Thursday, June 28, 2012

Take Care!!!


செல்போன் பற்றி எழுதி ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் செல்போனினால் ஏற்பட்ட இரண்டு விபரீத விபத்துகள் பற்றி எழுத வேண்டியதாகிவிட்டது. ஒன்று நேற்றிலிருந்து சென்னையை பதற வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா மேம்பால பேருந்து விபத்து. இது எல்லோரும் அறிந்தது. மற்றது நான் மற்றும் என் அலுவலகத்தினர் அறிந்த ஒரு வாடிக்கையாளர் மனைவிக்கு ஏற்பட்டது.

முதலாவதில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் மற்றும் உதவிக்கு வந்தவர்கள் கூற்றுப் படி, பேருந்து ஓட்டுனர் கையில் இரண்டு செல்போன்கள் வைத்திருந்தார். பேச்சு சுவாரசியத்தில், சாலையைக் கவனியாமல், ஓட்டியதில், நிகழ்ந்ததே இந்த விபத்து என்பது செய்தி. எவர் மீது குற்றம் என்றாலும், பாதிப்பு பேருந்தில் இருந்தவர்கள் அனைவருக்குமே. வேலைக்கு செல்பவர்கள், இரவுப் பணி முடிந்து வீட்டுகுத் திரும்புபவர்கள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள், பள்ளி/கல்லூரிகளுக்குச் செல்கிறவர்கள், பொருள் வாங்க/விற்கச் செல்பவர்கள் என அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு, தாங்கள் சம்பந்தப்படாமலே, தங்கள் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதை மெளன சாட்சிகளாக கவனித்தவாறு கட்டில்களில் கிடக்கிறார்கள். இது முதல் தரம் அல்ல. ஆண்டிற்கு சில நூறு விபத்துக்கள் இவ்வாறே நடக்கின்றன. செல்போன் பேசியவாறு தொடர்வண்டிப் பாதைகளைக் கடப்பவர்கள், நெடுஞ்சாலைகளைக் கடப்பவர்கள், காதை கழுத்தோடு ஒட்டிக் கொண்டு, தலை சாய்த்து செல்போன் பேசியவாறே, பக்கத்தில் பயணிப்பவர்களை பதறச் செய்பவர்கள், ட்ராபிக் சிக்னல்களி, எந்தப் பக்கம் வாகனங்கள் வந்தாலும் கவலை இல்லாமல், தான் உண்டு, தன் செல்போன் உண்டென்று மற்றவர்களை சிதறடித்து, கலங்கடித்து, சாலையக் கடப்பவர்கள் என விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன, மக்கள் இவை யாவற்றையும் பரபரப்புச் செய்திகளாக பார்த்து விட்டு மறந்தும் போகிறார்கள். யாரைச் சொல்லி நோவது?

இரண்டாவது, திரு. மகேக்ஷ் அவர்களின் மனைவிக்கு நேர்ந்த விபத்து பற்றியது. திங்களன்று மகேக்ஷ் என் அலுவலகத்திற்கு வந்த போது முகம் வாடியிருந்தது. நகைக் கடன் வேண்டி அவர் என்னை அணுகியபோது, என்னாச்சு மகேக்ஷ்! வீட்டில் எவ்வாறு இருக்கிறார்கள் என்றேன். அவர் மனைவியை பற்றித்தான் அவ்வாறு விசாரித்தேன். அதை ஏன் கேட்கறீங்க மேடம். இங்கே வந்து போன அன்றக்கு மறுநாள் மாடியிலிருந்து தவறி விழுந்து, கால், கை எலும்புடைந்து MIOT HOSPITALல் சேர்த்திருகிறோம். அவங்க செலவுக்காகத்தான் நகையை வைக்க வந்தேன் என்றார்.

மகேக்ஷ் தன் திருமணத்திற்குப் பின் முதல் முதலாக தன் மனைவியை, வெளியில் அழைத்து வந்தது  இரண்டு வாரத்துக்கு முன்புதான். வேலை வேலையென்று சுமார் ஆறு மாதங்கள் கழித்து, மகேக்ஷ் தன் மனைவியை முதல் முதலாக அழைத்து வந்த வெளியிடம் சாட்சாத், என் அலுவலகம் தான். பழம், பூ, காரம், இனிப்பு வகைகள் என அனைத்தும் கொணர்ந்திருந்தனர் இருவரும். மீட்க வேண்டிய நகைகளுக்கான பணத்தைக் கட்டி விட்டு, காத்திருந்த நேரத்தில், அழகான அவர் மனைவியை என் அறைக்குள் அமர வைத்து, தேனீர் தந்து உபசரித்தோம். நகைகளை மீட்டுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருவரும் சென்றனர். பிறகென்ன ஆயிற்று? அதிர்ச்சியுடன் மகேக்ஷிடம் வினவினேன். மேடம் இங்க வந்து சென்றதுதான் நாங்க வெளியேன்னு வந்தது. மறுநாள்,  மாடியில செல்போன்ல  தடுப்புச் சுவரோரம் நடந்து கொண்டே பேசிக்கிட்டிருந்தவங்க, கையோ காலோ தடுக்கி விழுந்துட்டாங்க. இன்றைக்கு வரைக்கும் நடக்க முடியவில்லை என்றார் பரிதவிப்புடன். நகைகளைப் பார்த்தேன், அன்று மீட்டுச் சென்ற நகைகள். செல்போன் சுவாரசியம், எதில் முடிந்திருக்கிறது என்று என்னால் வேதனையோடு சிந்திக்கத்தான் முடிந்தது. இதுவும் முதலாவதல்ல. எத்தனை மகேக்ஷ்கள், அவர்கள் மனைவிகள்.

செல்போன் பேசுபவர்கள் கவனிக்க!

Saturday, June 23, 2012

ஹலோ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!


ஹலோ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

(1)           செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்லும் பொருளாக இருக்கலாம். அதற்காக, அடிக்கும் போனை எடுத்த உடனே, ஹலோ! எப்படி இருக்க (அ) இருக்கீங்கன்னு கேட்கிறதை விட்டுட்டு, அது என்ன சின்ன புள்ளத்தனமா, எப்போ போனை எடுத்தாலும், ஹலோ! எங்க இருக்க(அ) இருக்கீங்கன்னு கேட்கறது? எப்போ எங்க கத்துக்கிட்டீங்க இதையெல்லாம்? படா பேஜாராப் போச்சுப்பா? ட்ரிங். ட்ரிங்.. ஹலோ! சொல்லுடா! எங்க இருக்க? அட!
(2)           போன் எதற்கு? பேசறதுக்குத் தானே! PHONE. PHONETICS. எல்லாம் உச்சரிப்பதை, பேசுவதைத்தானே குறிக்கின்றன. சரி. உங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி, SMS(PAGER?), email, browsing(அட COMPUTER இருக்கே!) எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டீங்க. தனித்தனியா எல்லாத்தையும் வச்சுக்கிட்டு, இத்தனூன்டு செல்போனுக்கு எதுக்குய்யா Rs 40000/- only. 100 ரூபாயிலே ஒரு நாள் குடும்பம் நடத்துறவன், ஒரு வருக்ஷம் உட்கார்ந்து சாப்பிடலாம் போல இருக்கே?
(3)           தினம் பத்து மணிக்கு வீட்டுக்கு போன். ஐந்து நிமிடம் ஆர்டினரி கால். பதினைந்து நிமிடம் ஆலோசனை கால். அதற்கு மேல் என்ன பேசறதுன்னு தெரியல. ஆனால்…ராத்திரி முடிய, பொழுது விடிய, பகல் முடியன்னு பேசிக்கிட்டே இருக்காங்களே! அப்படி என்னதாம்பா பேசுவாங்க? இந்த ம், ஹாங், ம்ஹீம். மறுபடியும் ம்ம் மிற்கு மேலே நமக்கு ஒன்னுமே கேட்க மாட்டேங்குது. என்னமோ போங்க? செல்போன் கம்பெனிகாரனும், காது டாக்டரும் நல்லா இருந்தாச் சரிதான்.
(4)           பஸ்ல என் முன் சீட்டில், தனியாப் பேசிச் சிரிச்சுக்கிட்டிருந்த ஒரு பொண்ணு திடீர்னு அழ ஆரம்பிச்சது. பயந்து போய், அடப்பாவமே! இந்த வயசில் இப்படி புத்தி பேதலிச்சு, என்ன கொடுமை? யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே, கொஞ்ச நேரத்துல மறுபடியும் சிரிச்சது. CONFIRMED. என் ஊர் வந்து இறங்கினப்போ தான் தெரிந்தது, காதுலே கார்ட்லெஸ். என்ன கொடுமைப்பா இது?
(5)           அது என்னவோ தெரியல? போகிற ஒவ்வொரு பஸ்ஸிலும், இருக்கிற அத்தனை மூலைகளிலும், பாட்டை அலற விடுற பொது நலம் மிக்க பசங்களோட செல்போன் ம்யூசிக் கலெக்க்ஷனில், முக்கால்வாசி பேருக்கு,  “ எட்டு மடிப்புச் சேலை, இடுப்பில் சுற்றிப் பட்ட ஒரு சோலை.  பட்டம் கொடுத்தது எனக்கு, இன்று பாதியில் நிக்குதே வழக்கு’ ங்கிற பாட்டு பயங்கரமா பிடிச்சிருக்கு. அது ஏன் என்று யாராவது சொல்றீங்களா ப்ளீஸ்! அது என்ன படங்க?
(6)           எல்லாம் சரிதான். செல்லில் பாட்டு கேட்கிறீங்க? உங்க இக்ஷ்டம். அது என்ன, மாரியம்மன் கோயில் திருவிழா மாதிரி, ஊருக்கே செட் போட்ட மாதிரி ஒரு சவுண்ட் ஸ்பீக்கர். அதில், எவன்டி உன்ன பெத்தான்? வேறு! வாழ்க சுதந்திரம்.
இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் ப்ளீஸ்! ஒரு SMS/e mail/ அட பதில் சொல்லுங்கப்பா!

Wednesday, June 20, 2012


விழி திறக்க இயலாத
விடிகாலைக் கனவொன்றில்
யாரோ கேட்கிறார்கள்- நீங்கள்
சோகமாக இருக்கின்றீர்களா என்று!

உறக்கத்திலும் கூட மறக்காமல்
உதடுகள் இல்லை என்கின்றன,
உள்ளம் ஆமாம் என்கையில்!

வலியுடன் திறக்கின்றன இமைகள்!
வலியச் சிரிப்புடன் இதழ்கள்!
காலை விடிகின்றது!

Saturday, June 16, 2012

To attend my promotion interview.........................................

Wednesday, June 6, 2012

My Life- An introspection


I WANT TO QUIT! இந்தக் குரலை எப்பொழுதேனும் உங்களுக்குள் கேட்டதுண்டா? நான் விலகிக்கொள்ள விரும்புகிறேன் அல்லது நான் விடுவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனப் பொருள் படும் இந்த நான்கு வார்த்தைகள் கொண்ட ஆங்கில சொற்றொடர் எப்பொழுதேனும் உங்கள் உள்ளத்துக்குள் ஓடக் கண்டதுண்டா? சில ஆண்டுகளாகவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும், அதுவும் என் குரலிலேயே!

எதில் இருந்து? என்ற கேள்விக்கு மட்டும் ஏராளமான பதில்கள். இதுதான் பதிலா? என்ற ஏராளமான கேள்விகள்.

வாழ்க்கையில் இருந்தா? வாய்ப்ப்பே இல்லை! எனக்கு இந்த வாழ்க்கையை நிறைய பிடித்திருக்கிறது, சில பிடிக்காத தருணங்களைக் கொண்டிருந்தாலும். எனக்கு அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, நட்புடன் சில சகோதரர்கள், சகோதரத்துவத்துடன் சில நண்பர்கள், கவிதை, இசை, வெப்பம்,  குளிர், மலை, மழை, காற்று, கடல், நதி அப்புறம் சச்சின் என எல்லாவற்றையும் பிடித்திருக்கிறது. கடும் துன்ப வேளைகள் என நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதுகளில், உயிர் மழை போல், தென்றல் போல், சட்டென இருள் விலக்கும் அகல் விளக்கு போல் தோன்றும் சில தீர்வுகளை, தெளிவை, துணிவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மன அழுத்தத்தின் உச்சத்தில், இந்தக் குரல் எழும் வேளையில் எல்லாம், இந்த இரவோடு எல்லாம் முடிந்து போனால், நாளைய விடியல் இல்லாமல் போனால் என்று தோன்றினாலும், ஐயோ! எனக்கு நாளைய அழகான விடியல் வேண்டுமே என்ற ஆசையான குரல், முதல் குரலை அழுத்தி மறைத்து விடும் அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. என் வாழ்க்கை, என் ப்ரச்சனை என்று யோசிக்கிறேனே, உண்மையாகவே, இது மட்டும் தான் வாழ்க்கையா? இந்த ப்ரச்சனை நிரந்தரமானதா? பின்னொரு பொழுதில் என் ப்ரச்சனைகள் ஒன்றுமில்லாமலே போகலாம், ஆனால் என் வாழ்க்கை முடிந்து போனால், யார் வந்தும் உயிர் தர வாய்ப்பில்லையே!. இந்த சாகரத்தில், நான் துளி தான். என் பாட்டன், பூட்டன் கடந்து வராத துயரங்களை நான் எதிர்கொள்ள வில்லை. என் தந்தையும் தாயும் அனுபவிக்காத ப்ரச்சனைகளை நான் எதிர்கொள்ளவில்லை. இதுவும் கடந்து போகும் எனப் புரிகிறது.

நான் இந்த வாழ்க்கையை அதிகம் நேசிக்கிறேன். நேசிப்பதிலும், நேசிக்கப்படுவதிலும் இருக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் என் இந்த நிமிட வாழ்க்கை வரை புரிந்து உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கை தந்த அடிகள் சற்று அதிகம் போல் தோன்றினாலும், நான் கடந்து போகும் உலகத்தில், காண்பவர்களை உற்று கவனித்தால், என் அடிகளும், வலிகளும் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. பிறப்பிலேயே ஊனமுற்றவர்களாகவும், பிறப்பால் ஊனமுற்றவர்களும், விபத்தால் அங்கங்களை இழந்தவர்களும் என்னைக் கடக்கையில், என்னை முழுமையாய் படைத்த, எல்லாவற்றையும் உணரும் பாக்கியம் தந்த அந்த எல்லாம் வல்ல இறைவனை, இயற்கையை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

குடும்பம் இல்லாதவர்களையும், குடும்பத்தால் கை விடப்பட்டவர்களையும், குடும்பத்தைத் தொலைத்தவர்களையும், இந்த மக்கட் பெருங்கடலில், குடும்பத்தால் தொலைக்கப்பட்டவர்களையும் காண்கையில், அழகான என் குடும்பத்தை அன்புடன், நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அடுத்த வேளை உணவுக்கு வக்கற்று கையேந்துபவர்களையும், குழந்தைகளை வித்தை காட்டுபவர்களாகவும், பிச்சை பாத்திரங்களாகவும், பணம் சம்பாதிக்கும் கருவியாகவும் பயன்படுத்துபவர்களையும், குப்பைத் தொட்டிகளில் எச்சில் காகிதங்கள் தேடுபவர்களையும் பார்க்கையில் என் எல்லா உணவு வேளை ப்ரார்த்தனைகளின் போதும் வேண்டும் கடவுளே! இந்த வேளை எனக்கு உணவு தந்ததுக்கு நன்றி என்று வேண்டுதலோடு, என்னைச் சுற்றிய இந்த உலகத்திற்கும், மூன்று வேளை உணவைத் தா என்ற வேண்டுகோளும் சேர்ந்து கொள்கிறது.

மனநிலை பிறழ்ந்தவர்களையும், தன்னை மறந்த நிலையில் போதையில் விழுந்து கிடப்பவர்களையும், மனம் நினைப்பதை மூளை அங்கீகரிக்கும் முன், தவறுகள் இழைத்துவிட்டு, சிறைக் கதவுகளின் பின்னால், வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் பரிதாபத்துக்குரியவர்களையும் பார்க்கையில், “ என்னை நன்றாய் வைத்தாய் இறைவா?” என்று தோன்றுகிறது.

இவ்வாறான தருணங்களில், எனக்குள் எழும் “ என்னை நன்றாய் வைத்தாய் இறைவா!” என்ற நன்றிக்குரிய அந்த மந்திர வார்த்தைகளை நான் உளமாற உருகித் தான் உச்சரித்திருக்கிறேன். இதை பல சமயங்களில் என் அம்மாவிடம்  நான் சொல்லியும் இருக்கிறேன். இவ்வாறாக இருக்கையில் வாழ்க்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை, அதற்கான தருணம் வரும் வரை.

பிறகு எதில் இருந்து?
உறவுகளில் இருந்தா?
உத்யோகத்தில் இருந்தா?
இன்னும் சில “ இருந்தா?”க்கள் தொடர்கின்றன. நாளை பார்க்கலாம்.

பயணங்கள் முடிவதில்லை!