Sunday, March 30, 2014


வெறுமையாக இருக்கிறது மனது. எதையும் யோசிக்காமல், எதையும் நினைக்காமல், எதையும் பேசாமல் சில நிமிடங்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனக் கைகூடாத நொடிகளுக்காக மனம் ஏக்கத்தில் சினுங்கிக் கொள்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்ன செய்ய விழைகிறேன், என்ன செய்ய நினைக்கிறேன், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறேன் என எதற்கும் பதிலில்லை. கேள்விகளும் பதில்களும் அற்ற உலகமும், வாழ்க்கையும், நாட்களும் எல்லோருக்கும் வரமாக வாய்ப்பதில்லை. புளிப்பு, இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என சுவைகள் வகைப்பட்டுக் கிடப்பது போல் அல்லவா, வாழ்க்கை தன்னை அச்சம், சினம், மகிழ்ச்சி, குழப்பம், தெளிவு, உற்சாகம், சோர்வு என வகைப்படுத்திக் கொண்டுள்ளது. இதில் எந்தத் தோனி பற்றி இந்தக் கடலைக் கடப்பது என்பதுதான் பெரிய கேள்வி?

எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவார்!

நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கண்ணை மூடினால் வந்து போகும் காட்சிகளைக் காணும் துணிவின்றி விழிகளை விரித்து வைத்து, மடி கணிணியிடம் என்னை ஒப்புக் கொடுத்துள்ளேன். தேவையில்லாமல் காலையில் கண்ட விபத்து கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. வெள்ளைச் சட்டை நீல நிற ஜீன்ஸ் தாண்டி வழிந்தோடிய சிவப்புக் குருதிச் சகதியின் நினைவு இந்த இரவை இம்சித்துக் கொண்டிருக்கிறது. இறைவா! அத்தனை இரத்தத்தை இழந்த நிலையிலும் முகமறியாத அந்த மனிதன் உயிர் பிழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என மனது ப்ரார்த்தனையில் கரைகிறது. கடவுளே! அந்த மகனை, சகோதரனை, கணவனை, தந்தையை, நண்பனைக் காப்பாற்றி விட்டாய் தானே எனக் காற்றில் கேள்வியை விதைக்கிறது. சத்துள்ள விதைகள் சத்தியமாய் முளைக்கும் என்ற நம்பிக்கையில் தானே வாழ்க்கை தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

காதுக்குள் வழிந்து கொண்டிருக்கும் பாடலைத் தாண்டி கேட்கும் சத்தங்கள் உண்மையாவையா இல்லையா என்று ஆராய அச்சமாக இருக்கிறது. காதுகளை மூளைக்கு இனம் காட்டாமல் எழுத்துக்குள் அமிழ்ந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மாட்டேன் என உறுமி அடிக்கின்றது மனமோ மூளையோ, இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டுமோ.

முன்னிரவில் படித்த கவிஞர்.அறிவுமதியின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
தூங்கிவிட்டாலென்ன.

ஆமாம்! இந்தக் கண்கள் கொஞ்சம் தூங்கிவிட்டால்தான் என்ன?

Friday, March 28, 2014

Its really very difficult to handle none other than Kanchana as on date ............Hmmmmm

Thursday, March 20, 2014

Chennai- Ayyayyo - Veyilaa athu? Scorching like anything!!!!!!!!!!!! Semma Hot...

Wednesday, March 19, 2014

நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!
நாக்கு, உதடுகள், எச்சில், காற்று
நான்கோடும் ஒட்டாமல் நழுவும் பேச்சு
மனசு முழுவதும் மண்டிக் கிடக்கும்
இந்த அடர்ந்த இரவில்
நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!

நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!
கண்கள், இமைகள், தலையணை, போர்வை
எவையுடனும் ஒட்டாமல் உதிரும் உறக்கம்
கனவுகள் தெளித்தவாறு என்னுடன்
கட்டிலில் விழி விரித்துக் கிடக்கும்
இந்த அர்த்த ராத்திரியில்
நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!

பேசாமலும் உறங்காமலும் நான்
பேதலித்துப் போகும் வாய்ப்பு மட்டும்
பிரகாசமாய்த் தெரிகிறது - தூரத்து
பெளர்ணமியுடன் கண்சிமிட்டும் நட்சத்திரங்களில்!

Tuesday, March 18, 2014

வலியை வலி என்றே உணர முடியும் எனில்
வலியை வலி என்றல்லவா உரைக்க முடியும்
ஒலித்துக் கொண்டிருக்கும் இதயத்துடிப்பு போல்
வலித்துக் கொண்டே இருப்பது மனம் என்ற போதிலும்?


பஞ்ச மூர்த்திகள் உலாவிற்காகக் காத்திருக்கும் வாகனங்கள்.
இடம்: அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
நாள்: 18.03.2014

Monday, March 17, 2014

குக்கூ என பெயரிட்டதற்காக thank you Raju Murugan!!!!

கண் பார்வையற்ற இருவரின் காதலுக்கு, குரலால், உணர்வால் மட்டுமே காதலை உணர மற்றும் பகிரக் கூடிய இருவரின் காதல் கதைக்கு, அழகிய கண்களுடைய குயிலின் மொழியைப் பெயராய் சூட்டியிருப்பதற்கு நன்றி! தன் கருத்த தேகத்தை அடர்ந்த இலைகளுக்குள்ளும் கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஒளித்துக் கொண்டு தன் தனித்தன்மையுடனான குரலால் தன் இணைப்பறவையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் குயிலின் மொழியை, இரைச்சலான, எல்லாவற்றையும் கடைவிரித்துப் பார்க்கும் ஒரு உலகில் ஒடுங்கி ஒதுங்கி ஓரமாய் ஆனால் விட்டுக் கொடுக்காத தைரியமான தமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கையைச் சொல்ல ஒரு குறியீடாய் பயன்படுத்தியதற்கு நன்றி! பாரதியைப் படித்த, பாரதியைப் பிடித்த எவருக்கும் குயில் தோப்பையும் குயில் பாட்டையும் பிடிப்பது ஒன்றும் புதிதல்ல, வியப்புக்குரியதும் அல்ல!  ஆகவே பாரதிக்காகவும் எனக்காகவும் தங்கள் முதல் படைப்புக்கு குக்கூ என பெயர் சூட்டியதற்கு நன்றி! குக்கூ வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Wednesday, March 12, 2014

எண்ணற்ற நாட்கள்;
ஏதேதோ சுமை;
என் தோள்களின் வலியை
எங்கே இறக்கி விட நான்?
உன்னைத் தான் கேட்கிறேன்
எங்கே இருக்கிறாய்
எல்லோருக்குமான என் இறைவா?

வார்த்தைகள் வற்றிக் கொண்டே இருக்கின்றன;
வாழ்க்கையும் கூட எனத் தோன்றுகிறது.
நீண்ட பாதையின்
நிழலற்ற பயணத்தில்
நல்லது நினைத்தவர்
நடக்க முடியாமல் வதைபட,
தீமை செய்வோரும்
தீயதை நினைப்போரும்
கொண்டாடிக் களித்திருப்பது
எங்ஙனம் சாத்தியம்?

சோதித்தது போதும்;
சோர்ந்துவிட்டேன் பெருமானே!
என் அன்னையே!
என் தந்தையே!
என் குருவே!
எல்லாமான பரம்பொருளே!
என்னை மீட்கும் வழி
யாதென நீயே அறிவாய்!

இரங்குவாய் இறைவா!



Saturday, March 1, 2014

When Tea itself is not my beverage, where is the question of whether it is my cup of Tea or not??? Sounds too philosophical ah!!!!!