Sunday, March 22, 2015


பதிலொன்று சொல் பாரதி!
வாழ்ந்த பாதி வாழ்க்கையில்
வீழ்ந்தாய் இல்லை -நீ
தாழ்ந்தாய் இல்லை-ஆனால்
வீதியில் புரண்ட புழுதிவீணை
ஸ்வரங்கள் அறுந்து அடங்குமுன்
உன்னை அழைத்து அழுததே-
அன்றதன் குரலினைச் செவியுற்றாயோ?
செய்விதியின் விரலினை விழியுற்றாயோ?
விதியின் வேரை பிடுங்கியெடுத்து
இடுப்பில் வேட்டியாய் அணிந்தாயோ?

சீற்றமடங்கிய சிம்மத்தின் மனம்கொண்டு
வீற்றிருக்கும் தெய்வம் போல்
முதுகின்பின் இகழ்ந்தாரின் வசையை
முண்டாசு கட்டிக் கொண்டவனே!
நாற்றமிகு சகதியின் நடுவே
சேற்றுறு செந்தாமரையாய் தாள்
உயர்த்தி நின்றாயோ?
ஏற்றமுறும் கவிதைகளை
விதையிட்டுச் சென்றாயோ?
நாற்றது கதிராகுமென நலம்
வாழ்த்திச் சென்றாயோ?

இவை யாவையும் நீ
செய்திருப்பாய் என என்
மனம் அறியும் -இந்த
மானிலமும் அறியும் எனினும்
பதிலொன்று சொல் பாரதி!
எதை முதலில் செய்தாய்
நீ........!

Sunday, March 15, 2015


குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!
குடும்பம் தொடங்கி தொழில் வரை
குதூகலமாய் கூடி கும்மியடிக்கும்
குழாயடி குடுமிப்பிடி சண்டைகளுக்கும்;
குழவிக்கும் அம்மிக்கும் இடையில் இடிபடும்
குழம்பு மசாலா கைக்குத்தல் அரிசிவகை
பெரிய மனுக்ஷ பெருமூச்சுகளுக்கும்;
குடிமகற்கும் குடிமக்களுக்கும் நடுவில்
குழப்பமாய் வியர்வையில் நனைந்து
நசுங்கி நாற்றமெடுக்கும்  ரூபாய் நோட்டிற்கும்,
கடும் வறட்சிக்கும் காட்டாற்று வெள்ளத்துக்கும்
காது கொடுக்க நேரமின்றி
கால் நனைக்கும் கரையோர கடலலைகளுக்கும்;
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்,
எட்டிப் பார்க்காத மழைக்கும்,
எட்டிப் போன மனிதநேயத்திற்கும்,
கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
நிற, இன, மத மற்றும்
பிற வன்முறைகளுக்கும் நடுவில்
இவை எல்லாவற்றையும் தாண்டி
நாளை புது உலகம் உருவாகும் என்ற
நம்பிக்கை ஒளியுடன் இன்னும்
குழந்தைகளுக்காக உயிர்த்திருக்கிறது இவ்வுலகு!

Saturday, March 14, 2015


பாதைகள் விரிய விரிய
படரும் பாலைகளும் சோலைகளும்!
பகலிரவு முடிய விடிய
தொடரும் பயணங்களும் நினைவுகளும்!
வாழ்க்கை வளர வளர
வண்ணம் தீட்டிக் கொள்கின்றன
வாசனைகளும், வார்த்தைகளும்!
கதிரும் நிலவும் காட்டாத
புதிர் வானத்தின் விடுகதையை
வின்மீன்கள் விளக்கும் விதம்
விளையாட்டுப் பிள்ளைகள் அறிவரோ?
வண்டல் மண் வடிகட்டிய
ஊற்று நீரின் பாத்திரத்தையும்
பாதையையும், பயணத்தையும்
வீற்றிருக்கும் மனிதர் அறிவரோ?
சன்னிதிக்கு உள்ளே வெளியே
கொட்டிக் கிடக்கும் வேண்டுதல்களை
சத்தியங்களை, சங்கடங்களை, பிரார்த்தனைகளை
சயனித்திருக்கும் சாமிகள் அறிவரோ?
வினாக்கள் அற்ற விண்ணப்பங்களை
விட்டு விட்டுச் செல்லும்
பக்தனின் நம்பிக்கையே அறியும்
பரம்பொருள் அருளும் வரங்களின்
வளமையும், வலிமையும், வல்லமையும்!