Saturday, January 6, 2018

கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நன்றே தொடங்கியிருக்கிறது 2018.

மத்திய மாநில அரசுகளின் முக்கிய தலைமை அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள், வங்கிகளின் பொது மேலாளர்கள், அனைத்து மாவட்ட திட்ட இயக்குனர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குனர்கள் மற்றும் வங்கியாளர்கள், நபார்டு தலைமை அதிகாரிகள் என சான்றோர்கள் நிறைந்த அரங்கில், பாரதியின் “ கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற மந்திர வாக்கியத்துடன், என் இருப்பை இந்த உலகத்திற்கு உறுதியுடன் உரக்கச் சொல்லி இந்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

நேற்று சென்னையில் நடைபெற்ற, ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனங்களுக்கான (Rural Self Employment Training Institutes –RSETIs) மாநில அளவிலான முதல் கூட்டத்தில் , இந்தியன் வங்கி சார்பாகவும், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள் சார்பாகவும்,  இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம், திருவண்ணாமலையின் இயக்குனர் என்ற முறையில், அந்த மாபெரும் சபையில் பேசக் கிடைத்த வாய்ப்பை, நான் அழுத்தமாய் நம்பும், என்னை வழி நடத்தும் பாரதியின் வைர வார்த்தைகள் மூலம் என்னை அடையாளப் படுத்திக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!!!

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற காலத்தை வென்ற கவிஞரின் வரிகள் நனவாகி கண்முன் நிகழ்கையில், "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற மகாகவியின் வார்த்தைகள் மனதிற்குள் எழுந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“ ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளையே என் டைரியின் முதல் வரியாய் நான் எப்பொழுதும் எழுதுகிறேன். என் கனவு மட்டுமல்ல, இங்குள்ள அனைவரின் கனவும் மெய்ப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவுமாக இருக்கும். அவை யாவும் நிச்சயம் மெய்ப்படும் என்று நான் முழுமையாய் நம்புகிறேன். அந்த நம்பிக்கையையே இந்த உலகத்தினர் அனைவருக்குமான என் செய்தியாக  நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறுகிறேன். இங்கு மட்டுமல்ல. வாழ்க்கையை ஒரு பெரிய கேள்விக்குறியோடு எதிர்கொண்டு, எங்கள் பயிற்சி மையத்துக்கு வரும் அனைவருக்கும், இந்த நல்வார்த்தைகளையும். நம்பிக்கையையுமே நான் எப்போழுதும் ஆழமாக தீர்க்கமாக அளித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை சாதனை மனிதர்களாக மாற்றும் ஆற்றல் இந்த மந்திரச் சொற்களுக்கு உள்ளது. அது சாத்தியப் பட்டுக் கொண்டும் இருக்கிறது.
இந்த நம்பிக்கை வரிகள் மட்டுமே அவர்கள் விரும்பும் மற்றும் இன்றைய உலகிற்குத் தேவைப்படும்  மாற்றத்தைக் கொண்டு வரும் என நான் அழுத்தமாய் நம்புகிறேன்” என்று அரங்கு நிறைந்த பலத்த கரவொலிக்கிடையே பதிவிட்டு இந்த ஆண்டை ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சியும் திருப்தியும்.

 இந்தக் கரவொலிகளை, எனக்குள் கனவுகளை விதைத்த, எனக்குக் கனவு காண கற்றுக் கொடுத்த, என் கனவுகளைத் தன் கண்களுக்குள் தாங்குகின்ற, அவற்றை மெய்ப்படுத்த எப்பொழுதும் எல்லா விதத்திலும் பாடுபடுகின்ற, என்னையே தன் கனவாகக் கொண்டிருக்கின்ற என் அன்பிற்குரிய அப்பாவிற்கு உரித்தாக்குகிறேன். Thank You Pa.

கனவு மெய்ப்பட வேண்டும்
இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்!