Thursday, December 31, 2015



மார்கழி 15

பசி அறியேன்!
ருசி அறியேன்!
தூக்கம், கனவு
யாதென்பதை அறியேன்!
யாவும் உணர்ந்தவன்
நீயே என் பசியானாய்!
யாவும் அறிந்தவன்
நீயே என் ருசியானாய்!
என் தூக்கம், கனவு
ஏக்கம், நினைவு
யாவும் நீயானாய்!

நீயே என் தாயானாய்!
நீயே என் தந்தையுமாய்!
நீயே என் தோழனாய்!
நீயே என் தனயனுமாய்!
நான் உன் சேயாக
என் தவம் செய்தேனடா!
என் கண்ணா!

நான் எழுப்பாமல்
எழ மாட்டாய்
எனத் தெரியுமடா!
எழுந்திருச்சுக்கோ!!!!


என் பாவை # 15

Wednesday, December 30, 2015



மார்கழி 14

பால் பீய்ச்சும் ஆவினமே!
என் பாலகனைக் கண்டீரோ!
தோள் சாயும் பூவினமே!
என் தனயனைக் கண்டீரோ!
வாள் விழி பூவையரே!!
என் கண்ணனைக் கண்டீரோ!
என எப்போதும் போல்
எங்கும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!
எங்கேயடா! ஒளிந்து கொண்டிருக்கிறாய்!

தொட்டிலில் நீ விட்டுப் போன
தூங்காத புல்லாங்குழல்!
கொட்டிலில் நீ சிந்திப் போன
பச்சைப் பாலின் வாசம்!
குட்டி இராட்சசா! என்
குறும்புக்கார கண்ணா!
நீ ஒளியும் இடம்
அறிந்தவள் நான் என்பதை
அறியாததுபோல் நடித்தது போதும்!
உலகளந்த பரமனாய் உன்னை
ஊர் பார்க்கலாம்!
கலகக்காரா! உன்
கள்ளம் அறிந்தவள் நான் என்பதை
உள்ளம் உணர்வாயாக!

உன் உள்ளும் புறமும்
உணர்ந்த அன்னையடா நான்!
என் பிள்ளை நீ
என்பதை உணர்வாயாக!
ஒளிந்த இடத்திலேயே
உறங்கிவிட்டாயா என்ன?
எழுந்திருச்சுக்கோடா!
என் கண்ணா!
எழுந்திருச்சுக்கோ!
எழுந்திருச்சுக்கோ!!!!


என் பாவை # 14

Tuesday, December 29, 2015



மார்கழி 13

உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஏதுமில்லை!
உன்னிடம் பேசுவதற்கு
என்னிடம் எதுவும் இல்லை!
உன்னிடம் பகிர்வதற்கு
என்னிடம் எதுவுமே இல்லை!

மண்ணைத் தின்று வந்தாலும்
வெண்ணெய் திருடித் தின்றாலும்
என்ன செய்து வந்தாலும்
உன்னைக் கொஞ்சுவேன் என்றா நினைத்தாய்!
கண்ணா!
நான் அறிவேனடா!   
மண்ணும் விண்ணும் அறியா
உன் அகம் அனைத்தையும்
கண்ணா!
நான் அறிவேனடா! 

பேச வேண்டாமா!
பேசாதே!
வெறுக்க வேண்டுமா என்னை!
வேண்டும் வரை
வெறுத்துக் கொள்!
மறந்து விடுவாயா!
மகிழ்ச்சி!
மறுபடியும் நினைத்துத் தொலைக்காதே!
அன்பாய் பார்க்க
மறந்து போ!
அரவணைக்கக் கூட
மறந்து போ!
உன்
அத்தனை பாசாங்கையும்
அறிவேன் நான்!

அத்தனைக்குப் பிறகும்
நீ வந்து
அடையப் போவது
என் மடியெனும்
கூடுதானே!
அன்னையடா!
என்னை விடவும்
உன்னை வேறு
யார் அறிவார்?
என் கண்ணா!
நான் உன்
அன்னையடா!!!

முழிச்சுக்கோ!!!!


என் பாவை # 13

Monday, December 28, 2015

இறை எனப்படுவது யாதெனின்


ஆண்டவன் சன்னதியில் அவன் (ஆண்/பெண் கடவுள்கள் இருவருக்கும் இது பொருந்தும்) முன் நிற்கையில் எனக்கு எந்த வேண்டுதலும் இருப்பதில்லை. ஏனோ என் மனம் ஏதுமற்றதாகி விடுகிறது My Mind goes blank என்றபோது ஏராளமான வியப்புக்குறிகள் பாவிக்கின் கண்களிலும் நெற்றியிலும் படர்வதைக் காண முடிந்தது. பாவ்கட் காளி மாதா கோவிலைப் பற்றிய உரையாடலின் ஒரு பகுதிதான் அது. பரோடாவிலிருந்து சில மணி நேர பயணத்தில், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கும் காளி கோவிலின் முக்கியத்துவத்தைப் பற்றி பாவிக் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கு உறைந்து அருள்புரியும் காளியிடம் எதை வேண்டினாலும் அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையையும் பற்றி அவன் சொல்லப் போகத்தான் மேற்கண்ட உரையாடல். அது எப்படி சாத்தியமாகும்? I didn’t expect such a reply from a matured person like you. வியப்பு குறையாமலே வினவியவனுக்கு, என்ன செய்வது? நான் அப்படித்தான் என்றபோது அவனால் அதை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இல்லை! தீதி! பிரார்த்தனைகளற்று எப்படி இருக்க முடியும்? அதற்காகத்தானே கோவிலுக்குப் போகிறோம் என்று இழுத்தான். அதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. Maturity…மனம் பண்படுகையில் அது தானாகவே நமக்குள் நிகழ்வதை நாம் ஒரு பார்வையாளனாகத்தான் பார்த்தவாறு உணர்ந்தவாறு விளக்க இயலாமல் நகர வேண்டியிருக்கிறது.

பக்தி இல்லை என்று ஒரு சதவிகிதம் கூட சொல்ல முடியாத பக்தி மார்க்கம் அது. கோவில் கருவறையில் கடவுளும் நாமும் மட்டும் இருப்பதை உணரும் தருணம், அதோ அந்த பரம்பொருளை, பெரும்சக்தியை, பேராற்றலை  நன்றாகக் கண்திறந்து பார். உள்வாங்கிக் கொள். உன்னோடு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடு. பிறகு பேசிக் கொள்ளலாம். நன்றி சொல்லலாம், சண்டை போடலாம், கேள்வி கேட்கலாம், விண்ணப்பிக்கலாம், வேண்டுதல்களை அடுக்கலாம் என்ற பண்பட்ட மனதின் பக்குவம் அது. அது ஒருநாளிலும் வந்து விடலாம். வாழ்நாள் முழுவதும் வராமலும் போகலாம். அது போல்தான் என் பிரார்த்தனைகளும் என்பது புரிகிறது. இது இங்குதான் என்பதில்லை. இன்றுதான் என்பதில்லை. வாசலில் நின்று பார்த்துவிடக் கூடிய தெருக்கோடி பிள்ளையாரானாலும் சரி, பல மணி நேர காத்திருப்புக்குப் பின் சில நொடிகள் பார்த்துவிட்டு நகரும் திருப்பதி பெருமாளானாலும் சரி, இதே நிலைதான். இயல்பாக எனக்கு வருவதைத்தானே நான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்றாடம் குளித்துவிட்டு நேராக பூஜை அறைக்குச் செல்ல வேண்டும்; சாமி கும்பிட்டுவிட்டுத்தான் வேறு எந்த வேலையும் என்று பழகி விட்ட எங்கள் குடும்ப வளர்ப்பும் வழக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஐந்து கரத்தினை என ஆரம்பித்து வினாயகர் அகவலும், கந்த சக்ஷ்டி கவசமும், சக்தி மாலையும், திருவாசகமுமாய் தொடர்ந்து நாராயணி நமோஸ்துதே என்று மனதார அம்பாளுக்கு குங்கும அபிக்ஷேகமும் செய்வித்து, என் இல்லத்தினர் ஒவ்வொருவரும், சுற்றமும், நட்பும், உலகத்தார் அனைவரும் வாழ்க வளமுடன்\! வாழ்க வளமுடன்!  வாழ்க வளமுடன்! என மனதுக்குள்ளாகவே விழுந்து வணங்கி காலைப் பிரார்த்தனையை முடிக்கையிலேயே எல்லா தெய்வங்களும் என் முன் பிரசன்னமாகி விடுவதை உணர்ந்த பின், இன்ன பிற கோவில்களில் மனம் நிச்சலனமற்றுப் போவதற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? நினைவு தெரிந்து இதைத்தானே நான் தினமும் செய்து வருகிறேன். இதைத்தானே என் வீட்டில், ஒவ்வொருவரும் செய்து வருகிறோம்.

திருநீறும் குங்குமமும் கமகமக்க ,காலம் காலமாய் எங்களைக் காத்தவாறு அருள் புரிந்து அமர்ந்திருக்கும் அண்ணாமலையும், உண்ணாமுலை அம்மையும், நடுநாயகமாய் வீற்றிருக்கும் அம்பாளும், திருப்பதி ஏழுமலையானும், லட்சுமியும், சரஸ்வதியும், இயேசுவும், மரியாளும், அல்லாவும், இன்னபிற தெய்வங்களும் என எல்லா சாமியும் ஒன்றுதான், என்றுதான் நாங்கள் வளர்க்கப் பட்டிருக்கிறோம் என நினைக்கையில் பெருமையாகவும் சந்தோக்ஷமாகவும் இருக்கிறது. அழகாய், அன்பாய், அறிவு பூர்வமாய் வளர்த்த அப்பாவுக்கு நன்றி. சிவபுராணமும், தேவாரமும், திருவாசகமும், கந்த சக்ஷ்டி கவசமும், கந்த குரு கவசமும்,  திருப்பாவையும், திருவெம்பாவையும், மாரியம்மன் தாலாட்டுமாக அனுதினமும் பக்தியைப் பாடல்களாகக் கேட்டவாறு நாங்கள் வளர, கற்றுக் கொள்ள ஆசானாக இருந்த தாத்தாவுக்கு நன்றி. கற்றுக் கொடுத்த தமிழுக்கு நன்றி. நாங்கள் நன்றாகத்தான் வளர்ந்திருக்கிறோம்.

நெஞ்சகமே கோயில்;
நினைவே சுகந்தம்;
அன்பே மஞ்சன நீர்;
பூசை கொள்ள வாராய்!
பராபரமே!
என்ற பாடல் வரிகளின் வீரியம் புரிகிறது.

தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே! வேறெங்கே? என உள்நோக்கிப் பார்க்கச் செய்கிறது.
மதத்தின் பிரதிநிதியாக இங்கு கடவுள் பார்க்கப்படும் நிலையைப் பார்க்கையில் கவலையாக இருக்கிறது.
யாவரும் இன்புற்றிருக்க வேண்டுவதேயல்லாமல் வேறொன்றறியேன்! பராபரமே!!!

பயணங்கள் முடிவதில்லை!!!


மார்கழி 12

என் கோபங்கள் யாவையும்
உன் கண்களால் தணித்துப் போகிறாய்!
என் மெளனங்கள் யாவையும்
உன புன்னகையால் திறந்து விடுகிறாய்!
என் தயக்கத்தை
உன் தளிர் விரல் தீண்டலாலும்
என் மயக்கத்தை
உன் குளிர் குழலோசையாலும்
என் யாவையும் கவரும் வகை
எங்ஙனமோ நீ அறிவாய்!
யசோதையின் மைந்தா!
தேவகி பாலா!
கோபியர் கொஞ்சும் குமரா!
கோலவிழி திறவாய்!!
ஜாலங்கள் போதும்!
மாலனே! கண் திறவாய்!!!

என் பாவை # 12


Sunday, December 27, 2015




மார்கழி 11

அன்னமே!
ஆருயிரே!
இன்சுவையே!\
ஈகையே!
உள்ளமே!
ஊனே!
எண்ணமே!
ஏகாந்தமே!
ஐம்புலனே!
ஒளியே!!
ஓதுதமிழே!
ஔக்ஷதமே!
ஆய்தம் என்
அன்பு மட்டுமே!
உயிரெழுத்தே!
எழுந்து வா!
கண்களையும்
காதுகளையும்
இன்சொற்களையும்
எழும் எண்ணம் யாவையும்
உன் வாசலில்
தெளித்து விட்டு
வாசற் படியிலேயே
காத்திருக்கிறது
உனக்காய் உன்
மெய்யெழுத்து!!
கார்முகிலே!
கண் மலர்வாய்!


என் பாவை # 11

Saturday, December 26, 2015


தேவர்களின் தேவே!
தேவகி நந்தா!
தெருக்கள் தோறும்
உன்னைத்
தேடித் தொலைகிறேன்!
தேன் குழலோசை
கேட்பேன் இல்லை!
தேனார் விழிகளை
பார்ப்பேன் இல்லை!
தேசம் மறந்து-உன்
நேசம் நினைந்து
தெருக்கள் தோறும்
உன்னைத்
தேடி அலைகிறேன்!
தேம்பும் மனதினை
தேற்றும் வகை
தெரிகிலேன் நான்!
கண் திறவாய்!
கமலக்கண்ணா!
என் முகம் மறந்து
அகம் கரைந்து
கண்ணீராய் சொரியும் முன்
கண் திறவாய்!
அரங்கா!
கண் திறவாய்!



Friday, December 25, 2015







மார்கழி 9

கண்ணுக்குள் என்னை
கட்டி வைத்துக் கொண்டு
கண்டுபிடி என்கிறாய்!
கைவிரல்களுக்குள் என்னைப்
பொத்தி வைத்துக் கொண்டு
கையைப் பிடி என்கிறாய்!
நெஞ்சோடு என்னை
சேர்த்துத் தைத்துக் கொண்டு
தஞ்சம் கொடடி என்கிறாய்!
உலகமே உறக்கம் கலைத்து
உனக்காகக் காத்திருக்கிறது!
உறங்குவதாய் பசப்புகிறாயே!
பாசாங்குக் காரா!
கொஞ்சமே கொஞ்சம்
இறங்கிதான் வாயேன்!
எழுடா! என் திருடா!
எழுந்திரேண்டா!


என் பாவை # 9



MERRY CHRISTMAS!

Christmas brings in lots of memories to this Angel, who announced the arrival of jesus to Mother Mary, till her class V. Remembering with lots of happiness and joy, the stage that saw me as the Angel, Sheeba as the mother Mary n Baburao as Joseph. Remembering with gratitude all those suppose christmas and surprise christmas gifts from Santa claus till my school finals.

Remembering Arivoli for what he shouldn't have done on a christmas night. Miss you Arivoli. Rest in peace as you wished to. Remembering all those Tsunami victims, who miss their friends n family for 15 years now. God Be with you all. Remembering all those Christmas carols in the midnight, Christmas trees decorated the houses, Mangers n tableaus with fond memories.

N not to miss,
Remembering with love and pride, the power of love and togetherness of a family, with which we sailed across the Christmas of 2013, which took months to recover, when Mom got injured and the entire family was in doldrums. We sailed across, succeeded and here is the smile that spreads the message of LOVE TRIUMPHS. Our Love for our Mom and our love for our family has made that miracle, I believe. Christmas of 2014 was of a different picture. We stood together as a family, comforting each other, supporting each other and succeeding together. This is my Christmas message to all those people, who have a pain in their Heart, a question of what to do next? and how to sail across some challenges? WE SUCCEEDED. SO CAN YOU. LOVE YOURSELF. LOVE YOUR FAMILY. KEEP GOING. KEEP THE LIGHT GLOWING IN YOUR HEART ALWAYS. LET THE NEW YEAR BRINGS IN ALL PROSPERITY TO ALL OF YOU. THE LIGHT IS COMING!! MERRY CHRISTMAS.!!! MERRY CHRISTMAS TO ALL OF YOU!!! LOVE ALWAYS Kanchana and Family..


It’s a cool, blessed winter dawn! The star is born in the sky announcing the birth of the Son, the Saviour n the Good Shepherd. The Gifts of the Maggi are reaching on time. Santa is at your door steps bringing you the great Christmas message from the one who said, "God is Love"! Listen to the first message of Baby Christ in the cradle. 

“This is my commandment, that you Love one another, as I have loved you. Greater love has no one than this. Love is patient, is kind. It always protects, always trusts, always hopes, always perseveres. Love Never Fails!  Above all, keep loving one another earnestly, since love covers over a multitude of sins. I loved you at your darkest. Let us not love in word or talk but in deed and in truth. Let all that you do be done in love. As the Father has loved me, so have I loved you. Abide in my Love. These things I have spoken to you, that my joy may be in you, and that your joy may be full.
Merry Christmas to All! This is my Christmas Message! “
Merry Christmas to all!!!!

Thursday, December 24, 2015




மார்கழி 8

வாரம் ஒன்று வளமாய்க் கழிந்தது
மாறன் வில் பலமாய் வளைந்தது
மார்கழி காண்!
மாதவா! இது
மார்கழி காண்!
தீரனே! அரங்கநாதா!
ஈரம் கொள்! நாராயணா!
அகிலோடு ஆம்பலும்
முகில்தொடும் மூங்கிலும்
மல்லியும் முல்லையும்
மனம் வீசும் பிச்சியும்
தாழிநிறை வெண்ணெயும்
தாள் சுமந்து நிற்கின்றோம்!
நாமே யாமாய்!
யாமே நாமாய்!
யாதுமான பின்னாலும்
யாது இது ரமணா!
பாரம் கையில் இல்லை!
சாரங்கா!
உன்னைச் சுமக்கும் மனதில்!
இறக்கி வைக்க மனம் இல்லை!
இடம் தேடுகின்றோம்!
இறங்கி வந்து உன்
இதயம் கொடேன்!
இருள் விலக வேண்டும் கண்ணா!
மருள் தீர வேண்டும்!
அண்ணலே! விழி திறவாய்!
அருள் கூர்ந்து அகம் புகுவாய்!

என் பாவை # 8


Wednesday, December 23, 2015



மார்கழி 7

பித்தனே! பிறை நுதலோனே!
சித்தம் உனில் வைத்தோம்!
வித்தே! விளை நிலமே!
விடங்கனே! விழித்தெழுவாய்!
புசித்தோம் இல்லை!
ருசித்தோம் இல்லை!
உன்னில்
வசித்தோம் அறிவாயோ!
யாம் உன்னால்
வசித்தோம் அறிவாயோ!
எத்தனை குறும்புகள் செய்தும்
அத்தனையும் ரசித்துக் களித்தோம்!
எத்தனே!
விழி திறவாய்!
எம்பெருமானே!
விழித்தெழுவாய்!
கண்ணே! கண்மணியே!
கார்முகில் தரும் மழையே!
பொன்னே! பொக்கிக்ஷமே!
உன்னைச் சரணடைந்தோம்!
கண் மலர் திறவாயே!
கண்ணா!
கண் மலர் திறவாயே!


என் பாவை # 7

Tuesday, December 22, 2015



மார்கழி 6

முல்லை பூத்துவிட்டது!
மூடு பனி களைத்துவிட்டது!
முகில் வதனா! முகுந்தா!
முழுநிலவே! விழித்தெழுவாய்!

முன்னெழு பிறவியிலும்
உன்னைப் பிரிய இயலாமல்
தேவகி ஆனேன் நான்!
யசோதையும் ஆனேன் நான்!
ராதை ஆனேன் நான்!
கோதையும் ஆனேன் நான்!
யாதுமாகி நிற்பவனே!
உன் யாதுமாகி
உடன் வருவேன் நான்!
அரங்கனே!
அழகம்பெருமானே!
உன்
ஆண்டாளும் நானே!
ஆட்கொள்ளும் நேரமிது!
அழகு விழி திறந்தருள்வாய்!


என் பாவை # 6

Monday, December 21, 2015


மார்கழி 5

வைகறை விடிந்தது;
வாவினங்கள் விழித்தன;
வைதேகியும் விழித்தனள்;
வைகுண்டவாசா விழித்தெழுவாய்!
கோதை உன் வாசலில்;
கோமகள் உன் வாசலில்;
கோலவிழி உன் வாசலில்;
கோமகனே கண் திறவாய்!
உனக்கென நோன்பிருந்து
உனக்கென மாலை சூடி
உன் ஆண்டாள்
உன் வாசலில்!
உலகளந்தானே!
உளம் திறவாய்!!!


என் பாவை # 5

Sunday, December 20, 2015


மார்கழி 4

வண்ணங்கள் யாவும் உன்
வாசல் நிறை கோலமாய்!
மண்ணுயிர் எல்லாம்
உனக்காகக் காத்திருக்க
இன்னும் உறங்கலாமோ
மணிவண்ணா!
குளிர் இனிது!
கூவும் குயில் இனிது!
வின்மீன் இனிது!
விழித்த இரவு இனிது!
பனி இனிது!
படரும் விடியல் இனிது!
உலகளந்தானே
உன் குழல் இனிதன்றோ!
ஆதவன் காத்திருக்கிறான்!
ஆவினங்கள் காத்திருக்கின்றன!
மாதரும் காத்திருக்கின்றனர்!
மாதவா!
விழித்தெழுவாய்!
நானும் காத்திருக்கிறேன்!
நந்தகுமாரா!
விழித்தெழுவாய்!


என் பாவை # 4

Saturday, December 19, 2015



மார்கழி நாள் 3

மங்கல மாவிலைத் தோரணங்கள்,
மணம் வீசும் மஞ்சள் மலர்ச்சரங்கள்,
மஞ்சள் பூசி மஞ்சள் உடுத்தி
மாக்கோலமிட்டு மஞ்சள் பூவைத்து
மங்கலம் நிறைந்ததென பாடி வரும்
மங்கையர்கள் எல்லாம் உன் வாசலில்!
இன்னுமா கண்ணுறக்கம் கலைப்பாய் இல்லை
என் கண்ணா!
திங்கள் வருகுது காண்!
தீஞ்சுவை நிறைந்தது காண்!
கண்கள் திறந்தருள்வாய்!
என் கண்ணா!
கண்கள் திறந்தருள்வாய்!


என் பாவை # 3

Friday, December 18, 2015



மார்கழி 2

வாசல் பூத்தது காண்!
வாச மலர் பூத்தது காண்!
நேசம் பூத்தது காண்!
நெஞ்சமும் பூத்தது காண்!
வாசமும் நேசமுமாய் உன்
வாசல் நிறை கோலம் காண்!
வாசனே! வரமருள்வாய்!
வண்ண மலர் கண் திறவாய்!!
என் ஈசனே!
எழுந்தருள்வாய்!
எனை எழுந்தாட்கொள்வாய்!


என் பாவை # 2

Thursday, December 17, 2015



பொழுது புலர்கின்றது!
பூவினங்கள் மலர்கின்றன!
மார்கழி பிறந்தது காண்!
மாலே! மணிவண்ணா!
பனியோடு புல்லினமும்
கனியோடு புள்ளினமும்
துணையாகத் தோழியரும்
உனைக் காண வாசல் வந்தோம்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
தூயனே!
துயிலெழுவாய்!
மார்கழி மலர்ந்தே விட்டது!
மாயனே!
மலர்ந்தெழுவாய்!!

இன்று மார்கழி முதல் நாள்!
இது என் பாவை # 1!

Thursday, October 15, 2015


வாய்ப்பேச்சு மறுக்கப்பட்டவர்களின்
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கையை உங்களால்
எங்ஙனம் புரிந்து கொள்ள இயலும்!

கற்களால் அடித்துக் கொல்லப்படுபவர்கள்
கள்வர்களாக்கப் படுவதும்,
மானபங்கப்படுத்தப் படுபவர்கள்
மலினப்பட்டுப் போவதும்
இந்த தேசத்தில் மட்டுமல்ல;
எந்த தேசத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

அன்னிய மண்ணில்
அகதிகளாக இருப்பதற்கும்,
தன் மண்ணிலேயே
தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கும்
என்ன பெரிய வேற்றுமை
இருந்து விட முடியும்?
உங்கள் பழுப்பேறிய
பதிவேடுகளில் வேண்டுமானால்
வெவ்வேறாய் பதியப்பட்டிருக்கலாம்!
தூர்வாரப்படாத உங்கள்
துருப்பிடித்த மனங்களுக்கு
பெரிதாய் என்ன
புரிந்து விடப் போகிறது!
அடக்குமுறையின் வேதனையை
அனுபவித்தவர்களுக்குத்தான் அதன்
அக்னிப்பிரவேச அனுபவம் புரியும்!

நிர்வாணப் படுத்தப்பட்டவர்களும்
நிர்கதியாக நின்றவர்களும்
நித்தம் நிறம் மாறும்
ஊடகங்களீன் கண்களில்
ஒருநாள் ஊறுகாயாகிவிட்டு
மறுநாள் நாடகமாக்கப்படுவது
எத்தனை கொடுமை?
இந்த தேசம்
நன்றாக இருக்கட்டும்!

மானம் காப்பது
மனிதனின் கலாசாரம்!
மனைவியை தீக்குளிக்க வைப்பது
மன்னனின் கலாசாரம்!
வாழும் வாய்ப்பை
வழுநெறியின் பெயரால்
தன் மனையிடமிருந்தே
தட்டிப் பறித்தவனின்
நாட்டுப் பிரஜைகள் தானே!
கணவனால் கூட ஆடைகள்
களையப்பட்டு நடுத்தெருவில்
அம்மணமாய் நிற்க வைக்கப்பட்டிருக்கலாம்!
சாத்தியம் தான்!
அட! சாத்தியம் தானே!

உங்கள் மனசாட்சியை ஒரு முறை
ஒரே ஒரு முறை
கேட்டுப் பாருங்கள்!
அந்த அவமானத்தின் வலியை
அங்குலம் கூட உங்களால்
அனுபவிக்க முடியுமா என்று?

தன்மானமுள்ள எந்த மனிதனுக்கும்
தன் ஆடை களைந்து
போராடும் நிலைக்கு
தள்ளப்படும் தருணங்கள்
அமிலக் குளியல்!
அதை நீங்கள்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
அசிங்கப் படுத்தாதீர்கள்!
அவர்கள் ஏற்கனவே
அசிங்கப்பட்டுதான் நிற்கிறார்கள்!

பால் வேற்றுமை தொடங்கி
இன வேற்றுமை வரை
தாழ்த்தப்பட்டவர்களின் வலியை,
வாழ்க்கையின் விளிம்புநிலைக்கு
தள்ளப்பட்டவர்களின் அவமானங்களை
சிற்றூர்களிலும் பெருநகரங்களிலும்
மாவட்டம், மாநிலம் என விரிந்து
நாடுகள் தோறும் இந்த
மண்ணின் மீது அடக்குமுறையால்
தாழ்த்தப்பட்டுக் கொண்டே
இருப்பவர்களின் வேதனையை,
எக்காலமும் உங்களால்
எதிர்கொள்ளவே முடியாது!

பெண்ணின் சாபம் மட்டுமல்ல!
இந்த
மண்ணின் மீது தாழ்த்தப்பட்ட
எந்த மனிதனின் சாபத்திலும்
விழுந்து விடாதீர்கள்!
அது யுகங்கள் கடந்து
அவமானத்தின், புறக்கணிப்பின்
அனலில் தகித்துக் கொண்டிருக்கிறது!
அகிலம் தாங்காது!
வேண்டுமானால்,
உங்கள் கலாசாரத்தை
உறைக்குள் உறங்க
அனுப்பி விட்டு
அர்த்தமற்ற சம்பிரதாயங்களை
பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்!
உலகம் நித்திய சமாதானத்துடன்
சமதர்மத்துடன், சகிப்புத்தன்மையுடன் இருப்பதாய்
உங்களை நீங்களே
நம்பவைத்துக் கொள்ளுங்கள்!

ஏனெனில்
உண்மை வேறு!
இங்கு
உண்மை வேறு!

நெஞ்சு பொறுக்குதில்லை!


Wednesday, September 30, 2015


என் முதல் மழைக் கவிதையின் ஈரம்
இன்னும் என் விரல்களில்!
என் முதல் மழைக் கனவின் சாரம்
இன்னும் என் விழிகளில்!
என் முதல் மழைக் குயிலின் குரல்
இன்னும் என் செவிகளில்!
என் முதல் மழை நனைவிற்குள்
இன்னும் மூழ்கிக் கிடக்கிறேன்!
இப்போதைய என் உலகம், உயரம்,
இன்னும் உடனிருப்பவையை எல்லாம் மறந்து
எப்போதாவது வந்து போகும் மழைக்காக
எப்போதும் காத்திருக்கிறது இந்த மனது!
என் முதல் மழைக்கு முன் பறந்த தும்பிகளுடனும்
அன்றைய மாலையில் பறந்து கடந்த ஈசல்களுடனும்
இன்னும் பறந்து கொண்டே இருக்கிறாள்
தன்னை மழைக்குக் கொடுத்து
தானே மழையாகி மழை இரவிற்குள்
வின்மீன் தேடிப்போன ஒரு
சின்னஞ்சிறுமி!!!!
-நான் காஞ்சனா.