
என்னைப் போல்
ஒருவனடா நீ!!!!!

பாரதியார் நினைவு நாள்
இன்று!
Kanavu Mei pada Vendum!!!!
Long Live your thoughts, Poems n’ your Dreams!
Remembering National Poet Subramaniya Bharathi!!!

11.12.1882- 09.11.1921

Tuesday, August 18, 2015

தரம் தாழ்ந்து போகிறதோ தமிழக அரசியல்?


ஒரு தொலைக்காட்சி சேனல் தவறாமல் விவாதம் என்ற பெயரில் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன. இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடரும் போராட்டங்களும், கொடும்பாவி எரிப்புகளும், கண்டனங்களும் தான் இந்தக் காட்டுக் கூச்சலுக்குக் காரணம். 
ஒரு கட்சி சார்புடைய தொலைக்காட்சி, சம்பவத்திற்குக் காரணமானவரைக் கூப்பிட்டு கருத்து கேட்கிறது. அரசியலிலேயே ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த, இந்த தேசத்தை பன்னெடுங்காலமாக ஆண்ட  தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், ஒரு பழுத்த அரசியல்வாதி பின்வருமாறு கூறினார். நான் இருவருக்கும் ஒரு UNDERSTANDING இருக்கிறது என்று கூறுவதைத்தான் “############” (அவர் சொன்னதை எழுதவே விரல் கூசுகிறது) என்று கூறினேன். அதில் தவறு என்ன இருக்கிறது? இது அரசியலில் சகஜம்தான். வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக பிரச்சனையை பூதாகரமாக கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இது தொடர்ந்தால், போராட்டம் அமைதியாக நடந்தால், அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்போம். வன்முறை ரீதியில் தொடர்ந்தால், நாங்களும் அதையே செய்வோம் என்கிறார். பேட்டி கண்டவர் மீண்டும், அந்த வார்த்தைக்கு மாற்றாக வேறொரு வார்த்தை சொல்ல வேண்டுமென்றால் எந்த வார்த்தையை உபயோகப் படுத்துவீர்கள் எனக் கேட்க, அவர் அடாவடியாக மீண்டும் : அதிலொன்றும் தவறில்லை. அதே வார்த்தையைத் தான் தாம் சொல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.
அன்மையில் மறைந்த அவரின் தாயார் இதைக் கேட்டிருந்தால் தன் மகனைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும், அவரின் தாயார், இவர் மிகக் கேவலமான வார்த்தைகளால் விமர்சித்த கட்சியின் மிக நீண்ட கால விசுவாசி, தன் கடைசி மூச்சு வரை கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவரின் மறைவை மதித்து அந்தக் கட்சி பெரும் மரியாதை செலுத்தியது. ஆனால் அந்தத் தாயின் தனயன், ஒரு பெண்மணியைப் பற்றி மிகக் கேவலமாக விமர்சித்ததைத் தவறே இல்லை எனச் சாதிக்கிறார். 
ஐயா! UNDERSTANDING என்பதற்குத் தமிழில் “ புரிதல்” என்ற நேரடி வார்த்தை இருப்பதையும், தாங்கள் சொன்ன வார்த்தைக்கு ஆங்கிலத்தில் “ILLEGITIMATE AFFAIR” என்ற சொற்றொடர் மட்டுமே இருப்பதையும் தங்களுக்கு நினைவு படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் வன்முறையைக் கையில் எடுப்போம் என்று சொல்லும் உங்கள் கட்சிதான் அஹிம்சையை உலகத்திற்கே போதித்தது என்பதையும் தங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறோம். தாயோ, தாதியோ, தமக்கையோ, தங்கையோ, தாரமோ, தன் மகளோ யாராக இருப்பினும் ஒரு பெண்ணை எவ்வாறு மதிக்க வேண்டும், அவரிடம் எங்ஙனம் பேச வேண்டும் என்பதைத் தங்கள் கட்சித் தலைவராகிய பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது என்பதையும் ஆணித்தரமாகக் கூற விரும்புகிறோம். கருத்தில் கொள்க! விதைத்ததே விளையும் என்பதை நினைவில் கொள்க.! அரசியல் செயவதாக நினைத்துக் கொண்டு அசிங்கம் செய்ய வேண்டாம். இதற்காகவோ தவமிருந்து பெற்றோம் இந்த சுதந்திரத்தை? 
தரம் தாழ்ந்து போகிறதோ தமிழக அரசியல்? என்று கவலையாக இருக்கிறது. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இச்சுதந்திரத்ததைக் கண்ணீரால் காத்தோம்!!!! என் தாய்நாடே இந்த அரசியல்வாதிகளை மன்னித்தருளும். வள்ளுவன் வாக்குடன் முடிக்கிறேன்.

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”


Saturday, August 15, 2015


எனக்கு பெண் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எனக்கு காஞ்சனா என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எனக்கு தமிழச்சி என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
எல்லாவற்றுக்கும் மேல்
எனக்கு சுதந்திரமான உயிர் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
சுதந்திரமாய் சிந்திக்க, பேச,
எழுத, உலாவ, பகிர
எனக்கு இந்தியன் என்ற
ஒரு அடையாளம் இருக்கிறது!
சுதந்திரம் என்பது
வெறும் வார்த்தை மட்டும் அல்லவே!
அது வாழ்க்கை!!!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
என் தாய் நாடே!
Thanks to all the noble souls who gave us this Freedom!
Proud to be an Indian!
Happy Independence day!!!

Monday, August 10, 2015

பயணங்கள் முடிவதில்லை-X-அரவிந்தருடன் ஒரு மணி நேரம்

  

          எவ்வாறும் விளக்கிவிட முடியாததொரு உணர்வு அது. இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த அரவிந்தரின் இல்லத்தை இன்று காலையில் தற்செயலாகக் கண்டுபிடித்தபோது, ஒரு கண்டுபிடிப்பின் மகிழ்ச்சி இருந்தது. அது ஒரு குழந்தையின் மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் உடன் ஒரு தோழியை வேறு அழைத்தபோது, அங்கு பார்க்க என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அது அரவிந்தரின் இல்லம் என்றேன்; திலகரும், பிபின் சந்த்ர பாலும், அன்னை நிவேதிதாவும் வந்து சென்ற இடமென்றேன்; அரவிந்தருக்கு சுதந்திரத் தனலை மூட்டிய இடமென்றேன்; அவரை சிறைக்கனுப்பி ஆன்மீகம் காட்டிய இடமென்றேன். என்ன உங்கள் ரசனை இப்படி இருக்கிறது? ரொம்ப சீரியசான இடம் போலிருக்கே! எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே என்று  இழுத்த பெண்ணை, இல்லை! சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்த பின் தான், எனக்கு இவ்வாறான தீவிர ரசனைகள் தொடங்கின; என்னுடன் வா! உனக்கும் பிடிக்கும் என்றேன், உள்ளே கவலையுடன் தான்! கிளம்புவதற்கு முன், இணையத்தில் அரவிந்தரைப் பற்றி ஒரு சிறிய குறிப்பெடுத்துக் கொண்டு தயாரானேன். அரொபின்டோ! உங்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திறந்த மனதுடன் இதோ உங்களிடம் வருகிறேன்! என்ன கிடைக்கும் எனத் தெரியவில்லை என்று மனதிற்குள் வரிகள் ஓடின.

      அரவிந்தர் இல்லத்தை அடைந்த போது, வாயிலில் ஒரு பெரியவரைத் தவிர யாரும் இல்லை. அவரிடம் உள்ளே செல்ல வழி கேட்ட போது, அவர் அந்த பிரம்மாண்ட செந்நிற கட்டிடத்தின் வாசலைக் காட்டி உள்ளே செல்லுங்கள் என்றார். வாசலில் நுழைகையிலேயே மேலே அன்னையின் புன்னகைக்கும் புகைப்படமும், உள்ளே உங்களை நேராகப் பார்த்து வரவேற்கும் அரவிந்தரின் பெரிய புகைப்படமும் ஈர்த்தன. வரவேற்பறையில் அரவிந்தர் மற்றும் அன்னை நிவேதிதாவின் சில பல புத்தகங்கள் அலமாரிகளில்! பெரும்பாலும் அரவிந்தரின் “ சாவித்ரி” சார்ந்தவை. பக்கத்தில் மேலேறும் படிகளில், கீழிறங்கிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களிடம், அவர்களின் ஆசிரியர் சத்தம் போடாமல் இறங்குமாறு சைகை காட்டினார். அப்போதுதான் பக்கத்திலிருந்த பலகையைப் பார்த்தேன். அது தியான அறைக்கு செல்லும் வழி என்றும், அமைதி காக்கும் படியும் கூறியது.  அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறுபவரைப் பற்றி பெருமிதமாக நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், அந்த சிறுவர்கள் யாவரும் காது கேளாத வாய் பேசாத இயலாத சிறுவர்கள் என்பதையும், அவர்கள் தங்களுக்குள் சைகையில் பேசிக் கொண்டிருந்ததையும். We call it as irony.

      தியான அறைக்குப் போய் என்ன பண்ணப் போகிறேன், வேறெதாவது பார்ப்போம் என்று தரைத்தளத்தின் மற்றொரு புறத்திற்கு நகர்ந்தோம். சிறு சிறு செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், சாத்தப்பட்டிருந்த நூலகத்தைத் திறந்த பெரியவர், நீங்கள் முதலில் மேலே உள்ள தியான அறைக்குச் சென்று வாருங்கள் என்றார். படிகளில் ஏறத்தொடங்கிய போது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமின்றிதான் இருந்தது.. ஒன்று, இரண்டு, மூன்று, என்று ஏறத்தொடங்க, நான்காம் படியில் ஏதோ ஒரு உணர்வு உடலெங்கும் பரவத்தொடங்கியது. புல்லரிக்கிறதோ என்று கூட யோசித்துப் பார்த்தேன். இல்லை! இது வேறு ஏதோ ஒன்று. ஏதோ ஒன்று ஆட்கொண்டது போல், நிலை கொள்ளாத ஒரு அசாத்திய உணர்வு பிடித்துத் தள்ளுவதைப்போல் உணரத் தொடங்கினேன். படிகளுக்குப் பக்க பலமாக நின்ற கைப்பிடியை சட்டென பற்றிக் கொண்டு சுதாரித்தேன்.. பின்னால் வந்தவர்களுக்கு  படிகளில் வழிவிட்டு நின்ற போது, மேலே செல்லுங்கள் என்ற பெரியவருக்கு என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.

      என்னவாயிற்று என்ற அறைத்தோழிக்கு, எனக்கு என்னவோ ஆகிறது என்றுதான் சொல்ல முடிந்தது. கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டு, நிதானித்து மெல்ல படிகளில் ஏறினேன். அமானுக்ஷ்ய அமைதி நிரம்பிய அந்த தியான அறைகளின் நடுவில் அன்னையும் அரவிந்தரும் புகைப்படங்களாக, சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள். ஆசிகள் என்ற பெரிய நற்செய்தியுடன். நடுநாயகமாக இருந்த பெரிய அறையைத் தவிர்த்து விட்டு, உள்ளறைக்குள் சென்றமர்ந்தேன். நட்சத்திரத்தின் நடுவில் அரவிந்தர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்த எனக்கு, இதுதான் என் தேடுதலுக்கான திறவுகோல் உள்ள இடமோ என்ற கேள்வி மட்டுமே உள்ளே எழுந்தது. ஒற்றைக் கேள்வி; விடையற்ற வினாவாக தொக்கி நிற்க, அந்த அறை முழுவதும் பேரமைதி வழிய வழிய நிறைந்து கொண்டிருந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் இந்த அதிர்வலையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். The Vibration! 

             அத்தனை பெரிய ஆன்மீகப் பெரியவர்கள் வாழ்ந்து, நடமாடி, தியானம் செய்து, தன்னைத் தனக்குள் தேடி, சுயம் அறிந்து, சுற்றத்திற்குச் சொல்லி அலையலையாய் பரப்பிய பேரலையைத்தான் நான், அவர்கள் கோயிலாக மாற்றிய அவர்களின் இல்லத்திலிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பது இப்போது புரிந்தது.  இன்னும் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தால், இங்கிருந்து நான் வெளியேறுவது கடினமோ எனத் தோன்ற, அலைபேசியில் எழுத ஆரம்பித்தேன். சற்று நேர சிந்தனைக்குப் பின், நிகழ்காலத்தை உணர்த்திய அறைத்தோழியுடன், மற்ற அறைகளைப் பார்க்கக் கிளம்பினேன். 

      எங்கும், எங்கும், எங்கெங்கும் அன்னையும் அரவிந்தரும், அவர்களின் பொன்மொழிகளுடன் உடன் வருகின்றனர் ஒரு குருவாக, ஆசானாக, நல்மேய்ப்பனாக, வழிகாட்டியாக. நூலகத்தில் பெரிய புகைப்படத்திலிருக்கும் அரவிந்தரின் கண்கள் உங்களை ஊடுருவுவதை உங்களால் எப்பாடுபட்டாலும் தவிர்க்க இயலாது. அவ்வளவு சக்தி வாய்ந்த, அமைதி வாய்ந்த, அறிவார்ந்த பார்வை அது. புத்தகங்களுடன் சிறிது நேரம் கழித்து விட்டு, அவர்களின் புகைப்படங்களுடன் சிறிது நேரம் கழித்துவிட்டு, வெளியே வந்தால், புல்வெளியின் மத்தியில், பூங்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம் வரவேற்கிறது. 

      அந்த பளிங்குப் படிமத்தில் நெற்றி ஒற்றி வணங்குகையில், சலசலவென்ற நீரோடையை என்னால் கண்களுக்குள் காண முடிந்தது. தெளிவான பார்வையில், தெளிவான நீரோடையை நான் உணர்ந்ததை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று கூட எண்ணலாம். ஆனால் உண்மையாக நான் உணர்ந்ததைத் தானே நான் உரைக்க முடியும். 

      அவ்விடம் அகன்று, இந்திய வரைபடம் எதிர்நோக்கும் புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தபின், தன் வாழ்வின் முக்கியமான 12 ஆண்டுகளை அரவிந்தர் கழித்த நினைவிடத்தை அவரின் வீட்டைச் சுற்றி வந்து மீண்டும் வாயிலை அடைந்தோம். மர வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய பால்கனிகள் அலங்கரிக்கும் அரண்மனையை ஒத்த அந்த ஆங்கிலேயர் காலத்து செந்நிற கட்டிடத்தைப் பிரிய மனமின்றி சற்று நேரம் அமைதியாக வாசற்படியிலேயே அமர்ந்து விட்டேன்.   இப்போது விளக்குகளின் ஒளியில் அரவிந்தர், அந்த பெரிய புகைப்படத்துக்குள்ளிருந்து எங்களை வழியனுப்பினார்.

        வாசலில் காவலுக்கிருந்த பெரியவரிடம் நன்றி கூறி வெளியேறிய போது, அமைதியும், ஆனந்தமும், இந்த நாளில் நான் எவ்வளவு பெருமை வாய்ந்த பெரியவர்கள் வாழ்ந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன், உணர்ந்து உயர்வெய்தி இருக்கிறேன் என்று பெருமிதமும் தோன்றியது. சேத்தன் பகத்தின் ஆரோவில் அரவிந்தர் ஆசிரம அனுபவம் பொய்யாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. செவிதிறன் குறைபாடுள்ள அந்த பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைக்குள்ளிருக்கும் அமைதி இன்னும் பெரியதாக இருக்கக்கூடும் என்று இப்போது தோன்றுகிறது. இவ்வாறாக என் ஆன்மீகத் தேடல்கள் தொடர்ந்தால், வதோதராவை விட்டு நான் கிளம்பும்போது, சாதுவாகவோ, சன்னியாசினியாகவோ ஆகப்போவதற்கான வாய்ப்புகள் கூடிக்கொண்டே போவதாகத் தோன்றுகிறது. இந்த நாள் இனிய நாள்.


பயணங்கள் முடிவதில்லை!!!!

Tuesday, August 4, 2015



இந்தப் பிரிவு
என்னைப் பயமுறுத்துகிறது!
பிரிகிலேன்! பிரிகிலேன்!
என்றரற்றுகிறேன்!

என் கண்ணீரைத் துடைத்த
கையோடு ஒரு
புன்னகையைக் கைப்பற்றி
என்ன சொன்னாய் நீ?
என்கிறான் கண்ணன்!

என்னவென்றா கேட்கிறாய் நீ!
எனக்கும் உனக்கும் கூட
வயதாகும்;
இந்தப் பிரிவு
வந்தே தீரும்தானே
கண்ணா!
எனக்கிது வேண்டாமே!
ஏதாவது செய்யேன்
என்கிறேன்!

என்ன சொல்கிறாய் நீ!
எனக்கும் உனக்குமா?
எனக்குள் நீ வந்த பிறகு
எப்படி ஒரு பிரிவுனைக்
கொண்டு போகும் சொல்
என்கிறான் கண்ணன்!

ஏமாற்றுக்காரனே!
என்ன நான் சொல்வது?
நீ
உண்ணும் வெண்ணெயை
உன் கண்ணிலும்
வைத்தாயோ என்கிறேன்!
என்னதான் வேண்டுமடி
என் சகி!
ஏனிந்த கோபம் என்கிறான்!

சேர்ந்து நனைந்த
நாளின் முடிவில்,
உனக்கு ஜலதோக்ஷம்!
எனக்கு மட்டும் காய்ச்சலா?
உனக்குள் நான்
எனப் பொய்
உரைத்து விட்டு,
என்னைப் பிரித்துப்
பார்த்தாயோ நீ?
எத்தனை பாரபட்சம்
உனக்கு என்கிறேன்!

கண்ணை இமை
காப்பது போல்
கன்றைப் பசு
காப்பது போல்,
உன்னை நான்
காத்திருப்பேன்!
என்னைப் போல்
பார்த்திருப்பேன்!
உன்னைப் பிரிவேனோ!
கண்ணம்மா!
என்னைப் பற்றிக் கொள்ளடி
என்கிறான் கண்ணன்!

பற்று கிளையினின்று
விட்டு விடுபட்ட
ஒற்றை மயிலிறகு
காற்றில் படபடக்கிறது!

எதற்கும்
நான் உண்டென்பாய் எனில்
எதற்கெல்லாம்
நீ துணையிருப்பாய் கண்ணா?

சூட்சுமதாரியின்
சங்கம் முழங்குகிறது;
சக்கரம் சுற்றுகின்றது;
சூழ்ந்திருக்கும் உலகவியல்
எனக்குப் புரியவில்லை!

இறுதியில் தர்மம் வென்றதென
முழங்கியவனுக்குத் தெரியும்,
வென்றவன் அவன் தர்மம் மட்டுமே என!
எனவே அதைச் சொல்லாதீர்கள்!

சட்டங்களால் தண்டனை வழங்கி
இது தண்டனை அல்ல!
திருந்துவதற்கான வாய்ப்பென முழங்கி
போதுமானவரை காலம் கடத்தி
தேவைப்படும் போது
உங்கள் சட்டத்தின் சாட்டையை
நீங்களே கையில் எடுப்பீர் எனில்
எங்கே செல்கிறது
இந்த தேசம்?????

உங்கள் சீர்திருத்த முறைகளில்
உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
இன்னொரு உயிரைப் பறிக்கும் உரிமையை
இந்த தேசம் ஆதரிக்கிறதா?
ஆம்! என்றால் கொலை என்றால் என்ன?
இல்லை! என்றால் நீங்கள் செய்வது என்ன?

நான் குற்றங்களை ஆதரிக்கவில்லை;
குற்றவாளிகள் திருந்த தண்டனை
என்ற பெயரில் கிட்டத்தட்ட
ஒரு கால் நூற்றாண்டைக் கடத்தியபின்
இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு
அரசியல் சூழலுக்கேற்றவாறு
அவர் உயிரை எடுக்கும்
மரண தண்டனையைத்தான்
வன்மையாகக் கண்டிக்கிறேன்!

குற்றம் புரியும் எவர் ஒருவருக்கும்
சுற்றம் அறியாமல் எவ்வாறும்
கடும் தண்டனை தாருங்கள்!
இறுதிவரை சிறையில் அடையுங்கள்!
ஆனால் அவர்களையும் உயிருடன் வாழ
அனுமதியுங்கள்!!!

இந்த தேசம்
அமைதியை போதிக்கிறது!
அஹிம்சையை போதிக்கிறது!
ஆனால் அவ்வப்போது
அதுவே தண்டனையென்ற பெயரில்
அத்துமீறி கொலைகளையும் செய்கிறது!

காலம் தவறிய தீர்ப்புகள்..
எக்காலத்திலும் சரியாகவே இருப்பதில்லை!

Say No to Capitol Punishment!
I do!