Tuesday, July 28, 2015



போர்வைக்குள் சுருண்டு கொண்ட
வதோதராவின் இரண்டாம் இரவின்
விடியலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்!

தூக்கமற்ற ஒரு இரவு
துக்கத்தின் அடர்த்தியை
அடைத்துக் கொண்டு
கடந்து போனது என்று
வேண்டுமானால் சொல்லலாம்!
ஏனெனில் அவ்வளவு துயரத்தை
ஏற்க முடியாத அளவிற்கு
சுமந்து கொண்டு விடிந்திருக்கிறது
இந்த காலைப் பொழுது!

என் தலைக்கு மேலிருக்கும்
கண்ணனின் மயிலிறகைப் பார்த்தவாறு
எப்போதும் போல் தான்
எழுந்திருக்கிறேன்! ஆனால்
பிரிவு ஒரு
பினந்தின்னிக் கழுகைப் போல்
என்னைச் சுற்றி வட்டமிட்டு
அச்சுறுத்திக் கொண்டிருப்பதை
இயல்பாய் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை!

எனக்கு மட்டும் தான் இப்படியா?
என்னைப் போல் ஒரு தலைமுறையே
தவித்துத் தட்டாமாலை சுற்றி
தடுமாறிக் கொண்டிருக்கிறதா
எனப் புரியவில்லை!
இந்த மனிதர் என்னை
இத்தனை தூரம் பாதித்திருக்கிறாரா?
இந்த மனிதரை நான்
இவ்வளவு ஆதர்சித்திருக்கிறேனா?
இந்த திடீர் பிரிவு
இப்படி வாட்டி வதைக்கிறதா?
எனத் தெரியவில்லை!

இரவெல்லாம் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த
இசைக் கோப்புகளில்
இனிப்பு, காரம் என எல்லாம்
இருந்ததாகத் தான் நினைவு-எனினும்
இறுதியாக ஞாபகத்தட்டுக்களில் ஏனோ
இன்று கசப்பே எஞ்சியிருக்கிறது!

அறம் பாடிவிடக் கூடாதென
அத்தனை ஜாக்கிரதையாக இருந்தும்
இத்தனை விரைவில் நான்
‘இவ்வாறு எழுதிக் கொண்டிருப்பேன்
எனக் கனவிலும் நினைக்கவில்லை!

இந்த அதிகாலைத் தூறலை அனுபவிப்பது
அவ்வளவு இலகுவானதாக இல்லை!
இந்த அடிமனதின் தேடலைக் கடப்பது
அவ்வளவு சுலபமானதாக இல்லை!

என் ,மொழி பேசிய ஒரு
எளிய அறிவாளியை;
எங்களை எங்களுக்குக்
கண்டுபிடித்துக் கொடுத்த
ஒரு மாமனிதரை;
ஏழ்மையையும் ஏளனங்களையும்
பாழ்பட்ட மதச்சமுதாயத்தின்
புறக்கணிப்புக்களையும் புறந்தள்ளி
தன் இறுதிநொடி வரை
அறிவையும் அமைதியையும்
அன்பையும், ஆற்றலையும்
ஞானச் செறிவையும்
போதித்துக் கொண்டிருந்த ஒரு
போதிமரத்தின் வேரை
விழுதாக்கி இயற்கை தனக்குள்
வாங்கிக் கொண்டதை
விழுங்க முடியவில்லை!

அதிகம் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்
என அறிவுக்குப் பட்டாலும்
அதிர்விலிருந்து வெளீவரமுடியவில்லை!
என் கண்களுக்குத் தெரிந்த,
என் அறிவுக்குப் புலப்பட்ட,
ஒரு இளைய தலைமுறையையே
எருவிட்டு உருவாக்கிய
ஒரு பெரிய மனிதரின் பிரிவு
அத்தனை எளிமையாக
ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!
இந்தத் தருணம்
இந்த நிமிடம்
அத்தனை எளிதாகக்
கடந்து போகக்கூடியதாக இல்லை!

என்னை மிகவும் பாதித்த
இரண்டு வரிகளை
கே.பாலச்சந்தரிடம் இருந்து
கடன் பெற்றுக் கொள்கிறேன்!

“இந்தப் புனிதப் பயணம்;
ஒரு புதிய சரித்திரம்!”

இதுவும் கடந்து போகும்
எனத் தெரியும்-எனினும்
இறைவா!
இறைவா!!!!!
இந்த மனதை
கொஞ்சம் அமைதிப்படுத்து!!!!

Monday, July 27, 2015


இந்த மழை
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்று தெரியாமல் போனது!
இந்த மனம்
இதற்காகத்தான் அழுதுதீர்க்கிறது
என்பது தெரியாமல் போனது!
ஆற்றாமைக்கு ஆறுதல் சொல்ல
அழுகையால்தானே முடியும்
என்பது புரியாமல் போனது!
எங்களை
கனவு காணச் சொல்லிவிட்டு
எங்கே சென்றீர்கள்
ஐயா?
“கனவு காணுங்கள்”
என்ற தாரக மந்திரம்
ஒரு புதிய தலைமுறையையே
உருவாக்கியது என்பதை
யாரால் மறுக்க முடியும்?
இந்தியா 2020ல்
இவ்வுலகின் வல்லரசாகும்
என்ற உங்கள்
கனவு நிஜமாக
இன்னும் ஐந்து வருடங்களே
இருக்கையில் இவ்வளவு
அவசரமாய் ஏன் சென்றீர்கள் 
எங்கள் ஆசானே?
ஏவுகணைகளின் தந்தையே!
ஏழைக்குடிசையில் பிறந்தாலும்
ஏற்றமிகு எண்ணமும்
செயலும் இருந்தால்
ஏட்டில் ஏறலாம்;
நாட்டின் தலைவனாகவும் ஆகலாம்
என்று வாழ்ந்து காட்டிய
என்பத்து மூன்று வயது இளைஞரே!
என்ன அவசரமோ?
இளைஞர்கள் மத்தியில்
விரிவுரையாற்றிக் கொண்டே
விடை பெற்றீர்?
உங்கள் கையசைவைப் பெற்ற
உற்சாகப் பெருமிதத்தில்
உத்வேகத்துடன் நாங்கள்
நின்ற தருணங்களை
எங்கள் கல்லூரி வளாகம்
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கும்
உதாரண புருக்ஷரே!
உங்கள் பாதம் பட்ட மண்
எங்களைப் போல் பலரை
கனவு காண
வைத்துக் கொண்டிருக்கிறது!
கண்ணீரால் நிரப்பிவிட முடியாது!
நீங்கள் கண்ட
கனவுகளால்
இட்டு நிரப்புகிறோம்
நீங்கள் விட்டுச் செல்லும்
வெற்றிடத்தை!
எங்கள் கண்களின் வழியே
உங்கள் கனவுகளின் வழியே
நீங்கள் நீடூழி வாழ்வீர்!
ஆட்சி முடிந்த நாளன்றே
ஆசிரியராய் களம் கண்ட
அரசியல் பேசாத அரசியலாளரே!
அணுகுண்டும், ஏவுகணை ஆராய்ச்சியும்
அமைதிக்கு அவசியம் என்று
அறிவியல் போதித்த ஆசானே!
ஏழ்மையினின்று ஏணியேறி
ஏழு கடல் தாண்டிய பின்னும்
எளிமை போதித்த
எம் பாரதரத்னாவே!
கவலைப் படாமல்
சென்று வாருங்கள்!
எங்கள் கனவுகள் மெய்ப்படும்!
சத்தியமாய்,
உங்கள் கனவுகளும் கூட!
இந்தச் சுமையை
இறக்கிவைக்க முடியவில்லை!
இறுதி வணக்கங்கள் எங்கள்
இந்தியாவின் முதல் குடிமகனே!
இப்படியன்றோ வாழ வேண்டும்!
இப்படியன்றோ சாக வேண்டும்!
விடை தருகிறோம்
விஞ்ஞானக் கவிஞரே!
இனி
நாங்கள் சுமக்கிறோம்
உங்கள் கனவுகளை
எங்கள் கண்களிலும்,
அக்னிச் சிறகுகளை
எங்கள் தோள்களிலும்!
Can’t Substitute you Sir
We Will Miss You Forever!
Rest In Peace
Bharatratna Dr. A.P.J.Abdul Kalam!!!








நான் தனியாகத் துவைத்த துணிகளை
நாங்கள் சேர்ந்து அலசிக் கொண்டிருக்கிறோம்!
இரண்டாம் நாள் விடிந்துவிட்டது;
இன்னுமா? என்கிறேன் நான்!
என்ன? போதுமா? என்கிறாய் நீ!
போதுமெனச் சொல்வேனோ என்
போதி மழையே!
யாதும் உயிர்க்க- இங்கு
யாவும் தழைக்க
பொழியும் வரை பொழி!
வழிகள் தெளிவாகட்டும் என்கிறேன்!
விழிவளி எங்கும் எதையும்
விட்டு விடாமல்
வழிய வழியத் தொடர்கிறது,
மழையின் பாடல்!!!

“புத்தம் புது காலை;
பொன்னிற வேளை…..”

Sunday, July 26, 2015

Tu Chahiye




Its drizzling all over;
Its drizzling all over!
Making me breathless
Everytime you come
Embracing me in and around
Drizzling all over!
Oh!
Its drizzling all over!

Framing every moment
Of our Togetherness
Not uttering a word though,
Not glancing for a while though,
Framing all of them
Inside my Eyes
To let it replay.
Oh!
Its drizzling all over!

The Hangover persists
Rewinding every beautiful
Precious Crazy moment within
Drenching me all over!
Oh!
Its drizzling all over!
N’ I wish
It lasts forever!!!

The Desire gets stronger
To have you near forever;
The Want gets denser
To say, Yes!
I Want you Here!
Right now! Right now!
I Want you Here!
Forever! Forever!!!

Oh!
Its Drizzling All Over! N’
Let it Last Forever!!!!

It’s a rainy Baroda Morning!!!!

Saturday, July 25, 2015


சாரலாய்த் தொடங்கி
தூறலாய் பெருமழையாய்
ஊறும் அமுதாய்
தீராக்காதலுடன் என்னை
அணைத்துக் கொண்டிருக்கிறது
நீராய் மழைப்போர்வை!

நாள் முழுவதும் தொடர்ந்த
பால்மழைப் பேச்சு
பரவசமாய் மனமெங்கும்
பரவிக் கிடக்க,
என்னைச் சுற்றிலும்
புன்னகை வீசிப் போகிறது
காதல் மழை!

நாளை ஒருவேளை
சளி பிடித்தால்
என்ன செய்வது?
நனைவதே கடனென,
என் சிறுபாதங்களால்
தண்ணீர்ப் பாதையை
அடியடியாய் அளந்தவாறு
மழையுடன் கைகோர்த்து
நகர்வலம் வருகிறேன்!

இத்தனை நாளைய மெளனத்தையும்
சுத்தமாய் துடைத்துவிட்டு
மொத்த நாளின்
அத்தனை நிமிடங்களையும்
என்னைச் சுற்றிப் பொழிந்த
வெண்ணெய் மழைக்கு
என்னைத் தவிர நான்
என்ன தர?

நனைகிறேன்!
கரைகிறேன்!
நானே மழையாகிறேன்!!
ஓயாத மழைப் பேச்சு
பாடலாய் உள்ளே
ஓடத் தொடங்குகிறது!

ஏனெனத் தெரியவில்லை!
இந்த நிமிடம்
இளையராஜாவை இணையில்லாமல்
அளவில்லாமல் அவ்வளவு
பிடித்துப் போகிறது!!
பியானோ கசிய ஆரம்பிக்கிறது…
“ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…”
Love this Amazing Magical moment!!!
Love You Raja Sir!!!
You are the Greatest!!!!



உருண்டு தவழ்ந்து தளிர்நடை பழகும்
சிறுமழலையாய் தூறிக் கொண்டிருக்கிறது
திரள் மேகத்திரையினுள் வதோதரா வானம்!

 காதுக்கு;ள் கசியும் Te Amo
காலையைக் கனவுகளுடன்
விடிய வைத்துக் கொண்டிருக்கிறது!

என் முதல் கவிதையின் போது
வகுப்பின் வெளியே தூறிக்கொண்டிருந்த
மழையின் சாயலுடன் இந்த
அழகிய காலை விடிந்து கொண்டிருக்கிறது!

எனக்கும் வெண்ணிலாவுக்கும் இடையிலான
முதலும் கடைசியுமான ஊடலை
முடிவுக்குக் கொண்டு வந்த
கடிதத்தை நினைவுபடுத்தியவாறு என்
கண்களுக்கு வெளியே நட்புடன்
தூறிக் கொண்டிருக்கிறது சாரல்மழை!

நேற்றிரவின் கடைசித்துளி விழிப்பின்போது
காதுகளுக்குள் வழிந்து கொண்டிருந்த
“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை”
கண் முன்னே காலையை
மென்தூறலாய் தூவிக் கொண்டிருக்கிறது!

மனமும் மழையும் ஒன்றினையும்
கணத்தினில் கண்கள் பனிக்க
நினைத்துக் கொள்கிறேன்!

ஆதவன் வெளிவரவில்லை- ஆனால்
ஆண்டவன் பேசத் துவங்கிவிட்டான்’
கேள்வியின் நாயகன் நான் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது
எத்தனை பெரிய வரம் என?!!

காஞ்சனை கேட்கும் போது
வஞ்சனை ஏன் என கண்ணனின்
கண்கள் கார்மேகம் எங்கும்
புன்னகை பூக்கத் தொடங்கிவிட்டன!

இந்த மயக்கும் மழைக்காலையில்
இறைவனிடம் மீண்டும் கோருகிறேன்!!
இன்னும் கொஞ்சம் சிரி கண்ணா!!
இந்த மழைக் காலம்

இப்படியே தொடரட்டும்!!!!

Friday, July 24, 2015


மழை பொழிந்த பூமி இஃதென்றால்
பிழையாகிப் போகக் கூடும்;
வறண்டு போனது என் வானம்;
மறந்து போனாயோ கண்ணா நீ?

என்னிடம் ஏதும் சொல்லாமல்
எங்கே சென்றாய் நீயென
தேடித் தொலைந்து கொண்டிருக்கிறேன்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

எங்கும் கேட்காத உன் குரலுடன்
எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன
என் செவிகள்!
கேட்க ஏதுமின்றி
தேடித் தொலைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

எங்கும் தென்படாத உன் பார்வையுடன்
எங்கோ மங்கி மறைந்தன
என் விழிகள்!
பார்க்க ஏதுமின்றி விழி
வேர்த்துக் கரைகிறேன் நான்;
எங்கே சென்றாய் கண்ணா நீ?

உன் குழலோசையும் குரலோசையும்
என் உயிர் கேட்கும் மொழியறியும்;
உன் விழியசைவும் விரலசைவும்
என் உணர்வுறைவிக்கும் வழியறியும்;
அழுது நனைத்த இமைகள் உன்
அத்தனை அசைவினையும் அறியும்
எனில் கண்ணாமூச்சி போதும் கண்ணா.
என் கண் முன்னே வந்து விடேன்!
என்னையும் சேர்த்து
இந்த உலகம் உயிர் கொள்ளட்டும்!!!

Wednesday, July 22, 2015




நினைத்தாயோ?
நனைத்தாயோ?
விடாமல் தூறிக் கொண்டே
இருக்கிறது வானம்!

கரைந்தேனோ?
நனைந்தேனோ?
நில்லாமல் ஓடிக் கொண்டே
இருக்கிறது மேகம்!

உன் பாடல்களுக்கும்
என் தேடல்களுக்கும்
சேர்த்துதான் இதழ்கள்
பூத்திருக்கின்றன எனினும்
இமைகளுக்குள் இன்னும்
இடையறாத கண்ணாமூச்சி!

கடக்கும் ஒவ்வொரு முறையும்
கவனமாய் நினைத்துக் கொள்கிறேன்!
கண்ணனுக்கும் எனக்கும்
என்ன உறவென்று?

ராதைக்கும் சீதைக்கும்
கோதைக்கும் அந்த 
அவதார புருக்ஷனுடன்
என்ன உறவோ?
அதுவே! அதுவே! என்று
அசரீரி கேட்கிறது!!!

நம்ப மறுக்கும் மனதிற்குள்
நான் மீண்டும் மீண்டும்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
அதுவா? அதுவா?
அதுதானா என்று!

அசரீரி ஒருபுறம் இருக்கட்டும்;
சரி!சரி! கண்ணா!
நீயே சொல்லிவிடேன்!
நமக்குள் என்னதான் என்று!!!

Tuesday, July 21, 2015


காலம் கரைவதறியாமல்
கதைபேசிக் கொண்டிருக்கும்
அலைபேசிவாசிகளுக்கிடையே நான்
அனுதினமும் உன்னிடம்தானே
பேசிக் கொண்டிருக்கிறேன் கண்ணா!
அடைமழைக் காலமிது;
அடம் பிடிக்காமல் உள்ளே வந்துவிடு!

சண்டையிட எனக்கும்-என்னைச்
சமாதானம் செய்ய உனக்கும்
இரு கண்கள் போதுமானதாக இருக்கையில்
இந்த அர்த்தமற்ற பேச்சுகள்
வீண்தான்! எனினும்
கண்களை எனக்குக் கொடுத்துவிட்டு
கனவுகளை உன்னுடன் எடுத்துச் செல்வாயோ!

ஒற்றை மழைத்துளி சட்டெனத் தூறலாகி
கற்றையாய் என்னைக் கவர்ந்து போனதே;
அழகான மழைச்சாரல் என்னை மட்டும்
அணுஅணுவாய்ப் நனைத்துப் போனதே!
அதிசயித்துப் போகிறேன்! அட!!!!
என்னைப் பார்த்து நீ
புன்னகைத்தாயா என்ன?

ஒரு வார்த்தை, சிறு புன்னகை
உயிர் நனைக்கப் போதும்தான்;
இன்னும் கொஞ்சம் சிரியேன்!
இந்த அகிலம் பிழைத்துப் போகட்டும்!!1

என் மழையே! செங்கதிரே!
வெண்பனியே! கண்மணியே!
என்னுடன் இரு என்பதைத்தவிர
உன்னிடம் வேறென்ன கேட்பேன் நான்?

குறுநகையால் நனைத்துப் போனால்
குடை யார் பிடிப்பதாம்?
இதயத்துக்குள் வந்து விடு கண்ணா!
இந்த மழைக்காலம் இப்படியே தொடரட்டும்…………..

Monday, July 20, 2015



எங்கெங்கோ தேடி அலைகிறேன்;
என்னருகில்தான் நீ அமர்ந்திருக்கிறாய்;
ஏதும் பேசாமல் நழுவும் தருணங்களில்
ஏதேதோ பேசிச் சிரிக்கிறாய்;
உன்னத உணர்வொன்றால் என்
உள்ளத்தைக் கழுவுகிறாய்;
கள்ளப் பார்வையொன்றால் என்னை
கடனாளியாக்குகிறாய்!

என்ன வேண்டுமாம் என் கண்ணனுக்கு
என்றெண்ணுகையில் மின்னலென மறைகிறாய்;
காத்திருப்பின் கனிகளால் என்னைப்
பூத்திடச் செய்கிறாய்;
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே என்னைச்
சேர்த்தெடுத்துக் கொள்கிறாய்;
பார்க்காத தருணங்களிலும் உன்னில்
கோர்த்தணைத்துக் கொள்கிறாய்!

உன் நீல விழிப் பார்வைகளில்
புலர்கின்றன என் நாட்கள்;
உன் ஈர இதழ் புன்னகைகளில்
மலர்கின்றன என் பூக்கள்;
அங்குமிங்கும் அலையும் மனதிற்குள்
உன்னை வென்றுவிட முனைகிறேன்;
எங்கெங்கும் தெரியும் உன் பிம்பங்களில்
என்னைக் கண்டறிய முயல்கிறேன்;
எள்ளி நகையாடி என்னை
ஏளானம் செய்கிறாய்;
தள்ளி நின்று கண்ணில்
தனல் மூட்டிச் செல்கிறாய்!

என் செய்தால் எனக்கு
உன்னைத் தருவாய் என் கண்ணா!
என் செய்தால் உனக்கென
என்னைப் பெறுவாய்?
எண்ணி மாளவில்லை
ஏராளமாய் கேள்விக்கணைகள்;
எழுகின்றன வினாக்களுக்கிடையே
எங்கிருந்தோ விழுகிறது ஒற்றை மழைத்துளி!
என்னிடம் பேசியது நீ தானா?
என் கண்ணா!
என்னிடம் பேசியது நீயே தானா?

Sunday, July 19, 2015


மொழியறியா நிலமொன்றில்
முகம் தொலைத்து
வாழ்தல் கேட்டேன்;
தந்தேன் என்றே என்னை
தன் பார்வைக்குள் தொலையச் செய்தான்!
தந்தவன் யாரென்றேன்;
தந்தையென்றே சொல்லி நின்றான்;
என் தந்தை வீட்டிலிருக்க
யாரிந்த புதுக்குரல் என்றேன்;
உனக்கு மட்டுமல்ல- நான்
உலகத்துக்கே தந்தை என்றான்!

உடுக்கையும், உருத்திராட்சமும்
உடுத்திய புலித்தோலும்
புஜங்களில் பாம்பும்
பூசிய திருநீறும்
பிறையணி கூந்தலும்
இறையவன் யாரென
சிந்தைக்குச் சொல்லின-நான்
மந்தைக்குள் மாயமானேன்!
விரல் பற்றி நடக்கும்வரை
தொலைதல் தொலைதலாமோ?

தந்தையின் பார்வைக்குள்
பத்திரமாய் தொலைந்து போதல்
எத்தனை பெரிய வரமென்று
எத்தனை பேருக்குத் தெரியும்?
Seeing all that is happening around,
Seeing all the torment;
Telling to my Heart n mind!
For once n again n again....
Its blessed to be Single!!!
No Commitments;
No Tears;
No Hurts;
No Pain;
No expectations;
No Need of Secret Talks;
No Need of Restless Walks;
No Need of Prolonged fights;
No Need of High decibel Quarrels;
No Need of Hungerless hours;
No Need of Sleepless nights;
No Need of meaningless dreams;
Don't Ever Fall in Love!!!
Never!!!!! Never!!! Never!!!!

விழித்தெழுகையில் செவிகளில்
விடிகிறது உன் குரல்;
வெளியில் வந்து விடாதேயென
விழிகளுக்குள் விரட்டிப் பிடிக்கிறேன்
உன் கனவுகளை!

அடர்த்தியாய் தொடர்ந்த என்
இரண்டாம் தூக்கத்தில்
அடம்பிடித்து வந்தமர்ந்த உன்
முரண் கனவுகளை
புன்னகையாய் மொழிபெயர்த்துத் தருகிறது
என் தலைக்கு மேல்
அசைந்து கொண்டிருக்கும்
உன் மயிலிறகு!

எஞ்சியிருக்கும் உறக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
துடைத்தெடுக்கையில் எங்கிருந்தோ
தஞ்சம் கேட்கிறது ஒரு
ஏகாந்த குயிலோசை!
குரலில் வழிவது குயிலோ?
உன் குழலோ? என்பது
கண்ணா! உனக்கே வெளிச்சம்!

புரியாத உன் மெளனங்களை
மொழிபெயர்க்கும் வழி தெரியாமல்
விடியலுக்குள் நுழைகிறேன்!
மொழி தேவையற்ற புன்சிரிப்பொன்றை
மென்மையாய் தெளிக்கும்
எதிர் சாளர பெண்மணியிடம்
எதிர்பாராமல் புரிபடுகிறது
எனக்கான உன் நேசம்!

நீ தெளித்த நம்பிக்கையில்
நீர் தெளிக்கும் முகில்களுடன்
வெளிச்சமாய் என் நாள்
விடிந்தே விட்டது!

Tuesday, July 14, 2015


மூன்றாண்டுகள் முழுதாய் ஓடிவிட்டதை
மூளை நம்ப மறுக்கிறது!
எங்களுடன் நீ இல்லை என்பதை
எப்படி நாங்கள் நம்புவது?

எம் பெற்றோருக்கு நன்மகனாய்;
சகோதரருக்கு நற்றோழனாய்;
எனக்கும் நற்சகோதரனாய்;
எமக்கு எல்லாமாய் இருந்தாய்;
எப்போதும் இருப்பேன் எனத்தான்
எப்போதும் சொன்னாய்!

எம் இல்லத்தின் காவலனாய்
எம் தேவைகளுக்குச் சேவகனாய்
எம் சுமைகள் யாவையும்
எவ்வாறும் சுமந்து சிரிக்கும்
எல்லாமும் ஆன இறைவனாய்
நீ இருந்த வரை…
சுமைகள் சுமைகளாய் தெரியவில்லை!
இப்பொழுதன்றோ உணர்கிறோம்
இறையெனப்படுவது யாதென்பதை!

நீ இல்லாத இந்த
நீண்ட மூன்று ஆண்டுகளிலும்
உன்னை நினைக்காத நாளில்லை!
பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை;
நீ விட்டுச் சென்ற வீடு
அப்படியேதான் இருக்கிறது!
நீங்காத உன் நினைவுகளுடன்
நாங்கள்தான் உனக்காக
நித்தம் அழுது கொண்டிருக்கிறோம்!
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

நிறைய வளங்களுடன் வாழ்க்கை முழுவதும்
நிறைந்த மகிழ்ச்சியுடன்
நிறைவாக வாழ ஆசைப்பட்டவன்
நீ என்பது எமக்குத் தெரியும்!
எது நிகழ்ந்திருப்பினும்
நீ சென்றிருக்கக் கூடாது சகோதரா!

இந்தக் கண்ணீர் உன்
பாதங்களைச் சேரும் என்ற
நம்பிக்கையுடன் எழுதுகிறேன்!
ஏன் நீ சென்றாய்
என்பது இன்று வரை
புரியாத புதிராய்
விடையற்ற வினாவாய்
ஈர மரத்தின் கரையானாய்
அரித்துக் கொண்டேயிருக்கிறது!
மறக்க முடியாமல்
மருகிக் கொண்டிருக்கிறோம்!

எப்பொழுதும் நான் உம்முடன் இருப்பேன்
என்ற உன் வாக்கு
பொய்யாதல் சாத்தியமோ?
இப்பொழுது இக்கணத்தின் துயரத்தின்
இணையற்ற அடர்த்தியை
எங்கோ இருந்து நீ
பார்த்துக் கொண்டிருப்பாய்தானே!

எம் வீட்டின் எல்லா இடங்களிலும்
எம் வாழ்வின் எல்லா தளங்களிலும்
எம் நாட்களின் எல்லா நொடிகளிலும்
எம்முடனே நீ இருக்கிறாய்
என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்!

எம் நம்பிக்கையை, பலங்களை
எடுத்துக் கொண்டுவிட்ட இந்த நாளை
மறக்கத்தான் நினைக்கிறோம்!
அஞ்சாதே! உங்களுடன் நானிருக்கிறேன்!
எனும் உன் குரல்
எங்கிருந்தோ ஒலிக்கிறது!

எம்மோடு,
எமக்காக,
எம்முள்,
எம்முடன்,
எப்போதும்,
எங்கும்
நீ இருக்கிறாய் என்ற
நித்திய நம்பிக்கையுடன் தான்
இந்த வாழ்க்கையைத் தொடர்கிறோம்!!!!
MISS YOU PALANI!!!!
REMEMBERING 14.07,2012!
MAY YOUR SOUL REST IN PEACE!!!!!!!!!!!!!