Thursday, May 15, 2014

மீசை வைத்தவர் கெளரவர்; மீசை வைக்காதவர் பாண்டவர்; புரிந்து கொள்ள ரொம்ப சிம்பிள் டெக்னிக்! அந்தணர் கோலத்தில் இருந்தாலும் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஏனெனில் அவன் பாண்டவனாகிய அர்ஜீனன்; அரசனாகவே இருந்தாலும் அவன் தேரோட்டி மகனான கர்ணன் என்பதால் சுயம்வரத்தில் கலந்து கொள்ள எவ்வாறு இயலும்; ஹீம்! செல்லாது! செல்லாது! என்று திரெளபதி சொன்னதும் சரிதான்! சரிதான்! போய்யா! வெளியே! என்று தலை குனிய வைத்து அனுப்பி வைத்து விட்டார்கள்! இதெல்லாம் அவமானம் கிடையாது! அதனால் எதிர்கேள்வி, சாபமெல்லாம் கிடையாது! சுயம்வரத்தில் ஒருவன் ஒருத்தியை மணமுடித்துச் சென்றால், வரவேற்று வாழ்த்தாமல், வென்று வந்த பரிசுப் பொருளை ஐவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் புத்திரர்களே என்று பூசையில் கண் மூடியவாறே தாய் சொல்வாளாம்; அவ்வாறே பாண்டவர்கள் கேட்பார்களாம்! தர்ம பத்தினி, ஒவ்வொரு முறையும் நெருப்பில் நுழைந்து வந்து கன்னியாகி புதிதாய் ஒவ்வாறு பாண்டவரையும் மணப்பாளாம்! இன்முகத்தோடேதான்! இதெற்கெல்லாம் கோபம் வந்து சாபமிட்டுவிடவில்லை திரெளபதியோ, அவையில் நியாயம் பேசிய எவருமோ! சொந்த சகோதரர்களை, தன் நாட்டை, மனையாளை ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் திரெளபதி!) சூதாட்டத்தில் வைத்துத் தோற்ற தர்மனுக்குச் சாபமில்லை! விளையாடிய சகுனிக்கு! ம்ஹீம்! சாட்சியாக நின்ற துரியோதனனுக்கு அத்தனை சாபங்கள்! அவன் பக்கம் நின்று நியாயம் கேட்டதற்கு, இந்தா பிடி! என கர்ணனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் வேறு சாபமோ சாபம்! இதுதான் இந்தியாவின் பெருமைமிக்க இதிகாசம் என்று ஒரு தொலைக்காட்சியில் தினசரி இரண்டு காட்சி ஒளிபரப்பு செய்கிறார்கள். இதுதான் எங்கள் புராணம் என்றால், இதிகாசம் என்றால், எனக்கு இது வேண்டவே வேண்டாம்! என்னய்யா! நியாயம் சொல்றீங்க! போங்கடா! நீங்களும் உங்க மகாபாரதமும்!