Tuesday, December 25, 2012


நாளை உலகம் இல்லையென்றானால்
உயிரே என்ன செய்வாய்?
கேள்வி: கவிப்பேரரசு
பதில் : நான்

அம்மா அப்பாவுடனும்
அன்பு சகோதரர்களிடமும்
அலைபேசியில் சில நிமிடம்!

ஆயிரம் மலர் தேடி
அதில் உறுதேன் நாடி
ஆசையாய் பருக சில நிமிடம்!
அருந்தி மகிழ சில நிமிடம்!

இடைவெளியில்லாத நல்லிசை
இடையூறற்ற மெல்லிசை
இடையறாதோடும் முழு நேரம்!

ஈகைக்கென சில நிமிடம்!
ஈடேறாத ஆசைகளுக்காக சில நிமிடம்!
ஈன்ற பெற்றோரையும்
தாங்கிய நன்னிலத்தையும் நன்றியுடன்
நினைத்து சில நிமிடம்!

உரையாடலாகவோ உறைந்த மெளனமாகவோ
உற்ற தோழர்க்கென சில நிமிடம்!
உருப்படாத அச்சம் துடைக்க
உருப்படியாக சில நிமிடம்!

ஊர் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் சில நிமிடம்!
ஊட்டி வளர்த்த ஆசிரியர்களையும்
உள்ளத்தை வளப்படுத்திய நூல்களையும்
உவகையுடன் நினைவுகூற சில நிமிடம்!

எல்லாம் கடந்த போதும்
எதுவும் நிலையில்லை என்ற
எளிய உண்மைக்கென சில நிமிடம்!

ஏணியாக இருந்தவர்களுக்காக சில நிமிடம்!
ஏமாந்த நொடிகளுக்காக சில நிமிடம்!
ஏகாந்த தருணங்களில்
எழுதிய கவிதைகளுக்காக சில நிமிடம்!
எனக்கே எனக்கான ஒரு
கவிதைக்காக சில நிமிடம்!

ஐம்புலனடக்கி அனைவருக்காகவும் ப்ரார்த்திக்க
ஆண்டவனிடம் சில நிமிடம்!
ஐந்திணைகளில் பார்த்ததை பிடித்ததை
அவசரமாக அசைபோட சில நிமிடம்!

ஒரு வாறாக நாள் முடியும்
ஒன்றுமற்ற வெளியில்
ஒன்றுபடும் நற்றருணத்தில்
மனதில் ஏதுமற்றதொரு மந்திர நிமிடத்தில்
நின்ற இடத்தில் மண்டியிட்டு
நிலத்தில் வீழ்ந்து முத்தமிட்டு
உலகத்தார் எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்பேன் சில நிமிடம்.

செய்த பிழைகளுக்காகவும்
செய்யாத நல்லவைகளுக்காகவும்
மண்ணில் வந்த நாள் தொட்டு
மறந்தும் நான் செய்த
குற்றங்களுக்காகவும், தவறுகளுக்காகவும்,
சொற்களாலும், செயல்களாலும்
சுட்டுக் கடந்த தருணங்களுக்காகவும்
நேரம் போதா வேளையிலும்
நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து
புவி புகும் முன்
நான் கேட்பேன்
என்னை மன்னிப்பாய்
எனச் சில நிமிடம்!

ஓய்கின்றது உலகம் என
ஓடுகின்ற ஊர் நடுவே
அலமாரியை அவசரமாகக் குடைந்து
தேடியெடுத்த தேசியக் கொடியுடன்
தேசிய கீதம் தனை
தெளிவாகப் பாடியபின்
தேகம் சாய்ப்பேன்
தாய்மண்ணில் சில நிமிடம்!

விட்ட தருணங்களுக்காய்
வருத்தம் இல்லை!
பட்ட துயரங்களுக்காய்
புலம்பல் இல்லை!
செய்த நற்செயல்களுக்காக
சேகரித்த நன்றிகளை
பிறப்பின் பலனாய்
சிறப்பாய் நினைத்துக் கொண்டு
ஓம் என்ற ஓசை
உயிரெங்கும் ஒலித்திருக்க
நல்லதொரு இசையுடன்
நல்ல தருணங்களுக்கான நன்றியுடன்
நாவில் நற்றமிழுடன்
ஓய்ந்தமர்வேன் ஒரு புன்னகையுடன்
கடை நிமிடம்!

வாழ்க்கையில் நான் உருப்படியாக
வாழ்ந்த நாள் இது ஒன்றே
என்ற நிம்மதியுடன்
கனவுகளுடன் உறங்கிப் போவேன்.

நாளை உலகம் இல்லையென்றானால்
நான் இழக்க ஒன்றுமில்லை!

Sunday, December 16, 2012



 கடல் படப் பாடல்கள் கேட்டேன். மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம் நல்ல கவிதை வரிகள், நல்ல இசைக்கோர்வையோடு  அருமையான ரஹ்மான் மெலடி டூயட். சிப்பியின் ஒரே முமுமையான முத்து. சித்திரை நிலா குறை சொல்ல முடியாத தந்தையின் தாலாட்டு. நீயில்லையேல் நான் என் செய்வேன் எனத் தொடங்கும் அன்பின் வாசலே எனத் தொடங்கும் பாடல் தொடக்கத்தின் எதிர்பார்ப்பைத் தொடக்கத்தோடே நிறுத்திவிட்டு, கிறிஸ்மஸ் கேரல் ஆகிவிடுகிறது, மகுடி மகுடி.. பாடலில் நீங்கள் கூடவா ரஹ்மான் சார்! என லேசாக சலிக்கத் தொடங்கிய மனசு அடுத்த பாடலில் கிட்டத்தட்ட தலையிலடித்துக் கொண்டது. மனசைத் தொறந்தாயே! எனத் தொடங்கும் அடியே பாடல் எந்த மொழிக்கு அல்லது எந்த மாநிலத்திற்கு அல்லது எந்த நாட்டிற்கு  ரஹ்மான் சார்? கேள்வி எழும்புகிறது. என்ன செய்ய? VTV’S AAROMALE  வை ஒட்டிய ADIYE SONG AMAZING என்று FB, TWITTER தொடங்கி YOUTUBEல் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் வரை, தயவு செய்து நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கும்கி பாடல்கள் கேட்டீர்களா? எல்லாமே ஆஹா ரகம்.  அய்யய்யய்யோ என ஒரு பாடல். AYYAYYYO AMAZING!!! அதுதான் AMAZING. 
சரி! கடல் என்று பெயரிடப்பட்டு, கடல் சார்ந்து எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படத்தில், ஒரு கடல் பாட்டாவது இருக்க வேண்டுமே எனத் தேடினால், இருக்கிறது ரஹ்மான் அவர்களே பாடிய ஏலே கீச்சான் என்ற பாடல். என்ன அது கொங்கனி மொழியில் கோவாவிற்காக இருக்க வேண்டியது. தவறிப் போயோ மறந்து போயோ தமிழ் படத்தில் வைத்து விட்டீர்களா ரஹ்மான் சார்? எல்லாம் கிடக்கட்டும். ஊரே கொண்டாடுவதாகக் கூறப்படும் நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலை நானும் கேட்டேன். நொந்து விட்டேன். இப்படிச் சொல்வதற்காக  மன்னித்து விடுங்கள் திரு. ரெஹ்மான் அவர்களே! இதை நான் ஒரு முறை கேட்டு விட்டுச் சொல்லவில்லை. ஒரு வேளை, கேட்கக் கேட்க பிடிக்கக்கூடும் என ஒரு மாதமாகக் காத்திருந்து வெறுத்துப் போன விரக்தியில் தான் சொல்கிறேன்.

 ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பாடல் கூட இதே உணர்வுக்காக எழுதப்பட்ட, இசைக்கப்பட்ட பாடல்தான். பாடலுக்குத் திரையில் உயிர் கொடுத்தவர் ராதா அவர்கள். படத்தின் பெயரைச் சொல்லாமலே யாவருக்கும் புரித்திருக்கும். முதல் மரியாதைக்குரிய பாடல்தான் அது. அவர் மகள் நடிக்கும் முதல் படத்தின் பாடல் REALLY UPSETTING N DISAPPOINTING. காலையில் ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டேன். இன்று எழுதியே ஆக வேண்டும் என்று அமர்ந்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, இரு பன்பலைகளில், சர சர சாரக் காத்து பாடல் காதுகளை வருடிப் போகிறது. இரண்டுக்கும் ஒரே பாடலாசிரியர்தான். இசையமைப்பாளர்கள் தான் வெவ்வேறு. “ வாகை சூட வா”  இசையமைப்பாளருக்கு உங்கள் அளவுக்கு உலக அனுபவம் இல்லையெனினும்,  உணர்வுகளைத் தொடும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  கும்கி இசையைக் கேட்டீர்களா? அவையெல்லாம் பாமரர்களின் இசை என நீங்கள் கருதுவதாகவதாகவே வைத்துக் கொண்டாலும், இது பாமரர்களைப் பற்றிய, பாமரர்களின் படம் தானே! இல்லையா? இசையால் உலகை கட்டிப்போட்டிருந்த தங்களுக்கு என்னவாயிற்று ரெஹ்மான் SIR?

இந்தப் பாடலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.  எந்த தொடர்ச்சியோ, நிறுத்தங்களோ இல்லாமல், ABRUPT ஆக, VERY VERY DISAPPOINTING MR. REHMAN. குரல் கொடுத்தவரின் ஹாய் என்ற SIGH வேறு கடுப்பேற்றுகிறது. நெய்தல் மட்டுமல்ல! குறிஞ்சி, முல்லை, மருதம் இவை திரிந்த பாலை என எத்திணையைச் சேர்ந்த பெண்ணின் பாடலும் இல்லை இது. 2002ல் இசை வெளியாகி, படமாக வெளிவராத, இளையராஜாவின் காதல் சாதியில் ஒரு பாடல். “ என்ன மறந்தாலும், உன்ன மறக்க மனம் கூடவில்லையே” என்று மஹதிக்கு வாழ்வு கொடுத்த ஒரு பாடல். நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இன்னும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். பிறகு நம் மண்ணிற்கேற்ற மாதிரி இசையமைக்க அமருங்கள். இதில் EGO எதுவும் தேவையில்லை.. ஹாலிவுட், பாலிவுட் தாண்டி, உங்களை உருவாக்கிய, உலகுக்கு உயர்த்திக் காட்டிய தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொஞ்சம் திரும்பி வாருங்கள் PLEASE! PLEASE! PLEASE! IF TAJMAHAL, KARUTHAMMA AND KIZHAKKU SEEMAIYILE COULD BE YOURS, EVEN MORE N MORE CAN BE. WISH YOU ALL THE BEST. WE ARE WAITING FOR THE BETTER.

பாடல்கள் அனைத்தையும் கேட்டு முடித்ததும் ஒன்று மட்டுமே தோன்றுகிறது. மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம்…..இது போதுமே! எனக்கு இது போதுமே எனத் தொடர்கிறது பாடல். ரஹ்மான் சார், இது போதுமே எனக்கு என்று, இந்தப் படத்திற்கென மெனக்கெடத் தவறிவிட்டாரோ? SORRY RAHMAN SIR! WE EXPECTED MORE FROM YOU.

Tuesday, December 11, 2012



கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்-நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர்
அகழி வெட்டினான்.
சொல்விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்.
சுதந்திர மென்றதன்மேற்
கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்.
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சியவன் பெயர்.
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர்.
அவன் பெயர் பாரதி.

மகாகவிக்கு மகோன்னதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, December 9, 2012



இது கண்ணாடியின் 200வது பதிவு. இது இசை சார்ந்ததாக, ஒரு நல்ல கலைஞனைப் பற்றியதாக, நல்ல இசையை வழங்கும் நல்ல மனிதருக்காக அமைந்தது என் மனதிற்கு நிறைவு தருகிறது.

இன்று குழலிசையால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும், அருண்மொழி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. நெப்போலியன் அவர்களின் பிறந்தநாள்.

முறைப்படி இசை ஏதும் கற்றறியாத, இளையராஜாவைக் கேட்டு வளர்ந்த எனக்கும் இசைக்கும் இணைப்புப் பாலமாக எப்பொழுதும் இருந்திருப்பதும், இருந்து கொண்டிருப்பதும் குழலும், வயலினும் என்றால், அந்த குழலோசை என நான் உணர்ந்திருப்பது யாவும் திரு. நெப்போலியன் அவர்களுடையதே ஆகும். குழலும் வயலினும் இல்லாமல் இசைஞானியின் இசை ஏது? அவரிடம் மட்டும் எப்படி  இப்படி குழைந்து, வெள்ளமாகி, அலை அலையாக ஆர்ப்பரிக்கின்றன என வியந்திருக்கிறேன். அந்த குழலுக்குச் சொந்தக்காரர் தாங்கள் என அறிந்தபோது, ஆச்சர்யப் பட்டேன். இருக்கும் இடமே தெரியாமல் மென்மையாக அமர்ந்திருக்கும் இந்த மனிதருக்குள்ளிருந்தா இந்த மயக்கும் இசை வடிவம் பெறுகிறது என வியந்து போனேன். ஆனால், நீ தானா! நீ தானா! எனத் தங்கள் குரலில் திரு. பார்த்திபன் பாடுகையில் உணர்ந்தேன், குழல் மட்டுமல்ல, குரலும் கூட இந்த மனிதருக்கு மாபெரும் வரம்தான்.

  விடியல் முதல் இரவு வரை என் மகிழ்ச்சி, மலர்ச்சி, அயற்சி, அழுத்தம், அனல் கணங்கள் யாவையும் என் மழலை கண தாலாட்டாக இருந்து தணிய வைத்து, தென்றலாக வருடிக் கொடுத்து, என் நாட்களை அழகாக மாற்றியமைக்கும் திறன் குழலுக்குள்ளதை உணர்ந்திருக்கிறேன். நன்றி சகோ. திரு. நெப்போலியன் அவர்களே! முதல் மரியாதையின் அந்த நிலாவத் தான் பாடலை அண்மையில் ஒருநாள் காலையில் கேட்க ஆரம்பித்து, நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்து மயங்கிக் கிடந்தேன், அந்த PRELUDE. AWESOME SIR! அதைப்போலவே! சின்னக் கண்ணன் அழைக்கிறான், ஏரிக்கரைப் பூங்காற்றே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி என இசைஞானியின் MASTERPIECE யாவிலும் நான் தங்களையும் தொடர்பு படுத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஒரு வேளை இந்தப் பாடல்களின் இசைக்கோர்வையில் தாங்கள் பங்கு பெறாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இசைஞானியின் ராஜா ராஜாதான் மேடை நிகழ்ச்சியில், மணிக்கணக்கில், மேற்சொன்ன மற்றும் சொல்லாமல் விட்டுப் போன பாடல்களுடன், எங்களை ஏதோ ஓர் மந்திரத்தால் கட்டிப் போட்டது போல் மயக்கி அமர வைத்திருந்ததில் தங்கள் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் ஐயம் ஏதுமில்லை. THANK YOU SO MUCH SIR. GOD BE WITH YOU ALL THE TIME.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் SIR! தங்கள் குழல் போல், குரல் போல், அருண்மொழி போல், இந்த நாளும், இனி வரும் எல்லா நாட்களும் இறைவனின் நல்லருளுடன் இனிதாக அமைய, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் வாழ்த்துக்கள், தங்களுக்கான ப்ரத்யேகமான ப்ரார்த்தனைகளுடன். MANY MORE HAPPY RETURNS OF THE DAY SIR. WISH YOU THE HAPPIEST, BLESSED AND MOST MEMORABLE BIRTHDAY.

இந்த பதிவை முகநூலில் ஏற்றிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன். அலுவலக இடைவேளையில், மின்னஞ்சலில் இயக்குனர் சகோ. தாமிரா பின்வருமாறு எழுதியிருந்தார். “ நல்ல பதிவு. அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். தவறான பாடல்களை பாடி விடக்கூடாது என பாடுவதை நிறுத்திய மனிதன். எனக்குப் பிடித்த கலைஞன். வாழ்க வளமுடன்”
சகோ. நளினி, நல்ல மனிதர்கள் காட்டுப்பூக்கள் மாதிரி, தேடித் தான் ரசிக்க வேண்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.

அலுவலகத்தில் வழக்கத்தை விடவும் சற்று அதிகம் அனலடித்தாலும், அத்தனையையும் மென் புன்னகையுடன் எதிர்கொண்டேன். புயல் கணங்கள் பழகிவிட்டன.

சகோ. தண்டபாணி அவர்களின் திருமண நாள் வாழ்த்துக்களைப் பூச்செண்டுடன் கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதில், மிகவும் அழகாக நெகிழ்வாக மாறி, வீட்டை நோக்கிய பயணத்தில் நல்ல மகிழ்வான நினைவுகளுடன் இந்த நாள் நிறைவு பெற்றது.  என் கண்ணாடியின் 200வது பதிவு ஒரு நல்ல நாளைப் பற்றியதாக அமைந்ததில் மனமெங்கும் பூத்திருக்கிறது ஒரு பூவனம்..

Tuesday, December 4, 2012

அட்டகத்தி

 ...... “They wear jeans, T-shirts and fancy sunglasses to lure girls from other communities,” he told reporters. A resolution adopted at the meeting cited statistics of broken marriages to claim that inter-caste marriages ended in failure because they were unions born out of caste design and not love.


இரவெல்லாம் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது மழை. இப்பொழுதும். மழை, வெள்ளம், குளிர் என்றவுடன் உள்ளே எங்கிருந்தாவது ஒரு பாடல் எழும்பி விடுகிறது. இன்று ஓடியது , ஒரு அற்புதமான இசை அலையை பல்லவியை நோக்கி அழைத்துச் சென்ற பாடல் “ குருவாயூரப்பா! குருவாயூரப்பா! நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி”, புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திலிருந்து. ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய படமாக இருந்தாலும், படம் முழுவதையும் கீதா என்ற அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாபெரும் நடிகை தன் ஆதிக்கத்தை அசகாயமான நடிப்பால் ஆக்கிரமித்திருந்த அற்புதமான படம். ஆனால் என் சிந்தனை அந்தப் படத்தைப் பற்றியோ, கீதா அவர்களைப் பற்றியோ அல்ல!

 பாடலை ரசித்துச் சுவைத்தவாறு, மழையை ருசித்தவாறு, THE HINDU நாளிதழை எடுத்தேன். எல்லைப் பிரச்சனையைப் பற்றிப் பேச நம் வெளியுறவுத் துறை தூதர் பெய்ஜிங் பயணம், முதல் செய்தி. ஆமாம், உள்நாட்டுக்குள் எல்லை தாண்டி துளி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதைத் தீர்த்து வைக்க நமக்கு வக்கில்லை. அருணாச்சல பிரதேசத்தை தன் நாடு என்று சீனா வரைபடமே போட்டு முடித்தபின், எல்லை பற்றி பேசி, சீனப் பெருங்கோட்டைச் சுவரைப் பார்த்து, அலுப்புதான் வருகிறது. ஆனால் நான் படித்து அதிர்ந்தது அடுத்த செய்தியைப் பார்த்துத்தான்.

ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, ஒன்றும் அறியாத மற்ற உயர்ந்த இன பெண்களை மயக்கி, திருமணம் செய்து கொள்வதே இவர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், தற்காப்பு என்ற பெயரில்  இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பிற குலப் பெண்களை இவர்கள் ஏமாற்றி மணந்து கொள்வதால்தான், நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகமாகி விட்டன. சமுதாயமே கெட்டு சீரழிந்து விட்டது. ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சட்டத்தைத் திருத்தி வலுவற்றதாக்க வேண்டும். இதற்காக தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்து, பிற இன மக்கள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி தர தங்களால் மட்டுமே முடியும் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர். கிட்டத்தட்ட நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறிய தர்மபுரி அவலத்தின் அனல் கூட இன்னும் தணியாத நிலையில், தனலை ஊதிப் பெரிதாக்கி, குளிர் காய்வது, மெத்தப் படித்த, மக்கள் மதிக்கும் ஒரு மனிதருக்கு அழகா? வேதனையாக இருக்கிறது. நாம் குடியிருப்பது மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாட்டிலா? பெரியாரும், வள்ளலாரும், வள்ளுவரும், பூங்குன்றனாரும்,  பாரதியும் படித்து போதித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது? அதிர்ந்து போயிருக்கிறேன்.

எனக்கு சில உண்மைகள் விளங்கவில்லை.
  • இது கி.பி. 2012 தானா?
  • சட்டம் இயற்றிய மேதைகள் முட்டாள்களா?
  • ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் ஆகியவற்றை போடுவதற்கு ஏதேனும் தகுதி தேவைப்படுகிறதா? அவை உயர் வகுப்பினர் அணிவதற்கான உடுப்புகளா? அவ்வாறெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோவனாண்டிகளாக இருக்க மட்டுமே சபிக்கப் பட்டவர்களா? பொருளாதார ரீதியாகவோ கல்வி அறிவு பெற்று கலாசார ரீதியாகவோ மேம்பட்டு நல்ல ஆடை உடுத்தி மகிழ அவர்களுக்கு உரிமையில்லையா? அல்லது இவற்றை அணிபவர்கள் அனைவரும் பொறுக்கிகளா? எனில் இவற்றை அனியும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுமா? இவை ஆயத்த ஆடைகள், அழகூட்டும் ஆடைகளே தவிர அழகான பெண்களை மயக்கி ஓட்டிக் கொண்டு போகும் அதிசய லேகியம் தடவிய ஆடைகளாகத் தெரியவில்லை.
  • இவ்வாறிருக்கையில் ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் பார்த்து ஏமாந்து போகும் அளவிற்கு, பெண்கள் பூஞ்சையானவர்களா? ஏமாளிகளா? பெண்களுக்குச் சொந்த புத்தி கிடையாதா?
  • இத்தனை தீண்டாமை இருக்கும் குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட வேறு இனத்தினர் நுழைய வாய்ப்பே இல்லை எனில், பெண்கள் படிக்கவும் வேலைக்காகவும் வெளியில் செல்லும் இடங்களில் தான் நீங்கள் சொல்வது போல் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன எனில், இனி பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கப் போகிறீர்களா?
  • மண் போல், பொன் போல் பெண்ணும் பூட்டி வைக்க, அலங்கரிக்க, தேவைப்படும் வகையில் பயன்படுத்த, வெறும் போகப் பொருள்தானா?
  • பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அறிவற்றவர்களா?
  • மேற்சொன்ன சாதி மறுப்பு அல்லது கலப்புத் திருமணங்களால். புதிய இரத்த பிரிவு ( BLOOD GROUP) உருவாகும் என எந்த மருத்துவமாவது கூறுகிறதா?
  • இந்த காதல் திருமணங்களால் AIDS போன்ற நோய்கள் வந்து விடும் வாய்ப்போ அல்லது மனிதனைத் தவிர வேறேதும் புதிய ஜந்து உருவாகி மனித குலத்தை வேரறுத்துவிடும் வாய்ப்போ உள்ளதா?
  • காதல் தவறா? எனில் காதலைக் கொண்டாடும் சமுதாயம் தானே நம்முடையது. காதலையும், உடன்போக்கையும்,  களவுத் திருமணத்தையும் கொண்டாடிய இலக்கியங்கள் தாமே நம்முடையவை?
  • ஆண், பெண் தவிர அரவாணிகள் என்ற மூன்றாவது இனத்தையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதையாக திருநங்கைகள் எனப் பெயரும் சூட்டி அழகு பார்த்து, ஓட்டுரிமையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கிய சமுதாயம் அல்லவா இது? தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும், சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் என்றால், மேற்சொன்ன மூன்று பாலினங்கள் தவிர இவர்கள் வேறேதேனும் இனத்தைச் சேர்ந்தவர்களா?
  • எல்லாவற்றுக்கும் கொடி பிடிக்கும் ஊடகங்கள், இத்தகைய சூழ்நிலையில், அட்டகத்தி போன்ற திரைப்படங்களை யதார்த்தம் என்று எவ்வாறு சொல்கின்றன? தலைவர் சொன்னதைத்தானே தாங்கள் படம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்? அப்பட்டமான ஒரு சமூகத்தின் மீதான பழியாகத்தான் அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். என்ன? எந்த ஊர் என்று சொல்ல பயந்து கொண்டு, சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்லி நழுவிவிட்டார் இயக்குனர். எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் எனச் சொல்லவில்லை!
  • அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். மானிடரிலேயே சேர்த்துக் கொள்ளப் படத் தகுதியற்றவர்கள் போல் ஒரு வகுப்பினரை ஓரங்கட்ட முயற்சிப்பது, பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் இல்லையா? இதைத்தடுக்க சட்டத்தில் இடம் கிடையாதா?
  • இல்லையெனில் அப்புறம், இந்த நாடெதற்கு? இதற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதற்கு? இந்த அரசியல் கட்சிகளும் காட்சிகளும் தான் எதற்கு?
  • பிரித்தாளும் கொள்கையைத் தான் தாங்கள் பின்பற்றுகிறீர்கள், எல்லா அரசியல் தலைவர்களையும் போல். உங்களுக்கான தொண்டன் அந்த வகுப்பிலும் இருந்தான் என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள்?
  • சரி! தலித்களைத் தவிர்த்த மற்ற இனத்தவர்களின் கூட்டணி அமைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், என்ன செய்ய முயல்கிறீர்கள்? தீட்டுப் படாமல் இருக்க, தனி மாநிலமோ, நாடோ வாங்கிக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒதுக்கி, ஊருக்கு ஊர் காலனிகளை உருவாக்கியது போல். தனி நாடு கொடுத்தனுப்பி விட்டு, பிற்பட்ட வகுப்புகளில் உயர்ந்த வகுப்பாகிவிடப் போகிறீர்களா? இந்த பிரித்தாளும் எண்ணம் ஏற்படவா இத்தனை படிப்பும், பட்டறிவும்? யோசித்துப் பாருங்கள்! மனிதர்களை மனிதர்களாக முதலில் பாருங்கள். அந்தத் தெளிவைத் தராத கல்வி கேலிக்குரியதே!

Tuesday, November 13, 2012

Deepavali 2012 @ Marutham illam









தீபாவளி வாழ்த்துக்கள்


மாலை மணி ஆறு. விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்குப் புறப்படுகிறேன். வழியெங்கும் கூட்டம். பட்டாசுக் கடைகளிலும், துணிக் கடைகளிலும், பலகாரக் கடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என எங்கெங்கும் கூட்டம். அலுவலகத்தின் அவசரத்தை ஒரு நாள் தள்ளி வைக்க அவகாசம் கிடைத்ததற்கே, அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு என்னைப் போன்ற ஒரு கூட்டம், மனதில் கையில் பையில் இனிப்புடன் வீட்டை நோக்கி.

இன்றைய விடியலை நினைத்துக் கொள்கிறேன். தவில், மிருதங்கம், மேளம், கஞ்சிரா, தப்பு, மேற்கத்திய ட்ரம்ஸ் என அனைத்து விதமான அடிகள் வாங்கியும் அதிர வைக்கும் இசைக்கருவிகளையும் நினைவுபடுத்தியவாறு, அன்மையிலும் தொலைவிலுமாக கேட்கும் பட்டாசு வெடிச் சத்தங்கள் காதைப் பிளந்தவாறு காலையை விடிய வைத்தே விட்டன . சர வெடிகள் தொடர்ச்சியாய் வெடித்து அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்க, என் விடுதியின் பின்புறத்தில், ஒற்றை மிளகாய் வெடி சத்தம் வேறு. எட்டிப் பார்க்கையில், வெட்கத்துடன் சிரித்து ஓடினான் பின்வீட்டு சிறுவன். ஓ! இன்று தீபாவளி!

 வெகு இயல்பாக, என் வலது கரத்தை நோக்கின கண்கள். வெளிர்பழுப்பும் கருப்புமாக மாறாத தழும்பு ஒன்று, தீபாவளி வாழ்த்துக்கள் காஞ்சனா என்றது. பள்ளிப் பிராயத்தில், அதிகாலையில் தலையில் எண்ணெய் வைத்ததும் வைக்காததுமாக, கையில் மத்தாப்புடன், யார் முதலில் செல்வது என்று போட்டியிட்டவாறு, பாதி திறந்திருந்த கதவில் (அப்பொழுதுதானே யாராவது ஒருவர் மட்டும் முதலில் வெளியே போக முடியும்!!), நானும் தம்பியும் வெளியேற நடத்திய யுத்தத்தில் கிடைத்த வீரத்தழும்பு! விம்மலும், விசும்பலும், ஏகப்பட்ட எரிச்சலுடனுமாக கடந்த அந்த தீபாவளித் திருநாளுக்காக இன்று மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த தழும்புதான், என்னை இன்னும் என் பால்யத்துடன் பிணைத்து வைத்திருக்கிறது.  அன்று எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை, ஆனால் சிறப்பான தீபாவளிக் கொண்டாட்டமாகத்தான் இன்றும் நினைவில் நிலைத்திருக்கிறது. நீல நிறத்தில், முக்கால் கை வைத்துத் தைத்திருந்த, அந்த தீபாவளியின் புத்தாடை, இன்றும் நினைவில் மகிழ்ச்சியுடன் நிழலாடுவதற்கு, அன்று அந்த மேல் சட்டையின் கைப்பகுதி படும் போதெல்லாம் எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி ரணகளப்படுத்திய இந்த கம்பி மத்தாப்புக் காயத் தழும்பே காரணம். வடுக்கள் எல்லா சமயங்களிலும் வலியை மட்டுமே நினைவுறுத்துபவையல்ல, வற்றாத பால்ய நதியின் கரம் பிடித்து நம்மோடு அழைத்து வருபவையும் கூட என்பதற்கு, இந்த தழும்பு ஒரு எடுத்துக்காட்டு.

வட இந்தியாவில் பத்து தினங்களுக்குக் குறையாமல் சிறப்பாக கொண்டாடப் பட்டாலும், தென்னிந்தியர்களுக்கு பொங்கல் போன்றதொரு எல்லோரும் கலந்து கொள்ளும் கொண்டாட்டமாக தீபாவளி இருந்ததில்லை. தீமை அழிந்து, நன்மை பெருகும் நாள் என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இது குழந்தைகளின் மகிழ்ச்சி சார்ந்த விழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆகவே தீபாவளி என்றவுடன், பால்ய கால நினவுகள் வந்து கோலாட்டம் போடத் தொடங்கி விடுகின்றன.

தீபாவளி என்றால் நினைவிற்கு வருபவை, பட்டாசு, அதை வெடிக்க விடாமல் சதா தூறிக் கொண்டே இருக்கும் மழை, புத்தாடை, அம்மா செய்யும் முறுக்கு, எள்ளடை, அதிரசம், அப்புறம் முக்கியமாக எண்ணெய் குளியல். எத்தனை பேருக்கு நூரு வயது கடந்த பிறகும் தெம்பாக இருக்கும் தங்கள் பாட்டனார் கையால், தீபாவளியன்று வழிய வழிய, தட தடவென்று தலையில் தாளம் தட்டியவாறு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் கொடுப்பினை கிடைத்திருக்கும் எனத் தெரியவில்லை. எங்களுக்கு வாய்த்திருந்தது. எண்ணெய் தேய்த்து முடித்தவுடன், குளியலறைக்குச் சண்டை. வெளியில் அணையாத விறகடிப்பில் வெந்நீர் ஆவி பறக்க கொதித்துக் கொண்டிருக்கும் காட்சி நினைவில் கொண்டு வரும் ஆவலை, இன்றைய பொத்தான் அழுத்தி சூடேற்றி, குழாயிலும் க்ஷவரிலும் பெற முடியவில்லை. நான், அண்ணன், தம்பி என ஒவ்வொருவராக அம்மாவிடம் சீயக்காய் தேய்த்துக் கொண்டு, முதுகு தேய்த்துக் கொண்டு, அம்மா! கண் எரியுதும்மா! என்றவாறு குளித்து முடிப்போம். நாங்கள் குளியலுக்குக் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, பாட்டிகள் சமையலில் தீவிரமாகி விடுவார்கள். எத்தனை கோடி இட்லி சுட்டாய் அம்மா? என்று தம்பி கிண்டல் செய்வதுண்டு. ஆனால், எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே தயாராகு சமையலாக அது இராது. அந்த காலத்திலெல்லாம், இது போன்ற பண்டிகைக்குத் தான் எங்களுக்கு தோசையே கிடைக்கும் என்றவாறு, அடுப்பில் ஆயம்மா தோசை வார்த்தது வார்த்தவாறே இருப்பார். அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் தோசையும், அடுப்பில் கொதிக்கும் கறிக் குழம்பும், சுடச் சுட எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் வடையின் வாசமும் பசியை அநியாயத்துக்குத் தூண்டி விட்டாலும், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் பட்டாசு வெடிக்கும் ஆட்டத்தில் தீவிரமாகியிருப்போம். மழையில் தரை நனைந்திருக்கும் என்பதால், வீட்டு வாசல், மதில் சுவர், முட்செடியின் கிளைகள் என எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் விதவிதமாக பட்டாசு வெடிப்போம். அதிலும், மிளகாய் வெடி, மூலவெடி, லக்ஷ்மி வெடி, ஊசி சரவெடி, பூண்டு வெங்காய வெடி ஆகியவை வெடிப்பவர்கள் மகாதீரர்களாக எங்களுக்குள்ளாகவே ஒரு நினைப்பும் மிதப்பும். சிறுவர்களுக்கானவை மத்தாப்புகளும், பூச்சட்டிகளும், சங்கு சக்கரங்களும், பாம்பு மாத்திரைகளும். எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியே பிரதானமாக இருந்த நாட்கள் அவை.

 குளியல் முடித்துவிட்டாலும், சாமி கும்பிட அப்பா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் தருணங்களைக் கூட வீணடிக்காமல், பட்டாசு வெடித்து வீர தீர சாகசங்கள் புரிந்த காலமது. ஆமாம்! இன்று போல் நடிகர் நடிகையர் பேட்டிகளுடன் கழிந்து போகும் தொலைக்காட்சித் தொல்லைகளற்ற நிஜமான சிறுவர்களின் கொண்டாட்டத்தை ஏற்றுக் குதூகலித்த தீபாவளிக்கள் அவை.

காலையிலேயே வாழ்த்துச் சொல்ல, பார்த்துப் பேச வரும் பிரமுகர்களைச் சந்தித்து விட்டு, அப்பா வந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட எங்களுக்கு அழைப்பு வருகையில் தான் பசி எட்டிப் பார்க்கும். எல்லா உணவு வகைகளும் சாமி அறையில் அடுக்கி  வைக்கப் பட்டு, தேங்காய், பழம், ஊது வத்தி மணக்க, தாத்தா கற்பூரம் ஏற்றுவார். நாங்கள் பாடும் கந்தர் சக்ஷ்டி கவசமும், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலுமாக பூஜை தீபாவளியை இன்னும் அழகாக்க, சாமி கும்பிட்டு விட்டு. வரிசையாக இலை முன் சாப்பிட அமர்வோம். அம்மா பரிமாற அனுபவித்து உண்ட அந்த நாள் ஆயம்மாவின் தீபாவளி விருந்தினை விஞ்ச இன்று வரை எந்த பெரிய உணவகத்தாலும் முடியவில்லை. நாங்கள் உண்டு முடித்து விட்டாலும் ஆயா, ஆயம்மா, அம்மா மூவரும் சமைத்தவாறும், வீடு தேடி வரும் கிராமத்தினருக்கும் அறிந்த தெரிந்தவர்களுக்கும் உணவளித்தவாறே இருப்பர். தாத்தா ஆசிரியராக வேலை பார்த்ததாலும், அப்பா வங்கி அதிகாரி என்பதாலும், நிறைய பார்வையாளர்கள், விருந்தினர்கள் என வந்தவாறிருக்க, ஓய்வில்லாமல், பெண்மணிகள் மூவரும் பரபரத்துக் கொண்டிருப்பர். இடையில் எங்கள் மூலம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இனிப்பு பலகார வினியோகங்கள் வேறு. மற்ற வீட்டு சிறுவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தவறிருப்பார்கள்.

விருந்து முடிந்து, தாத்தாக்களிடமும், அப்பாவிடமும் காசு பெற்றுக் கொண்டு, மீண்டும் பட்டாசு வெடிக்கலாம் என்றால், மழை பிடித்துக் கொள்ளும். என் சிறு வயது தீபாவளிகள் ஒண்ரு கூட மழை இல்லாமல் கழிந்ததாக எனக்கு நினைவே இல்லை. அற்புதமான நாட்கள் அவை. வெராந்தாவில், காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு, சோதிடம் பார்த்து முடித்து விட்டு தாத்தாவும் வந்து சேர்ந்து கொள்ள, மாலையில் அனைவரும் எங்கள் பூர்வீக கிராமத்திற்கு பேருந்து ஏறுவோம். பெரியப்பாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள் என பட்டாசு வெடித்து, புத்தாடைகள், பலகாரம் பரிமாறிக் கொண்டு மழையையும் தீபாவளியையும் கொண்டாடி முடித்து, பெரியப்பா கையில் கொடுக்கும் ஒரு ரூபாயுடன் அழுகையுடன் தூங்கியவாறு பயணித்து வீடு சேர்கையில் கையில் ஒரு ரூபாய் இருக்காது. பேருந்தில் தொலைந்த அந்த ஒற்றை ரூபாயைப் போலவே தீபாவளியின் பரவசம் இப்பொழுது தொலைந்து விட்டது. மழை இல்லை, மழலையின் மகிழ்ச்சியில்லை, சிறுவர்கள் தொலைக்காட்சியின் திரை போலவே பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் நான் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போலவே, எங்களைப் போலவே, எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் கிடைக்கும் நல்ல தீபாவளி பால்யத்தின் பசுமை நினைவுகளுடன் என. கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மத்தாப்புக்களும், சங்கு சக்கரங்களுமாக என் ஜன்னலுக்கு வெளியே கடக்கின்றன, மின்வெட்டில் இருள் போர்த்திய ஊர்கள். தீபாவளியை வரவேற்க ஈர வாசல்களில் கோலமிட்டுக் கொண்டிருக்கின்றனர் பெண்கள். தீபாவளி களை கட்டத் தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கையின் வேர் கிளைத்துப் பெருகி தன்னை நீட்சித்துக் கொண்டே போகின்றது. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். எல்லோருக்கும் நிச்சயம் விடியும். கரிசல் காடுகளில் வானம் பார்த்துக் கிடப்பவனுக்கும், கடலின் மேல் நீர் பாவி வலை போட்டுக் காத்துக் கொண்டிருப்பவனுக்கும், பாலையில் நீர் தேடிக் கொண்டிருப்பவனுக்கும், நாடற்ற உறவுகளற்ற ஏதிலிகளாக ஏங்கி வலிகளுடன் விழிப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும், எல்லோருக்கும் வாழ்வில் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எல்லோருக்கும் வரும் ஒரு அற்புதம் செய்யும் தீபாவளி. மீண்டும் பிரார்த்துக் கொண்டவாறு வீட்டுக்குள் நுழைகிறேன். அண்ணன் வாங்கி வைத்த பட்டாசுப் பெட்டிகள் வரவேற்கின்றன. நாளை பிறக்கும் நல்லதொரு தீபாவளி. கொண்டாட நேரம் அனைவருக்கும் வரும் என்ற நம்பிக்கையுடன் பையையும் கவலைகளையும் கழட்டி வைத்துவிட்டு, இப்பொழுது உறங்கப் போகிறேன்.

பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Monday, November 5, 2012




ஒரு மழை இரவு முடிந்த அதிகாலைப் பயணம் எப்பொழுதும், அதிகப்படியான அழகுடன் விரிந்து கொண்டே செல்கிறது, கரடுமுரடான கட்டாந்தரையாக இருந்தாலும், கான்க்ரீட் சாலையாக இருந்தாலும், சுத்தமாக, ஈரமாக, பசுமையாக, வெம்மையற்ற அதீத தன்மையுடன், வெயிலற்ற அற்புதமான வெளிச்சத்துடன், அம்மாவின் அன்பைப் போலவே!!!!!! எத்தனை மேடு பள்ளங்கள், எதிர்பாராத வளைவுகள், திருப்பங்கள், மிதிவண்டிகளில் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் பள்ளிச் சிறுமிகள், வே,லைக்கு விரையும் பெண்கள், வாசல் பெருக்கும் பெண்கள்,, தண்ணீர் குடங்கள் சுமந்து செல்லும் பெண்கள், பருப்பு களைந்து கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு தலை பின்னிக் கொண்டிருக்கும் பெண்கள், காய்கறிகளை தலைச் சும்மாடாக தூக்கிக் கொண்டு, கூவிக் கூவி விற்றுச் செல்லும் பெண்கள், கையில் வாளிகளுடன் தயிர் மா என்று வாசல்களில் நிற்கும் பெண்கள், அலைபேசியை ஆராந்து கொண்டிருக்கும் பெண்கள், அம்சமாக அலங்கரித்துக் கொண்டு அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ, கணவனோ, யாரோ ஒருவரின், இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையை அழகுபடுத்தும் பெண்கள், கோலம் போடும் பெண்கள், பூப்பறிக்கும் பெண்கள், பெண்கள், பெண்கள், பெண்கள்!!!! பெண்கள் உயிரூட்டிக் கொண்டிருக்கும் இந்த உலகம் தான் எத்தனை அழகானது!!!


சில அதிகாலைப் பயணங்கள், ஜெய்பூரின் விடியலையும், சென்னை விமான நிலையத்தின் காலைப் பொழுதையும், கொல்கத்தா தொடர்வண்டி நிலையத்தின் முற்பகலையும், சிம்லாவின் நன்பகல் பொழுதையும், தாஜ்மகாலின் பிற்பகல் பொழுதையும், பூனாவின் மாலைப் பொழுதையும், கோவையின் இரவுப் பொழுதையும் நினைவுறுத்துவதுவதின் காரணம் ஏன் என இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாதபொழுதிலும், இந்த பொழுதுகளை பிடித்து அனுபவிக்கிறேன், அவசர அலுவலகத்தின் முதல் கிழமையை நோக்கிய என் பயணத்தில்…..


அலுவலகத்தை நோக்கிய ஒரு அதிகாலைப் பயணம். இந்த சாலையை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பள்ளிக்கு தினமும் என்னை அழைத்துச் சென்ற சாலை. எம் மூதாதையரின் ஊர் நோக்கி பண்டிகைக் காலங்களில் என்னை அழைத்துச் சென்ற சாலை. எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு, செப்பனிடப்படாமல், குண்டும் குழியுமாக இருந்தாலும், இந்த சாலையை எனக்குப் பிடிக்கும். வழியெங்கும் இருமருங்கும் மலர் தூவி வரவேற்க காத்திருக்கும் மகிழ்ச்சி மிகு மாந்தர் போல், கம்பீரமாக நிற்கும் புளியமரங்களுக்கிடையில், கரும் தார் சாலையில் பயணிப்பது, உங்களுக்கே பெருமகிழ்ச்சியையும் பெருமதிப்பையும், பெருமிதத்தையும் கொடுக்கும். குளிரும் குழல்விளக்கின் ஒளியுமாக விழிக்க ஆரம்பித்திருக்கும் சிறு கிராமங்களின் தேனீர் கடைகள், குளிர் காயும் பெரும் சிறார்கள். எல்லாம் இருக்கின்றன/ர், இருக்க வேண்டியவை மட்டும் சாலையோரம் சாய்ந்து கிடக்கின்றன. சாலை அகலப்படுத்துதல் என்ற பெயரில் அண்மைக் காலங்களில் ஆரம்பித்திருந்த அக்கிரமம், நேற்று வெற்றிகரமாக, நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. வழியெங்கும் புயல்களில் கூட சாயாமல். கம்பீரமாக நின்ற மரங்கள், சாய்ந்து கிடக்கும்.சோகம், மனதைப் பிசைகிறது. இதைத் தவிர்க்க முடியாதா? சாலை விரிவாக்கம், மரங்களை அகற்றாமல் சாத்தியப் படாதா?

எவரோ விதைத்த விதைகள்; எவரோ நட்டு வைத்த மரக்கன்றுகள்; எவரோ நீர் வார்த்து, வேலியிட்டு காத்து வளர்த்த மரங்கள். நன்றிக் கடனாய், எத்தனை பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து, எத்தனை மாக்களுக்கும், மக்களுக்கும் நிழல் கொடுத்து, மழை கொணர்ந்த மரங்கள். எத்தனை பேருந்து நிறுத்தங்களாக, கோயில்களாக இருந்த மரங்கள். ஒரு நாள், ஒரே நாளில் வெட்டி வேரோடு சாய்க்கப் பட்டு, வெற்றிடம் விட்டுச் செல்வது மனதில் பாரம் ஏற்றிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. புதிய விதைகள் மரங்களாக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ? கசிகின்றன கண்கள். காத்திருந்து காத்திருந்து என ஜெயச்சந்திரன் உருகிக் கொண்டிருந்த பாடலின் முடிவில், பேருந்தின் இசைப் பெட்டியில், ஒலிக்க ஆரம்பிக்கின்றது, ஆத்துக்குப் பக்கம், ஆத்துக்குப் பக்கம், ஆத்தில் சுரக்கிற ஊத்துக்குப் பக்கம், யாரோ வச்ச தென்ன; இது நம்பி இருக்குது மண்ண. இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா! இதன் தாய் யாரு? தந்தை யாரு? கூறம்மா!! உண்மை சுடுகிறது. எல்லாருக்கும் விடியட்டும்  நற்காலை..

Tuesday, October 30, 2012


கனவு போல் தோன்றுகிறது. ஆனால் கிள்ளிப் பார்க்கத் தேவையின்றி, நிஜம் என, என் கையில் இருக்கும் அறுந்த தங்கச் சங்கிலி சொல்கிறது. மழை பெய்த குளிர் படர்ந்த நாள் முடிந்து மணி எட்டைக் கடந்து விட்ட குளிர் இரவு என்ற போதும், பணிச் சுமை மனதை அழுத்த, சற்று நடக்கலாம் போல் தோன்றியது. பேருந்தில் இருந்து இறங்கி, மழைநீர் குட்டைகளைத் தாண்டித் தாண்டி சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். திடீரென பின்னால் நிழலாடியது போல் ஒரு உணர்வு. INTUITION என்ற உள்ளுணர்வு, நமக்கு எச்சரிக்கை விடுக்குமே! அப்படி ஒரு உள்ளுணர்வு எழ, டக்கென திரும்புவதற்குள், என் கழுத்தில் ஏதோ ஒரு அழுத்தம். என்ன நிகழ்கிறது என்று நான் உணர்வதற்குள், புரிந்து கொள்ள மூளை முயல்வதற்குள், வெகு அருகில் ஒரு ஆசாமி தன் வெற்றுக் கைகளை தடவிப் பார்த்தவாறு வெறித்தவாறு பக்கவாட்டில் நின்றிருந்தான். அனிச்சையாக என் கை கழுத்திற்குச் சென்றிருந்தது. கழுத்திலேயே, அறுந்து தொங்கியது சங்கிலி. உடனடியாக சுதாரித்துக் கொண்டு, என் வலது கையில் சங்கிலியைப் பத்திரப் படுத்திக் கொண்டு, இடது கையில் இருந்த உணவுப் பையை உயர்த்திப் பிடித்தவாறு உரக்க சத்தமிட்டேன். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை எனினும், ஆங்காரமாக சத்தமாக, யார்கிட்ட? பிச்சுபுடுவேன் பிச்சு! என்று நான் கத்தியது, அவனை பின்னடைய வைத்தது. தன் வெற்றுக் கைகளைப் பார்த்தவாறு, அருகிலிருந்த மதில் சுவர் எகிறி குதித்து, இருட்டிற்குள் ஓடி மறைந்தான். அதற்குப் பின், அவன் பின் தொடர்கின்றானா, அடுத்து எதிர்பட்ட சில ஆட்களில் தென்படுகின்றானா எனப் பார்த்தவாறு, விரைந்து தங்குமிடம் அடைந்தேன். இதைக் கண்டவாறு, கடந்து சென்ற ஒரு மனிதர், நிதானமாக வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டு, கிளம்பிப் போய் விட்டார். சமூக அக்கறை!!!!! இன்று நான் கற்றுக் கொண்டவை சில முக்கிய விக்ஷயங்கள். அதில் முக்கியமானது, அந்த நேரத் துணிவு, உடைமையைக் காப்பாற்றிய போதும், சில விக்ஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
உடைமையைக் காக்க முயன்று, நம் உயிரைப் பணயம் வைத்திருந்தால்? சிந்திக்க வேண்டிய விக்ஷயம். சங்கிலியையே அறுக்க முடிகின்ற ஆயுதங்கள் கள்வர்கள் கைகளில் இருக்கின்றன. ஆகையால் உயிர் தற்காப்பு அவசியம்.
கூடுமானவரையில் நேரத்தில் வீடு திரும்புவது நல்லது. அல்லது தெரிந்தவர்களின் துணை நாடுவது நல்லது.
வெளிச்சமான இடங்களில் நடப்பது சாலச் சிறந்தது.
ஆபத்துக் காலங்களில், எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உரக்கச் சத்தமிடுங்கள்.
மின்வெட்டு சகஜமான தமிழ்நாட்டில், இனி முடிந்த வரையில், தங்கம் அணிந்து வெளியில் தனியே செல்வதைத் தவிருங்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், அஞ்சாதீர்கள். ஆனால் அஜாக்கிரதையாக, செல் பேசியவாறோ, கதை பேசிக் கொண்டோ நடக்காதீர்கள். உயிரையும் உடைமையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நம் வாழ்க்கை நம் கையில், பிறர் கையிலும்.

Sunday, October 28, 2012



கண் நிறைய கடற்பரப்பு..
கடல் கடந்து போனபின்னும்
கரை கடந்து வந்தபின்னும்
கண் நிறைய விரிகிறது
அலை அலையாய் கடற்பரப்பு!
கடல் பார்க்கப் போயிருந்தேன்

கடவுள் பார்க்கப் போனதைவிட
கடல் பார்க்கப் போனதே
கடல் அளவு ஆனந்தம்-
கவிதைக்குள் அடங்காத பேரானந்தம்!
கடல் பார்க்கப் போயிருந்தேன்!

கடல் பார்த்து- உயிரில்
துளி கடல் சேர்த்து,
கடலுடன் கை கோர்த்து,
கடல் நாடி கடலாடி,
கடலோடு களித்துக் கிடந்தேன்!
கடல் பார்க்கப் போயிருந்தேன்

சரியாகச் சொல்வதானால்- நான்
கடலாடப் போயிருந்தேன்- இனி
காஞ்சனையின் பெயருக் கிணையாக
கடலாடி என்ற பெயர்
கச்சிதமாகப் பொருந்தக் கூடும்!
கடல் பார்க்கப் போயிருந்தேன்!!!

Tuesday, October 16, 2012



முழு மாத்திரையையும் சாப்பிட்டால்
மூன்று நாள் தூங்க வேண்டியிருக்குமே!
பாதியாக்குகையில் தூளாகிய மாத்திரையை
பார்க்கையிலேயே கசப்பு தட்ட,
வாய் நிறைய நீருடன்
கண்கள் மூடி விழுங்குகையில்,
நாவில் பட்டு விலகும்
கசப்பை விரட்டி விட்டு
நினைவிற்கு வருகின்றன,
ஆயம்மா கை பாலாடையும்
அம்மா மருந்து மறைத்து
ஊட்டிய வாழைப் பழமும்!!
இம்முறை குமட்டவில்லை!!!


பால் வாசனை பிடிக்காதவளுக்கு
பாலாடை சார்ந்த நினைவு
மருந்து மாத்திரை சார்ந்ததாக
மாறிப் போனதில் வியப்பேதுமில்லை!
பாலாடையுடன் நினைவிற்கு வரும்
பாசமான மனிதர்களின் முகங்களுடன்
பசுமையாக நினைவில் எழுகின்றன
என் மாத்திரைகள் புதைபட்ட
செடி கொடிகளும்
அவற்றைத் தாங்கிய தொட்டிகளும்;
இருவாட்சி, பத்ராட்சி,
திருநீற்றுப்பத்திரி, மயிற்கொன்றையுடன்
மலர்ந்திருந்த மழலை நாட்களும்!!!
குழல் இனிது.
யாழ் இனிது.
மழலை இனிது.
வளர்த்த மாதர்தம்
மாண்பு இனிது.
சொன்ன குறள் இனிது.
செய்த தமிழ் இனிது.
செயர்க்கரிய உயிர் இனிது.



Tuesday, October 2, 2012

பயணங்கள் முடிவதில்லை VI-மகாத்மா


இன்று காந்தி ஜெயந்தி. நம் தேசத் தந்தையின், சுதந்திரத்தை சுவாசிக்கக் காரணமாயிருந்தவரின் பிறந்த நாள். ஆனால், இந்த அக்டோபர் 2 ல், 65 ஆண்டுகள் சுதந்திரம் கண்ட ஒரு நாட்டில், எது சுதந்திரம் என்ற கேள்வி எழுமா? எழுகிறதே! என்ன செய்ய? எந்த ஒரு நள்ளிரவில் ஒரு பெண் எந்த துணையுமின்றி, எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு, தனியாக பயமின்றி நடந்து போக முடிகின்றதோ அன்றுதான் நம் நாட்டிற்கு சுதந்தரம் கிடைத்ததாக நான் நம்புவேன் என்றார் மகாத்மா. இன்று என்ன நடக்கிறது? காணாமல் போன தன் குழந்தைகளைத் தேடிச் சென்ற, இரண்டு காலும் ஊனமுற்ற ஒரு பெண்ணை, இடிந்தகரையில் பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயல்கிறான், மக்களைக் காக்க வேண்டிய காவலன் ஒருவன். வேலை நிமித்தம் அடுத்த மாநிலத்துக்குச் செல்லும் ஒரு பெண், பேருந்தைத் தவற விட்ட ஒரு இரவில், வழி காட்டும் போர்வையில், கற்பழித்து மனதைச் சிதைத்து, பைத்தியமாக ஒசூரில் தெருத் தெருவாக அலைய விட்டிருக்கிறது ஒரு கூட்டம். அவள் யாரென்றே அவளுக்குத் தெரியாத நிலையில், அவள் பையில் இருந்த சான்றிதழ்களை வைத்து அவளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.


இது இந்தியா. இந்த நாட்டின் குடிமக்கள் யாவரும் ஒரு தாய் மக்கள். இதில் சாதி, மதம், இனம், மொழி எதுவும் இடையில் வந்து பிரிக்க எப்படி முடியும்? என்றார் மகாத்மா. அசாமில் கலவரம் என்றால், பீகாரிலிருந்தும் பெங்களூரில் இருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும், உயிருக்கு பயந்து தொடர்வண்டிகளில் துரத்தப் படுகிறார்கள், இந்நாட்டு மக்களால் இந்நாட்டு மக்களே. தண்ணீர் தரமாட்டேன் என்று சொன்னால் கூடப் பரவாயில்லை. அதையே மொழிப் பிரச்சனையாக்கி, வெறியேற்றி, அச்சுறுத்தி, மாநிலத்தைவிட்டு வெளியேற்றுகின்றன இரண்டு அண்டை மாநிலங்கள். பேருந்து எரிப்புகள், போராட்டங்கள், கொடும்பாவிகள், இதுவா சுதந்திரம்?

பேச்சு சுதந்திரம் கொடுத்தால், SMS என்ற பெயரில் குறுஞ்செய்திகளில் கொடும் விக்ஷத்தை பரப்பிக் கொலை, கொள்ளைகளை கொடூரமாக அரங்கேற்றுகிறார்கள் அரக்கர்கள். MMSல் அசிங்கத்தை அரங்கேற்றுகிறார்கள் காமுகர்கள். விளைவு கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை எனப் பட்டியல் நீள்கிறது. இரட்டைக் குவளைகள், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நடக்கவே முடியாமல் நிற்கும் தேர்தல், பிறிதொரு சாதி வந்து வழிபடும் வாய்ப்பு கிடைக்கும் நிலை எதற்கு என்று நிலை விட்டு நகராமல் நிற்கும் தேர், மனித மலத்தை மனிதனே அகற்றும் கொடுமை, மிதமிஞ்சியிருக்கும் சூரிய ஒளியை பயன் படுத்த வழிகாட்டாமல், அபாய அணுசக்தியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு, அப்பாவி மக்களை வழிநடத்தும் ஒரு மனிதரையும் அசிங்கப்படுத்தும் அரசியல், ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் எனும் மகாத்மாவின் பிரணவத்தை கையில் எடுத்த ஒரு முதியவரை கேலிக்கூத்தாக்கிய அரசியல்வாதிகள்,  மணல், நிலம், நீர், மலை, காற்று என சகலத்தையும் விற்றுத் தின்று கோடிகளில் ஊழல் செய்து ஏப்பமிடும் ஆட்சியாளர்களைக் கொண்டிருக்கும் அவலம்….இது சுதந்திர நாடா? இது தான் சுதந்திரமா? எதற்கு இந்த சுதந்திரம்? இதில் எது சுதந்திரம் என்ற கேள்வி திரும்ப திரும்ப எழுவதை தவிர்க்கவே முடியவில்லை.

நம் அரசியலமைப்பு சட்டம் நம் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று சிலவற்றைக் குறிக்கிறது. அவற்றில் CULTURAL AND EDUCATIONAL RIGHTS அதாவது கலாசாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை மற்றும் FREEDOM OF SPEECH, MOVEMENT, ASSEMBLY, ASSOCIATION, RESIDENCE AND PROFESSION, FREEDOM OF RELIGION அதாவது பேச்சுக்கான சுதந்திரம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கான சுதந்திரம், ஓரிடத்தில் கூடி, சங்கம் அமைத்து தம் கருத்துக்களைக் கூறுவதற்கான சுதந்திரம், உறைவிடம் அல்லது குடியிருப்பதற்கான சுதந்திரம், ஒருவரின் தொழில் சார்ந்த அல்லது பணி புரிவதற்கான சுதந்திரம் ஆகியவை முக்கியமானவை. ஆனால் இத்தனை ஆண்டுகளில், இவை எவ்வளவு தூரம் நம் நாட்டில் சாத்தியப் பட்டிருக்கின்றன என்பதை மேற்சொன்ன நிகழ்வுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் கற்பிக்க வேண்டிய, கண் திறக்க வேண்டிய, களையெடுக்க வேண்டிய கல்வியமைப்பின் நிலையைப் பார்ப்போம். அண்மையில் தமிழகத்தில், மிகப் பிரம்மாண்டமாக ஆறு லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் சுமார் இரண்டாயிரம்(2448) பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். ஆக, இந்த இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு பேர் தவிர, சுமார் 597552 ஆசிரியராக இருக்கத் தகுதியற்ற, மாதத்திற்கு ரூபாய் 30000ற்கு குறையாமல் தண்ட சம்பளம் வாங்க தயாராக, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள ஒரு கூட்டத்தை நம்பித்தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கும்போது பயமாக இருக்கிறது. போதாததற்கு, ஆசிரியர்கள் அதிர்ச்சி என்ற தலைப்புச் செய்தியை கதறிக் கொண்டிருந்தன ஊடகங்கள். பேட்டி தந்த ஆசிரியர்களோ, ஒரு படி மேலே போய், இது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அவரவர் சிறப்புப் பாடங்களை விட்டு விட்டு, அனைத்தையும் இத்தனை கடுமையாக கேட்டால், நாங்கள் என்ன செய்வது என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு ஒரு நிமிடம் குழம்பித்தான் போய் விட்டது. இது, சொல்லித் தரும் ஆசிரியர் பேட்டியா, கற்றுக் கொண்ட மாணவர் பேட்டியா என்று.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த தேர்வில்  தேர்ச்சி பெறுதல் கட்டாயம் என்ற போதிலும், ஒரே முறையில் தேர்ச்சி பெறுதல் என்பது கட்டாயம் இல்லை. ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு நடைபெறும். ஒரு முறை விண்ணப்பித்தாலே போதுமானது. நான்கு ஆண்டுகளுக்குள், எத்தனை தரம் வேண்டுமானாலும் எழுதி, தேர்ச்சி பெற்று விட்டால், அவர் ஆசிரியராக இருக்கத் தகுதியானவராகிறார். இது மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறை. போதாதென்று, தேர்வு நாளன்று அனைத்து பள்ளிகட்கும் விடுமுறை வேறு. இதற்குத்தான் இத்தனை கூக்குரல்.

இந்த தேர்வு முடிந்த அன்று ஒரு தனியார் பள்ளி ஆசிரியரிடம் கேட்டேன். அட! ஒரு மாதமாக கையில் புத்தகமும் காதில் அலைபேசியுமாக சுற்றி சுற்றி வந்தார்களே என்ற கரிசனத்திலும், நம் வருங்கால சந்ததியின் வாழ்க்கை இவர்களின் கையில்தானே இருக்கிறது என்ற அக்கறையிலும் தான். அந்த ஆசிரியர் மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறினார். ஆசிரியர்களுக்கு எப்படி கடினமாக  இருக்க முடியும் என்ற ஆச்சரியக் குறிதான் எனக்குள் எழுந்தது. ஆண்டு முழுவதும் அவர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைத்தானே தேர்வில் கேட்டிருப்பார்கள். அதற்குத்தானே மதிப்பீடு. சிந்தனை மேலிட “ கடினமாக இருந்ததா? எப்படி?” கேட்டே விட்டேன். அதற்கு ஆசிரியரின் பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. என் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களிலும் கேள்விகள் கேட்டால், எப்படி பதில் சொல்ல முடியும். நான் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். கணிதத்திலும் அறிவியலிலும் கேட்டால், நான் எப்படி தேர்வு எழுதுவதாம்? என்றார் ஆசிரியர். அப்போ! பன்னிரண்டாண்டு காலமாக பள்ளிக்கூடத்தில் மாங்கு மாங்கென்று படித்தீர்களே! அது என்ன? தன்னிச்சையாக என்னிடமிருந்து கேள்வி எழுந்தது.

சூரியனுக்குக் கீழே மட்டுமல்ல, மேலும், உள்ளும், வெளியிலும், பக்கவாட்டிலும், சுற்றிலும் இருக்கும் யாவையும் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, அதைப்பற்றி மட்டுமே சொல்லித்தர என்னால் முடியும் என்று கூறும் ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? அதிர்ந்து போனதுடன் கேட்டும் விட்டேன். அது எப்படி? எங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார் ஆசிரியர். தங்கள் ஆசிரியர்கள் ஒழுங்காக சொல்லிக் கொடுக்காமல் இருந்திருந்தால், அதை ஒழுங்காக படிக்காமல் இருந்திருந்தால் இவர்களில் எத்தனை பேரால் ஆசிரியராகியிருக்க முடியும்? இந்த கேள்வி என்றேனும் ஒரு நாள் ஒரு பொழுது, இவர்களின் மனதிற்குள் எழுந்திருந்தால், நாளைய ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என எத்தனையோ உச்சம் தொடக் காத்திருக்கும்   இத்தனை மாணவர்களின் வாழ்க்கை நம் கையில் இருக்கிறதே என்ற பொறுப்புடன் இவர்கள் படித்திருப்பார்கள், பணியாற்றி இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத்தான் நான் என் குடும்பத்திலும், பள்ளியிலும் பார்த்திருக்கிறேன். நானும் என் சகோதரர்களும் படிக்கையில், தான் மறுநாள் எடுக்க வேண்டிய வகுப்புகளுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் என் அம்மாவை எனக்கு நினைவிருக்கிறது. இன்று NOTES OF LESSON என்ற ஒன்று  எழுதப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதுதான் ஆசிரியர்களின் HOME WORK எனப்படும் வீட்டுப் பாடம். இருந்திருந்து, அதை வகுப்பு இடைவேளை நேரங்களில் ஒப்பேற்றாமல், சரிவர எழுதியிருந்தால், இன்று தேர்வு முடிவுகள் வேறு மாதிரி அல்லவா இருந்திருக்க வேண்டும்!

ஆக, ஆசிரியர்களாக இருக்கத் தகுதியற்ற, தேர்வில் தோல்வியடைந்த ஒரு கூட்டத்திடம்தான் நம் வருங்காலத் தூண்கள் மாட்டிக் கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்க. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தால், மாணவர்கள் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் கல்வியைத் தொடரும் நம் கல்வித் திட்டம், மாணவர்களுக்கு பொருந்தும் என்றால், அதே கல்வித் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான பொதுத் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கும் அது பொருந்தும் தானே? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பள்ளிகள் வழக்கம் போல இயங்குகின்றன. மாநில அரசு வழங்கும் சம்பளம் போதவில்லை, எனவே மத்திய அரசு வழங்கும் சம்பளத்திற்கு இணையாக தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆசிரியர்கள் சுறுசுறுப்பாகிவிட்டனர். என்ன நடக்கின்றதென்றே புரியவில்லை.

இன்றைய பள்ளிக் கல்வி முறையில் சில நடைமுறைகள் வினோதமாகவும், மாணவர்களுக்கு எதிராகவும் இருப்பதை, இந்த இடத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒன்று. மனப்பாடம் செய்து எழுதும் தேர்வு முறையும் அதற்கான மதிப்பீட்டு முறையும்.
இரண்டு. COUNSELLING எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வுக்கூட்டங்கள்.
மூன்று. கால வரைமுறையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் பெற நடக்கும் பண விளையாட்டுக்கள்.
நான்கு. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை, சமய விடுப்பு என நீளும் வரைமுறையற்ற விடுமுறைகள்.
ஐந்து. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப பள்ளியில் போதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருத்தல்.

இவற்றில் முதலாவதை எடுத்துக் கொண்டோம் என்றால், சமச்சீர் கல்வி மற்றும் சங்கடத்தை உண்டாக்கும் கல்வியைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். சமச்சீர் கல்வி என்ற திட்டம் நிச்சயம் வரவேற்கத் தக்க ஒன்று. அதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். ஆனால் அதை நடைமுறைப் படுத்தத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் கேள்வி. பள்ளி இறுதி வகுப்பில், முதல் சில இடங்களைப் பிடிப்பவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்து விட, எஞ்சிய புத்திசாலிகளில் சிலர் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், சிலர் கலை மற்றும் அறிவியல் பாடங்களிலும் சேர்ந்து விடுகின்றனர். இவற்றில் பணத்தால் நிறுவனத்துக்கான பதிவு பெற்று, பணத்தால் தேர்வு முடிவுகளைச் சாதகமாகப் பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் தான் EXAM IS TOUGH என்ற கூக்குரல் எழுகிறது.

மாணவர்களின் திறனுக்கேற்றவாறு அவர்களைத் தயார் செய்து கொண்டு செல்லும் அழகான சமச்சீர் கல்வி, SUDDEN BREAK போட்டது போல் திடீரென, மனப்பாடம் செய்! மதிப்பெண் பெறு! என்ற வழக்கமான பல்லவி பாடும் கல்வியாக பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அவதாரம் எடுத்து விடுகிறது. புத்தகத்தில் இருப்பதை அப்படியே உருப்போட்டு, கால் புள்ளி, அரைப் புள்ளி விடாமல், வாந்தி எடுக்கத்தான், பொதுத் தேர்வு என நாள் குறித்து, அதற்கான சிறப்புப் பயிற்சி தரும் கல்வி நிறுவன வியாபாரம் நடக்கின்றது. இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், தேவைக்கு அதிகமாகவே சம்பளம் தரும் அரசு என்ற முதலாளி தரும் பணம் போதாமல், TUTION என்ற பெயரில் சில ஆசிரியர்கள் அடிக்கும் கொள்ளை, கொள்ளையோ கொள்ளை! ஒன்பதாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பயின்றவன், பத்தாம் வகுப்பைத் தொட்டதும் மந்திரித்து விட்டது போல் ஆகி விடுகிறான். தங்கள் தகுதித் தேர்விலேயே தேர்வு பெற தரிகிடதோம் போடும் ஆசிரியர்கள் சட்டென நீதிமான்கள் ஆகி, உன்னையெல்லாம் கட்டி மேய்க்க வேண்டிய தலையெழுத்து எனக்கு என்ற குற்றப்பட்டியல் வாசிக்கத் தொடங்கி, தாங்கள் சொல்லித் தராத வாய்ப்பாடு மனப்பாடம், அல்ஜீப்ரா மனப்பாடம், அலர்ஜி தரும் ஆங்கில மனப்பாடம், எல்லை தாண்டி வரவே வராத வரலாறு மனப்பாடம், புரிபடாத புவியியல் மனப்பாடம், அறை குறை அறிவியல் மனப்பாடம் என்று மனப்பாடப் பயிற்சி அளிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

 இங்கு தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் முறை பற்றியும் நாம் பேசியே ஆக வேண்டும். அண்மைக் கால ஆசிரியர்களிடம் நான் பழகியவரை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான முறை பின்பற்றப் படுவதை நான் கவனித்தே வந்து இருக்கிறேன். பையன பாஸ் பண்ண வச்சா போதாதா? அதுவே பெரிய பாடு. ஒரு மார்க் கொஸ்டீன் எல்லாம் எழுதினாலே பாஸ் பண்ணிடுவான் மிஸ். அதனால், இந்த ஒரு மார்க், இரண்டு மார்க் கேள்விகளுக்கு தயார் பண்ணிவிட்டுட்டோம்னா போதும் என்ற கருத்தை நான் வேதனையுடன் கேட்டவாறு கடந்து போகிறேன். பாஸ் மார்க் வாங்க மட்டுமே தகுதியானவர்களா இந்த மாணவர்கள்?

நான் மேற்கண்ட எந்த குற்றச்சாட்டையும், எல்லோர் மீதும் வைக்கவில்லை. எனக்குத் தெரிந்து, நான் பணி புரியும் பகுதியில், மிகக் குறைவான வசதிகளுடன், ஒரு குக்கிராமத்தில் இயங்கும் உயர்நிலைப் பள்ளி ஒன்று, அதன் ஆசிரியர்களால் மட்டுமே, மிகச் சிறந்த பள்ளியாக விளங்குவதை பெருமையாக கவனித்து வருகிறேன். அந்த மிகச் சிறிய ஊரில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு, அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தின் புற நகர் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில கடும் போட்டி நிலவுவதை கண்கூடாக காண முடிகிறது. அந்த பள்ளியின் தலைமையாசிரியரை,  பெரும்பாலான சமயங்களில் காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள்ளாக பேருந்தில் பார்க்க முடிந்திருக்கிறது. என்ன சார், இவ்வளவு காலையில் பள்ளிக்கு கிளம்பிவிட்டீர்கள்? என்றால், ஒரு புன்னகையுடன் ஸ்பெக்ஷல் க்ளாஸ் மேடம் என்பார். வீட்டில சரியான படிக்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தினால் தான், கிராமப்புற மாணவர்களால், சரியாக வெளிவர முடியவில்லை மேடம். அவனுக்கு புரிகிற வகையில் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்தால், பசங்க நல்லா வருவாங்க, என்று ஒரு தந்தையின் வாஞ்சையுடன் அவர் சொல்கையில், நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் போது, பெருமிதத்துடன் அவர் பகிர்ந்து கொள்ளும் தருணங்களில், அந்த ஒரு பையன் ஒழுங்காக பள்ளிக்கு வந்திருந்தால், அவனையும் கூட பாஸ் பண்ண வச்சிட்டிருப்பேன் மேடம், என்று அனுதாபப்படுகையில், நமக்கே பெருமையாக இருக்கும். எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே குழுவாக இருந்து, பணியாற்றுவதால்தான் இது சாத்தியப்படுகிறது என்று அவர் கூறுகையில், அந்த பெருமிதம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். ஆனால், இந்த ஆசிரியர்களும் மேற்கண்ட ஆசிரியர்கள் மத்தியில் தான் இருக்கிறார்கள் என்பதே சிந்திக்க வேண்டிய ஒன்று.

இரண்டாவதாக நாம் கண்ணோக்க வேண்டியது COUNSELLING எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வுக்கூட்டங்கள். தமிழகத்தில், பள்ளிகளில் ஆசிரியர் காலி இடங்கள் என்று எடுத்துக் கொண்டோமானால், ஒவ்வொரு முறையும், வட மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் பல வருடங்களாகவே இவை தொடர்ந்து முன்னிலை வகித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கும் விக்ஷயமாக இருக்கின்றது. காரணத்தைச் சற்று ஆய்வு செய்தோமானால், கவலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. கல்வியறிவைப் பொருத்தவரையில், நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள். தமிழகத்தில்  கல்வியறிவில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்கள் பின் தங்கியே இருக்கின்றன. ஆதிகாலம் தொட்டு, தென் மாவட்டங்களில் வேரூன்றி, மக்களிடையே கல்வியறிவைப் பரப்பிய கிறித்தவ கல்வி நிறுவனங்களின் பங்கு இதில் அதிகம். எனவே கல்வியே முன்னேற்றத்திற்கு முதல் படி என்ற அருமையை நன்கு உணர்ந்து, தென் மாவட்டங்களில் சிறந்த கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகின்றன. எனவே ஆசிரியர் தேர்ச்சி விகிதமும், அரசு ஆசிரியர் பணியில் சேரும் விகிதமும் கணிசமாக அதிகம். மகிழ்ச்சிக்குரிய விக்ஷயமே! இதில் கவலை எங்கிருந்து வந்தது எனில், ஆண்டில் பெரும் பகுதி நாட்களுக்கு, ஏகப்பட்ட காலி இடங்களுடன், ஆசிரியர் பற்றாக்குறையுடன் நடக்கும் வட மாவட்ட பள்ளிகளில் தான் புதிதாக, பணியில் சேரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் சேர்கிறார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. பணியில் சேர்ந்து அல்லது பணி இடமாற்றம் பெற்று குறைந்த பட்சம் இத்தனை ஆண்டுகள், இந்த பள்ளியில்தான் பணியாற்ற வேண்டும் என்ற இயற்றப்படாத (அ) காற்றில் விடப்பட்ட சட்டத்தின் பாதுகாவலர்களின் உதவியுடனேயே உயர உயர பறக்க விட்டு, பணம் விளையாட, பாவப்பட்ட பிள்ளைகளின் படிப்பு ஊசலாட, பணி இடமாற்றம் பெற்றும், சொந்த ஊர்களுக்கு மூட்டை கட்டி விடுகிறார்கள் ஆசிரியர்கள். உபயம்: கெளன்சலிங் COUNSELLING என்ற பெயரில் நடைபெறும் மாணவர்களின் படிப்பை எதிர்காலத்தை பணயம் வைத்து நடக்கும் பண விளையாட்டுத்தான். அரிச்சுவடி அறிந்து கொள்வதற்கு முன் மாற்றலாகிச் சென்று விடும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள், ஒன்பதாம் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், பத்தாம் வகுப்பிற்கு ஒருவர் என்று இருந்தால், தன் பெயரை எழுதுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கும் மாணவன் என்னதான் செய்வான் பாவம்? ஆங்கிலம் அலர்ஜி, தமிழ் தமில் தகராறு, அறிவியல் ஆண்டவன் விட்ட வழி, வராத வரலாறு, புரியாத புவியியல், கணக்கு. கடவுளுக்குத் தான் வெளிச்சம். பாகற்காயின் கசப்பு பரவாயில்லை போலும். அதன் பின், அப்துல் கலாமாவது? அம்பானியாவது?

மூன்று. கால வரைமுறையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் பெற நடக்கும் பண விளையாட்டுக்கள். ஆட்சிகள் மாறிக்கொண்டிருக்கும்போதிலும் பணியிட மாற்ற பண விளையாட்டுக் காட்சிகள் மாறியதாகத் தெரியவில்லை. அரசுப் பணியை விட மனமில்லாமல், எங்கு போட்டாலும் பணியாற்றத் தயாராக இருக்கிறேன் எனப் பணியில் சேர்ந்தால் போதும் என்று ஓரிடத்தில் வேலைக்குச் சேரும் ஆசிரியர்கள், ஒரே வருடத்தில் கூட சில பல லட்சங்களின் உதவியுடன், அவரவர் ஊர் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். ஒரு பிரபல வார இதழில், தன் தொடரில், திரு. ராஜுமுருகன், இதை நியாயப்படுத்தி, ஐயோ! பாவம்! பானியில் எழுதியிருந்தது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. ஊடகங்களுக்கு ஒரு தர்மம் இருக்கிறது நண்பரே! தங்கள் உறவினரின் உடல் நலனும், பிள்ளைகள் படிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே! ஆனால் சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் உள்ள தொலைவு, நாகர்கோவிலுக்கும் சென்னைக்கும் உள்ள தொலைவை விடக் குறைவுதான் என்பதையும் தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தில் பாதி அளவு கூட பெறாத நிலையிலும், பல்லாயிரம் மைல்கள் தாண்டி, இங்குள்ள சிறு குறு நகரங்களின் தனியார் பள்ளிகளில், தாங்கள் கற்றவை யாவையும் கற்பித்து, சிறந்த மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை பகுதியைச் சேர்ந்த யுவதிகளைப் பற்றி தாங்கள் அறியாமல் இருக்க முடியாது. அவர்களுக்கும் குடும்பம் உண்டு; குழந்தைகள் உண்டு; உடல் உபாதைகள் உண்டு. அந்த தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் கற்பிக்கும் முறைக்கும் தேர்ச்சி விகிதத்திற்கும் உள்ள வேறுபாட்டிற்கும் இதுவே காரணம். கற்பித்தலை பணியாகக் கருதி, பணி நேரத்திற்கு மட்டும் வந்து கையெழுத்துப் போடும் பழக்கம் விடுத்து, காலையும் மாலையும் சிறப்பு வகுப்புகள் வைத்து, மாணவர்களைச் செம்மைப் படுத்தும் முறையைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளில் தானே, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.  தம் பிள்ளை, தம் குடும்பம் வேறு; அடுத்தவர் குடும்பம் வேறு தானே! இது சம்பளம் தரும் வேலை தானே என்ற கருத்தை, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சென்னை மட்டுமே தமிழகம் அல்ல. அங்கு வசிப்பவர்கள் மட்டுமே மக்கள் அல்ல. சென்னையில் உள்ளவை மட்டுமே பள்ளிகள் அல்ல. அங்கு படிப்பவர்கள் மட்டுமே மாணவர்கள் அல்ல. கிராம நிர்வாக அலுவலர்களை விடுங்கள்!  அதிகாலையில் ஆடுமாடுகளை கவனித்து படித்த படிப்பை உண்மையாகவே கெளரவப்படுத்தும் கால்நடை மருத்துவர்களும், மக்கள் ஈட்டிய பணத்தைப் பாதுகாத்து, கடன் வழங்கும் வங்கி நிறுவன ஊழியர்களும் தாங்கள் கண்டறியாத கிராமங்களில் தங்கி, குறைந்த பட்சம் மூன்றாண்டுகளாவது பணியாற்றிப் பங்களிக்கையில், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு அறிவைப் புகட்டி, அவர்களை மருத்துவர்களாகவும், அதிகாரிகளாகவும், ஆசிரியர்களாகவும் உருவாக்கும் பொறுப்புள்ளவர்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயல்வது எவ்வகையில் நியாயம்?
கிராமத்தில் உள்ளவர்களுக்கும் உடல் உபாதைகள் உண்டு. அதற்கேற்ற மருத்துவமும், அலைச்சலற்ற நல்ல ஓய்வும் மட்டுமே நோய்கள் தீர்க்கும் அருமருந்து. அதை விடுத்து, நகர வாழ்க்கையை விட்டு நகராமல், அதிகாலை தொடர்வண்டி பிடித்து, அடித்து பிடித்து ஓடி வந்து, அந்தி மாலையில் தொடர்வண்டி பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் அலைச்சல் கொள்வது யார் தவறு? பணியிடத்தின் அருகில் வீடு பாருங்கள். தினமும் பயணிப்பதைத் தவிருங்கள். வாரம் முழுவதும் பணியும், இரவில் நல்ல ஓய்வும்; வாரக் கடைசி மகிழ்ச்சியுடனும் குடும்பத்துடனும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும். ஊரார் பிள்ளையை அறிவினையும் அன்பினையும் பண்பினையும் ஊட்டி வளருங்கள். உங்கள் பிள்ளை தானே ஓஹோ என்று வளரும். அதை விடுத்து, பணியில் சேர்ந்த சில நாட்களில் பணத்தால் அடித்து, பணியிட மாற்றம் பெறாதீர். உங்களால் சில கலாம்களும், ராதாகிருக்ஷ்ணன்களும், இறையன்புகளும், முத்துலட்சுமிகளும் உலகத்திற்கு கிடைக்கட்டுமே!

நான்கு. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் மட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை, சமய விடுப்பு என நீளும் வரைமுறையற்ற விடுமுறைகள். வேறெந்த துறையிலும் இல்லாமல், பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் இத்தனை விடுமுறைகள் விடுவதற்கான காரணம். ஒன்று, பள்ளிக்கு வெளியிலும் கல்வி இருக்கிறது; திருவிழாக்களிலும், உல்லாசப் பயணங்களிலும் பார்த்து, கேட்டு, அனுபவித்து, அறிவைத் திறந்து கற்க அனேக விக்ஷயங்கள் இருப்பதால், அந்த நாட்களில் விடுமுறை விடலாம். மற்றொன்று மழைக்காலங்களிலும் கடும் கோடைக்காலங்களிலும் பள்ளிக்கு வந்து செல்வது, நம் உட்கட்டமைப்பைப் பொறுத்தவரை ஆபத்தானது என்பதால். ஆனால், A இல் இருந்து Z வரை, உடன் ஒரு L சேர்த்து, விடுமுறைகளைக் கூட்டிக் கொண்டே போனால், மாணவர்களின் படிப்பு பனால் தான். அதை நேர்செய்யத்தான் சனிக்கிழமைகளில் பள்ளி நடத்துகிறோமே என்று சொல்லாதீர்கள். சனிக்கிழமைகளில் பள்ளி வருகைப் பதிவேடுகள் எப்படி இருக்கும் என்பதை உலகறியும். அதிலும் இந்த அறை நாள் விடுப்பு என்பதையெல்லாம் தயவு செய்து, கல்வித் துறையிலிருந்து நீக்கி விட வேண்டும். அறை நாள் விடுப்பு, அப்புறம் ஒரு மணி நேர முன் அனுமதிபெற்று வீட்டுக்கு சென்றால், அன்று முழுநாள் விடுப்பு எடுக்காமலே விடுமுறைதான். அப்புறம் ஏது படிப்பு?  ஆனால், இந்த விடுமுறை விக்ஷயத்தில், தற்போதைய அரசின் கட்டுப்பாடு சற்று கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

ஐந்து. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப பள்ளியில் போதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருத்தல். இன்றைய தேதியில் அதிக அச்சுறுத்தல் இல்லாத, நல்ல ஓய்வு நேரம் கிடைக்கும் பாக்கியம் பெற்ற, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்கும் அம்சமான ஆசிரியர் பதவியில் பற்றாக்குறை என்றால் அதிசயம்தானே! வேலைக்கு ஆள் போதவில்லையா? அதற்குத்தான் அடிக்கடி நிறைய பணியாணைகள் கிடைக்கப் பெறுகின்றனவே. அரசு பெரிய அளவில் வேலையளிக்கும் ஒரே துறை இதுதானே! மற்றதெல்லாம் குறைவுதான். அப்புறம் ஏன் காலியிடங்கள்? கேள்விகள் எழுவது நியாயம்தான். எல்லோரும் நகரங்களையும், அவரவர் சொந்த ஊருக்கும் பணியிட மாற்றம் பெற்று பயணித்ததன் விளைவு தான் இது.  COUNSELLING எனப்படும் ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வுக்கூட்டங்களையும், கால வரைமுறையின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் பெற நடக்கும் பண விளையாட்டுக்களையும் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த குறை சரிசெய்யப்படக் கூடும். ஏற்கனவே கூறியது போல், வட மாவட்ட பள்ளிகள், காலியான பணியிடங்களாலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நல்ல கல்வி புலத்துடன் இங்கு வந்து பணியில் சேரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உடனடி பணியிட மாறுதல்களுக்கு உறுதுணையாக இருக்கும் தரகர்களை உடனடியாக அரசு களையெடுக்க வேண்டும். அதே சமயத்தில், வட மாவட்டங்களில் இயங்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். இந்த ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாவப்பட்ட பள்ளிகளில், பணியில் சேரக்கூடிய, அந்த பணியிடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றக் கூடிய சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டிய நியமனம் செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் அவசரமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அரசு கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.

இவை யாவற்றையும் சரி செய்தாலே, பள்ளிக் கல்வி பெரும்பாலும் முன்னேற்றம் காணும் என்பது என் கருத்து. மற்றபடி, கல்வித்துறை என்பது வேறு எந்த துறையைப் போலவும் அதில் பங்கு பெறுபவர்களின் ஒத்துழைப்பையும், ஒற்றுமையையும், ஒன்றி வேலை செய்வதையும் பொருத்ததே. ஆனால், வேறெந்த துறையையும் விட, கல்வித் துறைக்கு முக்கிய கடமை ஒன்று உள்ளது. அது அறிவுக் கண்களைத் திறந்து, நல்லுலகத்தை உருவாக்குவது. கல்வியால் மட்டுமே தீமை இருளைப் போக்கி, நல்லொளியைப் பாய்ச்ச முடியும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன். நல்லொளியைப் பாய்ச்சும் ஆசிரியர் யாரும் சொல்வதை, மாணவர்கள் தண்டனையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தவறு செய்யும் மாணவனைத் தடுத்து நிறுத்தி நல்வழிப் படுத்துவது, அந்த வயதில் பெற்றோரால் கூட முடியாமல் போகலாம்.  ஏனெனில், பெற்றோருக்குத் தம் குழந்தையின் குணாதியம் மட்டுமே தெரியும். ஆனால், ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரே நாளில் சந்திக்கும் நல்ல ஆசிரியருக்குத்தான், எந்தக் குழந்தையின் நிறையும் குறையும் தெரியும். அவ்வாறிருக்க, குழந்தைகளை அடித்தால் திட்டினால் நம் பதவிக்கும் உயிருக்கும் தலைவலி என்று போலிச் சாக்கு சொல்லி, எக்கேடோ கெட்டுப் போ, நான் நடத்துவதை நடத்தி விட்டுப் போகிறேன் என்று கரும்பலகைக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள். அல்லது படிப்புதான் எப்படி ருசிக்கும்? கத்திக் குத்தையும், தற்கொலை மிரட்டலையும்  சில மாணவர்கள் தங்கள் ஆயுதமாக பயன்படுத்த உதவுவது ஆசிரியர்களின் பயமும் பாராமுகமும்தான். நிமிர்ந்த நன்னடையையும் நேர் கொண்ட பார்வையையும் ஆசிரியர்கள் கொண்டால், மாணவர்கள் அதையே தாங்களும் நிச்சயம் பின்பற்றுவர். ஏனெனில் SEEING IS BELIEVING. எதைக் காண்கிறோமோ, அதையே நாம் நம்புகிறோம். எதை நம்புகிறோமோ, அதையே நாம் செய்கிறோம். எதை செய்கிறோமோ, அதுவே நம் வாழ்க்கையாகிறது. நம்பிக்கையுடன் வாழ்வோம். வாழ்க மகாத்மா!!!!

பயணங்கள் முடிவதில்லை!!!! சேர்ந்து பயணிப்போம்!!!